இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சி.செல்வராஜ் தன்னை வளர்த்த மின் வாரியம் நசிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும், அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு முழு பயன்பாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கிலும் வெளியிட்ட செய்திகளையும் புகார்களையும் நம்பகமற்ற நாளிதழ் செய்திகள் வெளியிட்டிருந்தன.
மேலும், அவரின் கற்பனை அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு பொது நல மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தீர விசாரிப்பதற்கு ஏற்ற மனுதானா என கண்டறிய முதல்கட்ட விசாரணையில் மட்டுமே அம்மனுவை வைத்திருக்கிறது.
மேற்கண்ட மனு மீது முதல் கட்ட விசாரணையே நிலுவையில் இருக்கும் நிலையில், அதில் கண்டுள்ள செய்திகள் முற்றிலும் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு தவறு நடந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது போல் சித்தரித்து, உண்மை எது, பொய் எது எனக் கூட அறியாமல் சொந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், வியாபார நோக்கிலும், உள்நோக்கத்தின் அடிப்படையிலும் அவதூறாக எழுதும் சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலும் திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.
மின்வாரியம் பல புதிய மின் திட்டங்களைத் தீவிரமாக செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது என்பதற்கு கடந்த 2011-12லிருந்து 2015 ஜூன் மாதம் வரையில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கீழ்க்கண்ட மின் திட்டங்களே சாட்சிகளாகும்.
மொத்தம் 5346.50 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நான்கு ஆண்டு காலத்திலும் இத்தகைய அளவிற்கு நிறுவுதிறன் அதிகரிப்பு தமிழக வரலாற்றிலேயே நடந்திராத ஒன்று. இது ஒரு மகத்தான சாதனை ஆகும்.
மேலும், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு எண்ணூர் சிறப்புப் பொருளாதார மின் திட்டம் (SEZ) (2x660 MW) டெண்டர் விதிமுறையை பின்பற்றி பாரத மிகு மின் நிறுவனத்திற்கு பணியாணை அளிக்கப்பட்டு அதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே, எண்ணூர் விரிவாக்க (1 x 660 MW) திட்டம் LANCO நிறுவனத்திற்கு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
உப்பூர்அனல் மின் திட்டத்திற்கான (2 X800 MW) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 09.09.2015 அன்று திறக்கப்பட உள்ளது. மேலும், வடசென்னை அனல் மின் திட்டத்திற்கான (நிலை III - 1X 800 MW) ஒப்பந்தப்புள்ளிகளும் விரைவில் கோரப்பட உள்ளது.
எனவே, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு மின்சாரம் வாங்குவதற்காக மாநில அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்குகிறார்கள் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி மூலமாகவும் மேலும் மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், மரபுசாரா எரிசக்தி மூலமாகவும், மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக பெறப்படும் மின்சாரம் மின் தேவையில் சுமார் 77 சதவீதம் ஆகும். மீதமுள்ள மின் தேவையில் சுமார் 17 சதவீதம், மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒப்பந்தப் புள்ளி மூலமாக நீண்டகால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர, குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 3 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விலை ஏறுமுக வரிசை விதியைப் பின்பற்றி குறைந்த விலையில் மின்சாரத்தை முதலில் பெற்று, படிப்படியாக ஏறுமுக வரிசையில் தேவை நிறைவடையும் வரை உயர்ந்த விலை மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து குறைந்த விலை ஆதாரங்களின் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகக் கொள்முதல் செய்த பிறகே, நிகர மின் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள நீண்ட கால மின் கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து சுமார் 3 சதவீத அளவிற்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த அதிக விலை மின்சாரம், தொடர்ந்து நிரந்தரமாக கொள்முதல் செய்யப்படுவதில்லை என்றாலும், மிக மிக அவசியமான காலகட்டங்களான பள்ளி/கல்லூரி மாணவர்களின் இரவு நேர படிப்பிற்காகவும், தேர்வு நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் மற்றும் தேவை ஏற்படும் நாட்கள் மற்றும் நேரங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.
இத்தகைய கொள்முதலானது மற்ற ஆதாரங்களிடமிருந்து முழுமையாக கொள்முதல் செய்யப்பட்ட பிறகே, தேவைக்கேற்ப இம்மின் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகின்றது. இம்மின்சாரத்தின் கொள்முதல் அளவு நாளுக்கு நாள், மணிக்கு மணி என்று மாறுபடும். தேவையான மின்சாரம் குறைந்த விலை ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் போது, இம் மின்உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் முதலில் நிறுத்தப்படுகிறது.
1992ஆம் ஆண்டில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் கொள்கையின் அடிப்படையில், 1996 முதல் 1999 வரை 7 தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இவற்றில் 3 மின் உற்பத்தியாளர்கள் LSHS என்ற கச்சா எண்ணையை எரிபொருளாகவும், ஒரு நிறுவனம் Naptha-வை எரிபொருளாகவும் பயன்படுத்துகிறது. கச்சா எண்ணையையும் Naptha-வையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி செலவில் ஒரு யூனிட்டிற்கு சுமார் 11 ரூபாய் எரி பொருளுக்காக செலவிடப்படுகிறது.
இந்த எரிபொருள் செலவு மொத்தமும் Ioc, BPCL போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்குத்தான் செலுத்தப்படுகிறது. யூனிட் ஒன்றிற்கு மீதமுள்ள சுமார் ரூ.1.50 மட்டும் அந்த மின் உற்பத்தியாளர்களுக்கு சென்றடைகிறது. நிலைக்கட்டணம் என்று அழைக்கப்படும் இந்த 1 ரூபாய் 50 காசு, அவர்களிடமிருந்து மின் கொள்முதல் செய்தாலும் செய்யாவிட்டாலும் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செலுத்தியே ஆக வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியாளர்களால் வெளிச்சந்தையிலிருந்து அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்து வந்த போதிலும் மின்வெட்டை 10 முதல் 12 மணி கால அளவு வரையில் அமல்படுத்தி வந்தனர். ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மின் விநியோகம் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு, தற்போது மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த மகத்தான சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாமல் மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாக ஒரு தவறான செய்தியை பரப்பி வருகின்றார்.
முந்தைய திமுக அரசானது 2006-2007முதல் 2010-2011 வரை 5 ஆண்டுகளில் 20,355 மில்லியன் யூனிட் மின்சாரத்தை GMR போன்ற 4 தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்தது. அதற்கான ஒப்பந்தங்களும் திமுக ஆட்சி காலத்தில்தான் போடப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில், மொத்தமாக 11,075 மில்லியன் யூனிட் (மார்ச் 2015 வரை) மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்தது. தற்சமயம் மேட்டூர், வடசென்னை மற்றும் வல்லூர் ஆகிய புதிய மின் திட்டங்கள் நிலையான செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக விலை மின்சாரம் தவிர்க்க முடியாத, மிக அவசிய காலங்களில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த உண்மை நிலையைக் கூட புரிந்துகொள்ளத் தவறியவர்கள் தவறான செய்தியை பரப்பி வருகின்றார்கள்.
காற்றாலை மின் பிரிவின் மூலம் 24,309 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்பிவரும் செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில் 2006-07 முதல் 2011-12 காலக் கட்டங்களில் காற்றாலை மின்சாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தொகை ரூ.12,931 கோடி.
காற்றாலை மின்சார உற்பத்திக்கான கணக்கு, அனுப்புகை கட்டணம், சேமிப்பு கட்டணம், குறுக்கு உதவித்தொகை கட்டணம் ஆகியவை மின்சார சட்டம் 2003, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்த ஒழுங்குமுறை விதிகள், உத்தரவுகள், மரபுசாரா மின்சார அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறையின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொது நல வழக்கில் கூறப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்தை கையாளுவதில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தொகைக்கான காலகட்டம் 2006-2007முதல் மற்றும் 2011-2012 வரையில் உள்ள கால கட்டமாகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், 2006-2007முதல் 2010-2011 வரையில் ஆட்சியிலிருந்தவர்கள் முந்தைய திமுகவே ஆகும். எனவே, இந்த புகாருக்கு பதில் அளிக்கப் பொறுப்பானவர்களே, புகார் கூறுவது விந்தையாக உள்ளது.
மத்திய மின்சார அமைப்பு (CEA) மின்னளவை துல்லியமாக கணக்கிடுவதற்காக, பழைய எலக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர்களை மாற்றி நிலையான மின்னணு மின் அளவி பொருத்துவதை வலியுறுத்தி வருகிறது.
இவ்வகையான புதிய மின் அளவியில் மின் திருட்டு போன்ற தவறுகளுக்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் புள்ளி விவரங்கள் சேமிக்கும் திறனும் அதிகம். அளவீடும் துல்லியமாகும். இந்த விதமான பலன்களை கருத்தில் கொண்டு பழைய எலக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர்களை விடுவித்துவிட்டு புதிய மீட்டர்கள் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
மேற்படி புதிய மீட்டர்களை கொள்முதல் செய்த வகையில் விடுவிக்கப்பட்ட பழைய மீட்டர்களின் மதிப்பு ரூ.89/-கோடி மட்டுமே. இதுவும் இந்த மீட்டர்களுக்கான தேய்மானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததாகும். இந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், வாரியத்தின் வருவாய் மாதம் ஒன்றுக்கு 20 சதவிகிதம் அளவு அதிகரித்துள்ளது. இதன் மூலம் மீட்டர் கொள்முதலுக்கான தொகை மின்கட்டண வசூலின் மூலம் ஆறு மாதங்களுக்குள்ளாகவே ஈடு செய்யப்பட்டுள்ளது.
புதிய மின் அளவிகளை ஒளிவுமறைவற்ற திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாகவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய மின் அளவிகளை விடுவித்து புதிய மின் அளவிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ.6000/- கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
முதல்வர் ஜெயலலிதா மின்சாரத் துறையில் செய்திருக்கும் அளப்பரிய சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி மற்றும் சில லெட்டர் பேடு அரசியல்வாதிகள் முற்றிலும் பொய்யான செய்திகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்  /tamil.thehindu.com