புதன், 8 ஜூலை, 2015

குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த பிளஸ்–2 மாணவி

 கோவையில் பரபரப்பு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் 16 வயதான பிளஸ்–2 மாணவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார். இருந்த போதிலும் திவ்யாவுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார்.

தோழிகளும் திவ்யா அழைத்த பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு திவ்யா மதுவிருந்து கொடுத்தார். பின்னர் திவ்யாவும் அவரது தோழிகளும் அங்கேயே பொழுதை கழித்தனர். தொடர்ந்து மாலையில் மீண்டும் மது அருந்தினர். தோழிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் மதுவாடை வெளியே தெரியாத அளவுக்கு அளவாக குடித்தனர். ஆனால் காதல் தோல்வியில் இருந்த திவ்யாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் திவ்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார்.

இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல திவ்யாவின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. அவரது தோழிகளில் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு போன் செய்து திவ்யாவின் ரகளை குறித்து விளக்கமாக கூறினார். இதைத் தொடர்ந்து அந்த மாணவர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்தார். அங்கு போதையில் இருந்த திவ்யாவை மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார். ஆனால் திவ்யாவோ அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்தார். இதையடுத்து தோழிகள் 3 பேரும் சேர்ந்து திவ்யாவை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினர். பின்னர் அந்த மாணவர் திவ்யாவை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக பீளமேட்டில் இருந்து குறுக்கு பாதையில் துடியலூர் நோக்கி சென்றார்.

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது திவ்யா போதையில் பாட்டுப் பாடியபடி ரகளை செய்து கொண்டே வந்துள்ளார். சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த திவ்யா ரோட்டில் தவறி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு திவ்யாவை எழுப்ப முயன்றார். அந்த மாணவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய திவ்யா போதையில் தகாத வார்த்தைகளால் வசை பாட தொடங்கினார். நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான்

அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார். பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். ஒருவரையும் விடாமல் வளைத்து வளைத்து திட்டிக்கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.

ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம் தெரியாமல் சகட்டுமேனிக்கு வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார். அவரிடம் போராடிய போலீசார் இனிவிட்டால் சரிப்படாது என்று கருதி அங்கு இருந்த டாக்ஸி ஒன்றில் திவ்யாவை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் போட்டனர். பின்னர் துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போதையை தெளிய வைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று அவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் திவ்யாவுக்கு அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் nakkheeran.in

கருத்துகள் இல்லை: