வெள்ளி, 3 ஜூலை, 2015

சேர சோழ பாண்டியருக்கும் முன்பிருந்த தாம்ரபரணி நாடு இலங்கையின் வடமேற்கு ... மௌரிய பேரரசு...

தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி என்கிற இரும்புக்காலப் பண்பாட்டு குடியிருப்பு உருவாகி நாளடைவில் அது ஒரு பெருநகரமாக வளர்ந்தது. அதன் ITAI இடத்தில் தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது(பக்: 126, 127).
அசோகர் தனது இறுதிக்காலத்தில் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். இறுதிக்காலத்தில் அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்ட அவரது அமைச்சர்கள் அசோகர் விரும்பியதைச் செய்யவிடாமல் தடுத்துவிட்டார்கள். கடைசிக்காலத்தில் அவர் மணம் செய்துகொண்ட புதிய பட்டத்து இராணியும், புத்தமத எதிர்ப்பாளர்களும் ஒன்றிணைந்து பட்டத்து இளவரசன் குணாலனை தட்சசீலத்துக்கு அனுப்பிவிடுகின்றனர். அதன்பின் அரசபதவிக்கு முயன்ற குணாலனின் முயற்சிகள் தோல்வியடைந்தன. அப்போராட்டத்தில் அவர் தன் கண்பார்வையை இழந்தார். கண்பார்வையின் இழப்புக்குக் காரணமான, புதிய பட்டத்து இராணி கொல்லப்படுகிறார். அசோகருக்குப்பின் குணாலனின் மகன் இளவயது சாம்பிராட்டி அரசராக நியமிக்கப்பட்டு தசரதா என்பவர் அவரது பாதுகாவலனாக நியமிக்கப்படுகிறார்.
அசோகர் இறந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த பதவிக்கான இரண்டாவது போட்டியில், சாம்பிராட்டி பாடலிபுத்ராவிலிருந்து விரட்டப் படுகிறார். அசோகர் இறந்து 10 ஆண்டு கழிவதற்குள், அவரது பிரமாண்டமான பேரரசு நான்கைந்து துண்டுகளாக ஆக்கப்பட்டு அவரது மகன்கள், பேரன்களால் ஆளப்படும் சிறுசிறு நாடுகளாக ஆகிவிடுகின்றன. சாதவ கன்னர் அரசு போன்ற பல பகுதிகள் பேரரசிலிருந்து பிரிந்துபோய் விடுகின்றன.
 அசோகருக்குப்பின் வந்த மௌரியப் பேரரசின் மன்னர்களின் பெயர்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன. கடைசி மன்னனுக்கு முந்தைய மன்னன் சட்டதன்வன் என்பவன் ஆவான். இவன் ஆட்சி மகதப்பகுதியோடு நின்றுவிடுகிறது. இறுதி மன்னன் பிரிகத்ரதா என்பவன் ஆவான். இவன் தனது பிராமணத் தளபதி புஷ்யமித்ரா என்பவனால் சுமார் கி.மு. 183 வாக்கில் கொல்லப்படுகிறான். அத்துடன் மௌரிய வம்சம் முடிந்துவிடுகிறது. அசோகர் இறந்தபின் 50 ஆண்டுகளில் அவரது மௌரிய வம்சம் முடிந்துவிடுகிறது. அதன் பின் புஷ்யமித்ராவின் சுங்க வம்சம் ஆட்சிக்கு வருகிறது. இத்தரவுகள் சார்ல்ஸ் ஆலன் எழுதிய பேரரசன் அசோகன்-மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு, 2014(பக்: 467-471), என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
தாம்ரபர்னி நாடு:
 சார்ல்ஸ் ஆலன் எழுதிய நூலின்படி, அசோகனின் 2ஆவது மலைக் கல்வெட்டு, ‘சோழர்கள், பாண்டியர்கள், சத்தியப் புத்திரர்கள், கேரளா புத்திரர்கள் போன்ற மக்களும், தாமிரபரணிப் பகுதியும்’ என்று குறிப்பிடுகிறது(பக்: 477). அசோகனின் 13ஆவது மலைக் கல்வெட்டு ‘சோழர்கள், பாண்டியர்கள் மேலும் தாமிரபரணி நதி வரையுள்ள நாடுகள்’ என்று குறிப்பிடுகிறது(பக்: 485). இலங்கை பற்றிய குறிப்புகள் இக்கல்வெட்டு களில் இல்லை. வின்சென்ட் சுமித் அவர்கள் நூலில் உள்ள அசோகனின் கல்வெட்டு வாசகங்களும் இலங்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பாலி மொழியில் தம்பப்பன்னி() என்கிற சொல் தொன்மைக்காலத்தில் இலங்கைத்தீவின் பெயராக இருந்தது என ‘தீபவம்சா’ என்கிற நூலில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இக்கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். கிர்னார் கல்வெட்டு எழுதப்பட்ட கி.மு. 256 ஆம் ஆண்டில் இரண்டு பாண்டிய அரசுகள் இருந்திருக்கவேண்டும் என்கிறார் அவர். தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களை வெளியிட்ட மதுரைப் பாண்டியர்கள் வலுவுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும் எனவும், தாம்ரபர்னி ஆற்றில் கிடைத்த நாணயங்களில், சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் காணப்படும் கோட்டு வடிவுடைய மீன் சின்னம் காணப்படவில்லை எனவும் கூறுகிறார் அவர்.
 தாமிரபரணி ஆறு பாயும் தென் பகுதியும், இலங்கையின் வட பகுதியும் சேர்ந்து கொற்கைப் பாண்டியர்களின் ‘தாம்ரபர்னி’ நாடாக இருந்திருக்க வேண்டும் எனவும், இந்தத் தாம்ரபர்னி நாட்டைத்தான் அசோகன் தனது கல்வெட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கருதுகிறார்.(‘செழிய, செழியன் நாணயங்கள்’ – இரா. கிருஷ்ணமூர்த்தி, ஏப்ரல் 2014, பக்: 116-130). வின்சென்ட் சுமித் அவர்களின் கருத்துப்படியும், சார்ல்ஸ் ஆலன் அவர்கள் நூலில் உள்ள அசோகரின் 2ஆம், 13ஆம் மலைக்கல்வெட்டுகளில் உள்ள வாசகங்களின் படியும் அசோகர் தனது கல்வெட்டில் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூலின்படி கொற்கைப் பாண்டியர்களின் நாடு தான் அசோகன் குறிப்பிட்ட ‘தாம்ரபர்னி’ நாடாகும். அசோகர் தனது கல்வெட்டில் தாமிரபரணி நதி வரையிலுள்ள நாடுகள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பற்றிக் குறிப்பிடவில்லை.
தம்பப்பண்ணி (இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, பக்: 108-127)
 தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில், தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி என்கிற இரும்புக்காலப் பண்பாட்டு குடியிருப்பு உருவாகி நாளடைவில் அது ஒரு பெருநகரமாக வளர்ந்தது. அதன் ITAI இடத்தில் தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது(பக்: 126, 127).
 அதன்பின் எழுச்சி பெற்ற அநுராதபுர நகரம், கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக ஆகியது. பாலி நூல்களின் மரபுக் கதைகளின்படி அநுராதபுரம் எழுச்சி பெறுவதற்குமுன் தம்பப்பண்ணி, ஒரு துறைமுக நகராகவும் ஒரு ஆட்சிபீடமாகவும் இருந்துள்ளது(பக்: 121). இந்தத் தம்பப்பண்ணியின் சமற்கிருதப் பெயர் தாம்ரபர்ணி ஆகும்(பக்: 121). ஆகவே தமிழகத்தில் உள்ள(இலங்கையின் எதிர்க்கரையில் அமைந்துள்ள) தாமிரபரணி ஆற்றின் பெயரால் தான் இந்நருக்கு இப்பெயர் வந்தது. ஆகவே அன்று தம்பப்பண்ணி நகரம் என்பது தமிழர்களின் நகராகவும், பாண்டியக் கிளை அரசர்களின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்தது. இவை இந்திரபாலா அவர்கள் தரும் தகவல்கள் ஆகும். சேர, சோழ, பாண்டிய அரச வம்சங்கள் ஒவ்வொன்றும் ஒரு வேந்தனாலும் பல கிளை அரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன என்பதை நாம் அறிந்துள்ளோம். அதன்படி மதுரை, கொற்கை, தம்பப்பண்ணி, மோகூர், ஒல்லையூர் போன்ற பல நகர்மையப் பகுதிகளை பாண்டிய அரசர்கள் ஆண்டு வந்தனர் எனலாம். அசோகன் தனது கல்வெட்டில் குறிப்பிட்டது தாமிரபரணி நதி வரையிலுள்ள தமிழக நாடுகளைத்தான் ஆகும். இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வது போல் கொற்கைப்பகுதியும், வடஇலங்கைப்பகுதியும் (ஈழம்) ஒன்றாக இருக்க வில்லை. அவை இரண்டும் தனித்தனிப் பாண்டியக் கிளை அரசர்களால் ஆளப்பட்டன.
 மதுரையைப் பாண்டியவேந்தன் ஆண்டான். பாண்டியக் கிளை அரசர்கள் முழு சுதந்திரத்தோடு பிறபகுதிகளை ஆண்டு வந்தனர். ஈழத்துப் பூதன் தேவனார் என்பவர் 7 சங்கப் பாடல்களைப் பாடியுள்ளார். அவை அகம்: 88, 231, 307; நற்றிணை: 189, 343, 360, 366 ஆகிய பாடல்களாகும். இவர் அகம் 231ஆம் பாடலில் 5ஆம் காலகட்டப் பசும்பூட் பாண்டியனைப் பாடியுள்ளார். ஆதலால் இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும். எனவே அன்றே வட இலங்கைப்பகுதி ஈழம் என்று சொல்லப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. அன்று ஈழம் என்பது வட இலங்கைப்பகுதியை மட்டும் குறிக்குமா அல்லது இலங்கை முழுவதையும் குறிக்குமா என்பது மேலும் ஆய்வு செய்யப்படவேண்டும். அதுபோன்றே ‘தாம்ரபர்னி’ என்பது எதனைக் குறித்தது என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இது வடமேற்கு இலங்கையில் இருந்த தம்பப்பண்ணி நகரைக் குறித்தது என்பது உறுதி. கங்கை முகத்துவாரத்தில் இருந்த தாமிரலிப்த நகர் போன்று இந்நகரும் தாமிரபரணி நதியின் பெயரில் இருந்து உருவாகிய பெயராகும். இலங்கை நூல்களை வைத்து மட்டும் இவை குறித்து முடிவு செய்வது தவறான புரிதலைத்தான் தரும். ஆகவே இவை குறித்து அறிய அகழாய்வுகள் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும். அத்துடன் இவை குறித்துப் பல கோணங்களில் விரிவான ஆழமான ஆய்வுகளும் தேவை.
- கணியன் பாலன், ஈரோடு  /keetru.com

கருத்துகள் இல்லை: