புதன், 22 ஜூலை, 2015

ஏழைகளின் பழம் வாழைப்பழம்

banana-market-கரத்து வாழ்வின் பல சிக்கல்களில் ஒன்று இந்த மலச்சிக்கல். இந்த சிக்கலை கடந்து போக நாளிதழ் படிப்பதில் ஆரம்பித்து வரவு செலவு கணக்கு பார்ப்பதோடு கதை கவிதை என படைப்பு அவஸ்தைகளும் சங்கமிக்கும் திருத்தலமாகவும் கழிப்பறை இருக்கிறது. குனிந்து நிமிர்ந்து ஆடி ஓடி வேலை செய்யும் பழக்கம் மறைந்து விட்டதால் காலைக் கடனே நேரம் பிடிக்கும் பெருங்கடனாக மாறிவிட்டது.
இந்த அவஸ்தையை தீர்ந்து வைக்கும் பெரும் பங்கு வாழைப்பழத்துக்கு உண்டு. மற்ற பழங்களை விட விலை குறைவாக இருப்பதால் ஏழைப் பழம் வாழைப்பழம் என்பார்கள்.
மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம், இதை பயிரிட எந்த கால‌நிலையும் ஏற்றது, சீசனுக்கு மட்டும் இல்லாமல் எல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் என்பதுமாய் பல சிறப்புக்கள் அடங்கியது வாழைப்பழம். பழக்கடைகள் மட்டும் இல்லாது பெட்டிக்கடை முதல் டீக்கடை வரை வாழைப் பழத்துக்கு இடமுண்டு.

இப்படியான சிறப்பு மிகு பழத்தைக் கொண்டு பலரது வயிற்றுச் சிக்கலை போக்கும் வாழை பழ சிறு வியாபாரி ஆறுமுகம் ஒரு ஆறு மாதங்களாக பழக்கம். தள்ளுவண்டியில் வாழப்பழத்தை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று இடங்களில் நின்று வியாபாரம் பார்ப்பார்.
பொழுது சாய்ந்த ஒரு மாலை நேரத்தில் குழந்தையுடன் நேரத்தை போக்க வந்த நானும் வியாபாரத்துக்கு கடைவிரித்த ஆறுமுகமும் ஒரு பூங்கா வாசலில் பேசிக் கொள்ள சற்று நேரம் கிடைத்தது.
“சென்னைக்கு வந்து 20 வருசமாச்சு. 20 வயசுல வீட்ட விட்டு பொழப்பு தேடி வந்தேன். இப்ப 40 வயசாச்சு. ரெண்டு பிள்ளைக்கி தகப்பனாயிட்டேன். ரெண்டு மூணு வருசத்துக்குள்ள ஊரோட போயி விவசாயத்த பாத்துட்டு இருக்கனுன்னு நெனச்சுட்டு இருக்கேன். அந்த ஆண்டவன் என்ன முடிவு எடுத்துருக்கானோ தெரியல.”
“உங்களுக்கு சொந்த ஊரு எது?”
“விழுப்புரமுங்க. சின்ன வயசுலேயே அப்பா எறந்துட்டாரு. நாங்க மூணு பேரு அண்ணந்தம்பி. நாந்தான் கடைசி பையன். எங்களுக்கு சொந்தமா பத்து ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் படுத்துப் போச்சுங்க. வாங்குன கடனை அடைக்க முடியல. அடுத்தடுத்து கைப்பணம் போட்டு விவசாயம் பாக்க முடியல. பொழப்புக்கு வேற வேலை தேட வேண்டியதா போச்சு. அண்ணனுங்களுக்கு கல்யாணம் குழந்தைங்கன்னு ஆனதால ஊரோடவே இருந்துட்டாங்க, நான் இங்க வந்துட்டேன்.”
“என்ன விவசாயம் செஞ்சிங்க.?”
“அஞ்சு ஏக்கர் தரிசு நிலமுங்க. தண்ணிக்கி வழி இல்லாததால அதுல எதுவும் பயிர் போட முடியாது. அதனால சவுக்கு போட்டுருந்தோம். மீதி இருந்த அஞ்சு ஏக்கர்ல வாழை விவசாயம் வச்சோம். வாழை அடி முதல் நுனி வரைக்கும் அத்தனையும் பணம்தான். ஆனா வாழை வாழ வச்சாலும் வைக்கும், சில நேரம் சாச்சிடிச்சுன்னா எழுந்துருக்கவே முடியாது. அப்படி ஒரு கண்டந்தான் எங்கள சுத்தி அடிச்சுது.”
“அஞ்சு ஏக்கர் வாழையும் வாலிப வயசு பசங்களாட்டம் அப்படி ஒரு மினுமினுப்போட வளந்து நின்னுச்சு. பூவும் பிஞ்சுமா குலைகளோட நின்னத பாத்தா நம்ம தோட்டம்னாலும் நமக்கு பொறாமை வர்றாப் போல இருந்துச்சுங்க. அண்ணந்தம்பி தலை நிமுந்து நின்னோமுங்க. வாங்கன கடனை அடைச்சுட்டு வீட்ட சரி பன்னிடனுமுன்னு  கனவு கண்டுட்டு இருந்தோம். ஒரு மணி நேரத்துல அத்தனை மரத்தையும் வேறோட சாச்சுபுடிச்சு சூறாவளி காத்தும் மழையும்.”
“இன்னும் கொஞ்சம் பெருக்கட்டும் தாங்கி பிடிக்க முட்டு குடுத்து மரம் கட்டலாமுன்னு இருந்தோம். கண்ண புடுங்குறாப்போல அத்தனையும் புடிங்கிட்டு போச்சு பாழாப்போன காத்து. அப்ப கரண்டு கெடையாது. ஆயில் மோட்டார் போட்டு கெணத்து தண்ணி எறச்சு குடும்பமே பாடுபட்டோம். அத்தனையும் வெழலுக்கு எறச்ச நீரா போச்சு. வாழை படுத்தால் வாழ்க்கையே படுத்துருன்னுவாங்க. அப்ப வந்ததுதாங்க நான் சென்னைக்கு. இருவது வருசமாச்சு.
“நெலத்த என்ன செஞ்சிங்க?”
“விவசாயம் பண்ணி ஒண்ணும் முன்னுக்கு வர முடியலிங்க. நாலு வருசம் போல எதுவுமே பயிர் பண்ணலை. கையிலருந்து முதல் போட முடியல. விவசாயம் மட்டும் பண்ணினா வாயிக்கும் கையிக்கும் இழுத்துக்க பறிச்சுக்கன்னுதான் இருக்கும். அவங்க அவங்க முடிஞ்சத செஞ்சு பொழச்சுக்குங்கன்னு நிலத்த மூணு பேருக்கும் எங்க அம்மா பிரிச்சு கொடுத்துட்டாங்க.”
“அண்ணனுங்க அவங்க பங்கு நிலத்த பயிர் செய்றதுக்கு பெரும் பாடு பட்றாங்க. பிள்ளையோட படிப்பு, பொண்ணோட கல்யாணமுன்னு விவசாயம் பாத்து குடும்பத்த சமாளிக்க முடியல. என்னப் போல வெளிய வேலைக்கி போகவும் முடியாது, வயசாகி போச்சு. பிள்ள குட்டிங்கள வச்சுகிட்டு சிரமப்பட்றாங்க.”
“உங்க பங்கு நிலத்த நீங்க விவசாயம் செய்றதில்லையா?”
bannana 1“செஞ்சுகிட்டுதான் இருக்கேன். வெளியில ஏதாவது வேலைய பாத்து அந்த பணத்த விவசாயத்துல போட்டா பத்துரூவா காசு பாக்கலாம். நஷ்டம் வந்தாலும் சமாளிக்கலாம். விவசாயம் மட்டும் பாத்தா இன்னைய நெலமைக்கி சாப்பிட கூட முடியாதுங்க.”
“நான் இங்க பழ வியாவாரம் பாத்து அந்த வருமானத்தை முதலா போட்டு பயிர் செய்றதால இப்ப கொஞ்சம் விவசாயமும் நடக்குது. மேற்கொண்டு அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். சின்னதா மாடி வீடு ஒன்னு கட்டியிருக்கேன். ஆனா கல்யானம் ஆயி 18 வருசம் ஆகுது நான் இங்கேயும் எங்கூட்டுக்காரம்மா விழுப்புரத்துலயும் இருக்கோம். பயிரு வைக்கிற காலத்துல பத்துநா(ள்) சேந்தாப்போல இருந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டு வருவேன். மத்தத வீட்டம்மா பாத்துக்கும். மாசத்துக்கு ஒருக்க ஒருநா ரெண்டுநா போயி பாத்துட்டு வருவேன்.”
“குடும்பத்த சென்னைக்கி கூட்டிட்டு வந்துருக்கலாமே?”
“விடிய விடிய கதை கேட்டு சீதைக்கி ராமன் சித்தப்பங்கற கதையாருக்கு போங்க. ஏங்க நான் தள்ளுவண்டி பழ வியாவாரம் பாத்து அனுப்புற காச வச்சுதான் விவசாயம் கைய கடிக்காம நடக்குது. விவசாய குடும்பத்துல பொறந்துட்டு ஊற காலி பண்ணிட்டு வரமுடியுமா? சாதிக்கார பயலுக ஏளனமா பேச மாட்டாங்களா? அதுவும் தவிர நான் என்ன படிச்சு ஆபீசரு உத்தியாகமா பாக்குறேன். எனக்கு தெரிஞ்சது விவசாயம் அதுக்கு தோதுவா பத்துரூவா சம்பாரிச்சு ஊருல வாழ வழிபாக்கனுமே தவிர இங்குட்டு குடும்பத்தோட வந்து என்னத்த பண்ண?”
“வாழ்க்கைக்கு வசதி வாய்ப்ப தேடிக்கறதுக்கு சாதிக்காரங்க என்னங்க பேசப் போறாங்க?”
“கவுண்ட(ர்) சாதியில விவசாயம்தாங்க பரம்பர தொழிலு. இருக்கப்பட்டவங்க எப்புடி போனாலும் ஊரு ஏத்துக்கும். அதே போல ஒன்னுமே இல்லாதவங்களும் சாதிக்கு பயப்பட மாட்டாங்க அவங்களையும் ஊரு கண்டுக்காது. நம்மள மாதிரி இந்த பக்கமும் அந்த பக்கமும் போக முடியாம நடுப்பரி நிக்கிறவங்க கதிதான் அதோகதி. எல்லாத்தையும் அனுசரிச்சுதான் போக வேண்டியிருக்கு”
koyambedu“சென்னைக்கி வந்ததும் பழ வண்டி போட ஆம்பிச்சிட்டிங்களா?”
“வந்த ஒரு வருசத்துல ஏதேதோ கூலி வேலையெல்லாம் செஞ்சேன். பாத்த எந்த வேலையும் மனசுக்கு திருப்தியா இல்லை. என்ன செய்றதுன்னு ஒரே குழப்பம். ஒரு வழியா முடிவெடுத்தேன். நமக்கு நல்லா தெரிஞ்சது வாழை விவசாயம். அது சம்மந்தமான வேலையையே பாப்போன்னு வாழப்பழ வண்டி போட ஆரம்பிச்சேன். கோயம்பேடு போயி சரக்கெடுத்துட்டு வந்து சாயந்தரம் 4 மணிக்கி கடை போட்டேன்னா ராத்திரி 10, 11 ஆயிரும் முடியிரதுக்கு.”
(1994) எங்க நிலம் பாதிச்சப்பதான் என் சொந்தக்கார பய ஒருத்தன் விவசாயத்துல ரொம்பவே நொடிச்சு போய்டான். அதனால குடும்பத்துல ஒரே சலசலப்பு. அவரோட 15 வயசு புள்ள கோவிச்சுகிட்டு வீட்ட விட்டு ஓடி போய்ட்டான். தேடாத இடம் கிடையாது. நாலு வருசம் கழிச்சு ஒருநாள் கோயம்பேடுல அவனை பாத்தேன். ஒரு அடியாள் கும்பலுகிட்ட சிக்கி ரவுடியா இருந்தான்.”
“அது ஒரு பெரிய கதை பிறகு வீட்டுக்கு தெரிவிச்சு படாத பாடுபட்டு அவனை மீட்டெடுத்தோம். கையில கொஞ்சம் காசு வச்சுருந்தான். கோயம்பேட்லயே வாடகைக்கு கடை எடுத்து பழ வியாவாரம் செய்ய ஏற்பாடு செஞ்சேன். அவங்கூட சேந்து ஒத்தாசையா வேலை பாப்போன். அவங்க கடையில கொஞ்ச சரக்க மொத்தமா வாங்கி வச்சு விக்கிறதால எனக்கும் பெரிசா நஷ்டம் வராது. நம்ம கிட்ட பழம் வாங்குறவங்களுக்கு ரெண்டு பழம் சேத்துதான் தருவேன்.”
“எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா நிலத்த நம்பி விவசாயம்தான் தொழிலுன்னு இருக்கவங்களுக்கு இதுபோல ஒரு சரிவு வந்துச்சுன்னா எழுந்திரிக்க முடியாது. சின்னா பின்னமா போயிரனும். அதான் எம்மகனுங்கள எப்படியாவது படிக்க வச்சுபுடனுன்னு வைராக்கியமா இருக்கேன்.”
“பத்து ஏக்கர் நிலம், ஊருல மாடி வீடு வச்சுருக்க ஆளு மாதிரியே தெரியலையே உங்கள பாத்தா?
“குடிகார பய மாறி தெரியுதா? கண்ணு எந்த நேரத்துலயும் விஜயகாந்து போல இருக்கதால அப்படி தோணும். சின்ன வயசுல மரம் வெட்டுற தொழிலுக்கு போயிருந்தேன். வெட்டும் போது மரத்துண்டு கண்ணுல பாஞ்சுருச்சு அதான் எப்பயும் செவந்து போயி பாக்க அப்படி தெரியும். மணி கணக்கா நிக்க முடியாம எப்பையாவது ஒரு துண்டு பீடிய பத்த வைப்பேன் அது மட்டும்தான் என்னுகிட்ட இருக்குற கெட்ட பழக்கம்.”
“அது இல்லைங்க. எப்பையும் புயல் மழையில சிக்குனா மாதிரி ஒரு தோற்றத்தோட இருக்கீங்களே?”
“பத்து ஏக்கர் நிலம் இருந்தாலும் நான் பழ வண்டி காரந்தானே. கோட்டு சூட்டு போட்டுகிட்டோ, மினிஸ்டர் காட்டன் போட்டுகிட்டோ இருக்க முடியுமா? இருக்க எடத்துக்கு ஏத்தா மாறிதான்  நாம இருக்கனும். அதெல்லாம் போக மாடி வீடும் நெலமும் உழைச்சதால வந்தது. இப்படி இருக்கறதுதான் நமக்கு பெருமை. பகட்டு தேவையில்லை. என்னங்க நான் சொல்றது. சிரிக்கிறீங்க.”
“நீங்க ஏதோ கேக்கப் போயி நான் பாட்டுக்கு சொல்லிகிட்டு இருக்கேன். வாடிக்கையா பழம் வாங்குவிங்க தன்மையா பேசரிங்களேன்னு சொல்லிட்டேன். வெளியில யாரு காதுலையும் போட்டு வைக்காதீங்க. சும்மாவே போலீசுக்காரன் சீப்பு சீப்பா பழத்த எடுத்துட்டு போறான். அப்பறோம் நெலத்துல விளையிரதெல்லாம் கொண்டான்னு கேக்கப்போறான். நான் எங்குட்டு போறது” என்று முடித்துக் கொண்டார்.
ஆறுமுகம் அநேகமாய் விடுமுறை இல்லாமல் எல்லா நாட்களிலும் மாலை நேரங்களிலும் பழம் விற்பார். வாரம் ஒருமுறையாவது அவரிடம் பழம் வாங்குவேன். பழம் வாங்குவதாக இருந்தால் எந்தக்கடையிலும் இருபது ரூபாய்க்குத்தான் வாங்குவேன். இவரோ முப்பது ரூபாய்க்கு பழம் தருவார். சமயத்தில் மலைப்பழம், செவ்வாழை, சீசனின் வரும் மாம்பழம் எல்லாம் சேர்த்து தருவார். வேண்டாம் என்றால் குழந்தைக்கு இருக்கட்டும் என்பார். அதற்கு ரூபாய் கூட கொடுத்தால் வேண்டாம் என்பார்.
banana 3கோடை விடுமுறையில் ஒரு நாள் தலைவாரி நல்ல சொக்காய் போட்டு இருந்தார். என்னவென்று கேட்டால் வீட்டம்மா வருது, ஏன் முடிவெட்டலேன்னு திட்டும் என்று வெட்கத்துடன் சிரித்தார். பிறகு ஒரு நாள் மனைவிக்கு கிட்னியில் கல், மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்றார். அடுத்த நாள் காட்டியாச்சா என்றால் நேரமில்லை இன்று போவேன் என்றார்.
விடுமுறைக்கு வந்த அவரது மகன்கள் இருவரும் கிராமத்து வளர்ப்பு என்றாலும் அப்பாவின் பழ வண்டி வியாபாரத்துக்கு அவ்வளவாக உதவுவதில்லை. அவர்களை பூங்காவிற்கு அழைத்து போகிறேன் என்று அந்த அம்மாவிடம் கேட்ட போது அவர்கள் ஓடினால் பிடிக்க முடியாது என்று சிரித்துக் கொண்டே மறுத்தார்.
ஆறுமுகத்தின் வியாபார இடங்களில் இருக்கும் அனைத்து கடைக்காரர்களும் அவருக்கு பழக்கம். அவரிடம் பழம் வாங்கும் அனைவரும்  கூட நட்புடன் பேசுவார்கள்.
மலச்சிக்கலை மட்டுமல்ல, சமூக உறவுகளை சிக்கலாக்கும் மனச்சிக்கலையும் சேர்த்தே உருவாக்கியிருக்கிறது நகரம். அண்டை வீட்டின் சுக துக்கம் கூட அறியாமல் இரகசியமாக வாழும் நகரத்து மாந்தர்களுக்கு எப்போதும் அரவணைப்பு தரும் இந்த எளிய நாட்டுப்புற மக்களின் அரவணைப்பும் அதன் அருமையும் தெரியுமா?

–    சரசம்மா vinavu.com

கருத்துகள் இல்லை: