மார்பால் "போலீஸைத் தாக்கிய" பெண்ணுக்குச் சிறை; பிரா அணிந்து ஆர்ப்பாட்டம்
ஹாங்காங்கில் மூத்த காவல்துறை
அதிகாரியொருவரை தனது "மார்கங்களால் தாக்கிய" குற்றச்சாட்டில் பெண்
ஒருவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டஜன்
கணக்கான ஆண்களும், பெண்களும் மார்புக் கச்சை, அதாவது பிரா (Bra) அணிந்து
அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைக் காவல்துறை அதிகாரியான
சான் காஃபோ என்பவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தனது
மார்பகங்களைத் தொட்டார் என்று நிங் லாய் இங் என்னும் முப்பது வயதுடைய பெண்
குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் நீதிமன்றமோ அந்தப் பெண்ணுக்கு
எதிராக தீர்ப்பளித்திருக்கிறது. அந்தப்பெண் இந்த காவல்துறை அதிகாரி மீது
வேண்டுமென்றே தனது மார்பகங்களைக் கொண்டுபோய் திணித்தார் என்றும், அந்த
காவல்துறை அதிகாரி தன்னைத்தாக்கினார் என்று குற்றம் சாட்டும் நோக்கத்துடன்
அவர் இவ்வாறு செய்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்காக அவருக்கு மூன்று மாதம் 15 நாட்கள் சிறைத்தண்டனையையும் நீதிமன்றம் விதித்திருக்கிறது.
இதை
எதிர்த்து “மார்பக நடைபயணம்” என்கிற பெயரில் ஆர்ப்பாட்டம் ஒன்று வான்
சாயில் இருக்கும் ஹாங்காங் காவல்துறைத் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக
நடந்தது. இதில் கலந்துகொண்ட சுமார் இருநூறுபேருக்கும் அதிகமானவர்கள்
வெளியில் தெரியும்படி பிரா அணிந்தபடியும், அதனைக் கையில் வைத்திருந்தவாறும்
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆண்களும் பிரா அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள், மார்பகங்கள் ஆயுதங்கள் அல்ல என்று கோஷமெழுப்பினர்.
இந்தத் தீர்ப்பைவிட மார்பகங்கள் ஒன்றும் அவ்வளவு அசிங்கமாக இல்லை என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
சீனர்கள்
ஹாங்காங்கிற்கு வந்து தரமான பொருட்களை மலிவான விலைக்கு வாங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து யென் லாங்க் பகுதியில் நடந்த ஆர்ப்பட்டத்தில் சிறைத்
தண்டனை வழங்கப்பட்ட நிங் லாய் இங் கலந்துக்கொண்டிருந்தார்.
இப்படி சீனர்கள் ஹாங்காங் பிரதேசங்களுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வதற்கு ஹாங்காங்கில் நீண்டகாலமாக எதிர்ப்பு நிலவிவருகிறது. சீனர்கள் ஹாங்காங் வந்து என்ன வாங்குகிறார்கள்?
காவல்துறையினருடனான
மோதலின்போது, காவல்துறைத் தலைமை அதிகாரியான சான், தனது கைப்பையை பறிக்க
முற்பட்டார் என்றும், ஆனால் அவரது கை தனது மார்பகங்களில் பட்டதாகவும் நிங்
லாய் இங் குற்றம் சாட்டியிருந்தார். இதன் மூலம் இந்த காவல்துறை அதிகாரி
தன்னை நாகரீகமற்ற முறையில் தாக்கினார் என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால்
அந்த காவல்துறை அதிகாரியோ, இந்தப் பெண் தன்னை தாக்குதவதற்காக தனது
மார்பகங்களை பயன்படுத்தினார் என்று நேர் எதிரான குற்றச்சாட்டை
அப்பெண்ணுக்கு எதிராக முன்வைத்திருந்தார்.
இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த தீர்ப்பு பரவலான விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது
இந்த விவகாரம் நீதிமன்றம்
சென்றதையடுத்து, வழக்கை ஆராய்ந்த டியூன்மென் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
மைக்கேல் சான் பிக்கு, காவல்துறை அதிகாரியின் நற்பெயருக்கு களங்கம்
ஏற்படுத்த இந்தப் பெண் முயல்கிறார் என்று கூறிதோடு, அந்த பெண் குற்றவாளி
எனவும் தீர்ப்பளித்தார்.
பெண் என்கிற தனது அடையாளத்தைப் பயன்படுத்தி
அந்த காவல் அதிகாரி தன்னை மானபங்கம் செய்துவிட்டார் என்று
பொய்க்குற்றச்சாட்டை சுமத்த இவர் முயன்றார் என்று நீதிபதி
தெரிவித்திருந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற பத்திரிக்கை
தெரிவித்திருக்கிறது.
இந்தப்பெண் தண்டிக்கப்படாவிடில்,
ஆர்ப்பாட்டங்களின்போது காவல்துறையினரை தாக்குவது என்பது சின்ன விஷயம் என்ற
தவறான கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும் என்றும் கடந்த வியாழக்கிழமை
தீர்ப்பு வழங்கப்பட்டபோது, காவல்துறை அதிகாரியான சான் தெரிவித்திருந்தார்.
இந்தத்
தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, தனக்கும் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டதாக இவ்வழக்க விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
நிங்
லாய் இங்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு, அபத்தமானது என அவருக்கு
ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி மீது புகார் கொடுத்த பெண்ணையே
நீதிமன்றம் தண்டித்தது தவறு என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் வாதம்
இந்த தீர்ப்பு “அபத்தமானது”
என்று அவர்கள் கூறினர். “இந்த தீர்ப்பு எவ்வளவு பெரிய அபத்தமான ஒன்று
என்பதை உலகிற்கு சொல்வதற்காகத்தான், பிரா அணியும் இப்படியானதொரு
விசித்திரமான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டதாக", இதில் பங்கேற்ற
ஓய்வுபெற்ற ஆசிரியரான ஜேம்ஸ் ஹான் குறிப்பிட்டார்.
"இந்த தீர்ப்பு
மிகவும் அபத்தமானது. மார்பகங்கள் எப்படி ஆயுதமாக முடியும்" என்று
இத்தீர்ப்பை எதிர்க்கும் ஆர்வலரான நிங் சுக் லிங் கேள்வியெழுப்பினார்.
"பெண்கள் அரசியல் எதிர்ப்புக்களில் ஈடுபடுவதை இது தடுக்கும்" என்ற அச்சம்
தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு பெண்
ஆர்ப்பாட்டக்காரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டலை
காவல்துறையினர் ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த
ஆர்ப்பட்டத்தில் கலந்துக்கொண்ட மற்றுமொருவர் கூறும்போது, ஒரு ஆண் என்ற
வகையில், நான் பிரா அணிந்திருப்பது அவலட்சணமாக இருக்கலாம். ஆனால் இது
நீதிமன்றத் தீர்ப்பை விட அவலட்சணமானதல்ல. இது மானைக் காட்டி குதிரை என்று
கூறுவது போல் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆர்பாட்டம்
சட்டவிரோதமானது என்று தெரிவித்திருக்கும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்
பத்திரிக்கை, இருந்தாலும் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தமது மனுவை
கையளித்துவிட்டுக் கலைந்து சென்றனர் என்றும் தெரிவித்துள்ளது.bbc.com/tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக