புதன், 5 ஆகஸ்ட், 2015

அப்துல் கலாமின் மலிவு ஸ்டேன் கண்டுபிடிப்பு கமிஷன் வியாபாரிகளால் முடக்கப்பட்டது?

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு, குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து, 'ஸ்டென்ட்' கருவியை கண்டுபிடித்தார். >எனினும், கமிஷன் ஆதாயத்திற்காக, தனியார் மருத்துவமனைகள் மட்டு மின்றி, அரசு மருத்துவ மனைகளிலும் இந்த கருவிகள் பயன்படுத்தப்படாததால், அவரின் கண்டுபிடிப்பு, ஏழைகளுக்கு பயனின்றி வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அறிவியல் துறையில் அதீத ஞானமுடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ராக்கெட் தொழில்நுட்பம் தவிர, வேறு பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, எடை குறைந்த செயற்கை கால்களை கண்டுபிடித்த கலாமின் சாதனை அளப்பரியது. தவிர, இதய நோயாளி களின் நலனுக்காக, குறைந்த விலையிலான ஸ்டென்ட்களை தயாரிக்க திட்டமிட்ட கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இருவரின் கூட்டு முயற்சியால், குறைந்த விலையிலான ஸ்டென்ட் வடிவமைக்கப்பட்டது. இதற்கு, 'கலாம் - ராஜு ஸ்டென்ட்' என, பெயரிடப்பட்டது.


இதய நோயாளிகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும், ஸ்டென்ட்கள் வெளிச்சந்தையில், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் 7,000 ரூபாய்க்கு, கலாம் - ராஜு ஸ்டென்ட் கிடைத்ததால், ஏழை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, கலாமின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும், இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டென்ட்களின் மூலம், அதை பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கமிஷன் தொகை அதிகம் கிடைக்கிறது.

டாக்டர்கள் தயக்கம்:

எனவே, விலை குறைந்த, தரமான, கலாம் - ராஜு ஸ்டென்ட்டை பரிந்துரைக்க டாக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தனியார் மருத்துவமனை மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளிலும், விலை உயர்ந்த ஸ்டென்ட்களே பயன்படுத்தப்படுகின்றன.ஏழைகளின் நலனுக்காக கலாம் கண்டுபிடித்த விலை குறைந்த ஸ்டென்ட்கள், சுயநலம் படைத்த சில டாக்டர்களால், மக்களுக்கு பயனற்று போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

'தன்னலம் பாராது, தன் கடைசி மூச்சு வரை நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமேதையின் கண்டுபிடிப்பை, சில சுயநலவாதிகள் இருட்டடிப்பு செய்வதைத் தடுக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன தினமலர்.com 

கருத்துகள் இல்லை: