புதன், 5 ஆகஸ்ட், 2015

கடத்திய தீவிரவாதியை மடக்கி பிடித்த மக்கள்! காஷ்மீரி கிராம மக்களை கடத்தியவனை சிறைபிடித்த மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலின் போது 3 கிராம மக்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து பிணையாளிகளை மீட்கவும் தீவிரவாதிகளைப் பிடிக்கவும் பாதுகாப்புப் படையினர் முடுக்கி விடப்பட்டனர்.

இந்நிலையில், பிணையாளிகளுடன் சென்ற தீவிரவாதக் கும்பல் அந்த மூன்று பேரையும் உஸ்மான் கானிடம் ஒப்படைத்து விட்டு வேறு பகுதிக்குப் போய் விட்டது. இதையடுத்து உஸ்மான் கான் துப்பாக்கி முனையில் 3 பேரையும் அழைத்துக் கொண்டு சென்றான். ஆனால் அந்தப் பகுதி அவனுக்கு பழக்கமில்லாதது என்பதாலும், அப்போது பசி எடுத்துள்ளதாலும் எங்கு போவது என்று தெரியாமல், பிணையாளிகளிடமே என்னை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுள்ளான்.

இதனால், உஷாரடைந்த பிணையக் கைதிகளும் அவனை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்திற்குப் போனதும் கீழே அமர்ந்து உஸ்மான் கான் சாப்பிடத் தொடங்கினான். இந்த நொடிக்காகவே காத்திருந்த பிணையாளிகள் மூன்று பேரும் சேர்ந்து உஸ்மான் கான் மீது பாய்ந்து அவனை அப்படியே கழுத்தைப் பிடித்து அமுக்கினர். சுதாரித்த உஸ்மான் கான், சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளான்.

அதற்குள் அவனிடம் இருந்த துப்பாக்கியை ஒருவர் தூக்கிக் கொண்டு தூரமாக ஓடிவிட்டார். அப்போது, என்னை போக விடுங்கள் என்று அவன் கெஞ்சத் தொடங்கி விட்டான். அதற்குள் சம்பவ இடத்தை நெருங்கிவிட்ட பாதுகாப்புப் படையினர் உஸ்மான் கானை மடக்கி் பிடித்து விட்டனர். அவனிடம் தற்போது பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: