ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தங்கையின் கற்பை காக்க தந்தையை கொன்ற அக்கா? மதுவை ஒழிக்காமல் மடிகணினி கொடுத்து .......

பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. கலாச்சாரத்தில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.
செய்தித்தாள்களில் நாள்தோறும் தவ றாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.

நகரம், கிராமம் என்றில்லாமல் தொட ரும் இந்தக் கொடுஞ்செயல்கள், ஒன்று மறியாத பிஞ்சுக் குழந்தைகளைப் பலி யாக்கிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத இந்தக் குற்றங்களை செய்பவர்களின் மனம், எதனால் இப்படி மாறுகிறது? சமூ கத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டவர்களாக எப்படி இவர்கள் மாறிப் போகிறார்கள்? பால் உணர்வு பற்றிய புரிதல் இல்லாமல் இவர்கள் தடம் மாறிப் போகக் காரணம் என்ன? பெருகி வரும் குற்றங்களைப் பட்டியலிடுவதும், கவலை கொள்வதும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுபவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவிப் பணத்தைக் கொடுத்துவிட்டு அரசாங்கம் தன் கணக்கை முடித்துக் கொள்கிறது. எந்தெந்த சிக்கல்கள் உடனடியாகத் தீர்க் கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் பொதுவிதியாக இருக்கிறது.
நான் மறக்க நினைத்தாலும் என் கண் முன்னே என் சிந்தனையை இடைஞ்சல் செய்து நிற்கின்ற இச்செய்தியை நீங் களும் அறிந்திருக்கலாம். மயிலாடு துறை அருகே ஒரு பள்ளி மாணவி சிறைக்கு அனுப்பப்பட்டதன் பின்னணி யைப் படித்தபின், என் மனம் அந்த மாணவியையும் அவ்வாறு சிக்குண்டு இருக்கும் இளம் பெண்கள் பற்றியுமே சுற்றுகிறது.
மதுக் குடிக்கு அடிமையாகிப் போன அப்பனிடம் இருந்து பருவமடைந்த தன் இரண்டு மகள்களையும் காப்பாற்ற, அந்த மாணவியின் தாய் ஒவ்வொரு நாளும் போராடியிருக்கிறார். குடித்துவிட்டு வருகிற கணவனைத்தான் அவரால் கண்டிக்க முடிந்திருக்கிறது. தெருவில் இருக்கும் அரசு மதுக் கடையை அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்தத் தாயால் முடிந்ததெல்லாம் பகலும் இரவும் தன் மகள்களிடம் அவர்களின் அப்பனை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண் டதுதான்.
தொடர்ந்து வன்புணர்ச்சிக் கொடுமையை அனுபவித்து வந்த மூத்த மகள், யாரிடம் இதைப் பற்றி சொல்ல முடியும்? எந்த மன நிலையில் அவளால் பள்ளிக்குச் சென்று படித்திருக்க முடி யும்? தன் தந்தையிடம் இருந்து தங்கையையாவது காப்பாற்றிவிடலாம் என நினைத்தவள், ஒருநாள் நஞ்சு வாங்கி வந்து மதுவுடன் கலந்து வைத்து விட்டாள். அதனைக் குடித்த அப்பன் இறந்து போனான்.
அவளைத் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்த தந்தையின் கூட்டாளிகள் இருவரும் மீதியிருந்த மதுவைக் குடித்ததினால் இறந்து போனார்கள். வழக்கம் போலவே பெயரை மாற்றி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஒரு பெண் பிள்ளையாகப் பிறந்ததினா லேயே மனதையும், உடல் வதையை யும் அனுபவித்து வந்தவள் மூவரும் இறந்துபோன காரணத்துக்காக சிறையில் கிடக்கிறாள். இறந்துபோன குற்ற வாளிகள் மூவருக்கும்தான் அவளால் தண்டனை கொடுக்க முடிந்தது.
மதுவைக் கொடுத்து குடிகாரர்களாக ஆக்கி யவர்களைத் தண்டிக்க முடியவில்லை. கல்வி கற்று வாழ்க்கையை வாழவேண்டிய ஒரு குடிமகள், கொடுஞ்சிறையில் குற்றவாளியாகக் காலத்தைக் கழிக் கிறாள். இப்படி நாள்தோறும் நடக்கிற குற்றங்கள் ஒன்றா, இரண்டா? அந்தக் குடும்பத்தின் கதி என்ன? யாருக்காவது தெரியுமா? அது பற்றிய அக்கறை யாருக்குத் தேவை? மதுவின் விற்பனை எண்ணிக்கைக் கூட்டுத் தொகையைவிட பாதிப்புக்குள்ளாகும் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தை களின் எண்ணிக்கை, குடும்பங்களின் எண்ணிக்கைக் குறைவுதானே என நினைக்கிறார்களா?
புத்தகங்களையும், புத்தகப் பையை யும், மிதிவண்டிகளையும், மடிக்கணினி யையும் கொடுப்பவர்களுக்கு மதுவைக் கொடுப்பதால் ஏற்படும் சீரழிவுகளைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? என் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய வந்திருந்த ஏழைத் தாய் ஒருவரிடம் அவருக்கு உதவியாக வந்திருந்த மகளை, ‘ஏன் படிக்கிற பெண்ணை வேலைக்கு அழைத்து வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு இதையேதான் காரண மாகச் சொன்னார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை வேலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவும், கணவன் குடிகார னாக இருப்பதால் வீட்டில் விட்டுவிட்டு வர அச்சமாக இருப்பதாகவும் சொன்னபோது அதிர்ந்து போனேன்.
‘மதுக் கடைகளை மூடுங்கள். சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால், கடைகளை மூட முடியாது. முடிந்தால் மதுவின் கேடுகளைச் சொல்லி பரப்புரை செய்யுங்கள்’ என அந்தத் துறையைச் சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சட்டமன்றத்தில் வாய் கூசாமல் சொல்கிறார். அதற்கும் மேசை உடைகிற மாதிரி தட்டி அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலையைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை. வீட்டில் இருந்து வெளியில் புறப்படும் பெண், தான் அணிந்து கொள் ளும் ஆடை முதற்கொண்டு, தான் பயணிக்கும் வாகனம், பணிபுரியும் பணிக் கூடம் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டேதான் உயிரைக் கையில் பிடித் துக் கொண்டு வாழவேண்டியிருக்கிறது. ‘கண்காணிக்கும் கேமரா’ வைத்துவிட் டால் கடமை முடிந்துபோகும் என நினைக்கிறார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தருவதோடு காவல் துறையின் கடமை முடிந்துபோகிறது. பாலியல் குற்றங்களும், வன்முறைகளும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திக்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை.
இணையதளங்கள், வலைதளங்கள் எல்லாம் மனிதர்களைத் தனிமைப்படுத்தி யது. உறவுகளைக் கொன்றொழித்தது. பாலுறவு பற்றிய புரிதல்களைக் கற் றுக் கொடுக்காமலேயே, ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் கைப்பேசி, மடிக்கணினி கொடுக்கப்பட்டுவிட்டன. அதை வைத்து பொழுது விடிந்து உறங்கும் வரைக்கும் அதனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் பார்ப்பதை எல்லாம் அனுபவித்து விடத் துடிக்கிறார்கள். பெற்றோர்களுக் கும் அவர்களைக் கவனிக்க நேரம் இல்லை.
தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவி னர்கள், தெரிந்தவர்கள் என இவர் களால் மட்டுமா இந்தப் பாலியல் வன் முறை நிகழ்கிறது? ஆசானாக இருக்கிற ஆசிரியர்களின் மனதையும் நச்சாக்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிற செய்திகளால் பெற் றோர்களும், குழந்தைகளும் கதிகலங் கிப் போய்தான் நிற்கிறார்கள்.
பணவெறிப் பிடித்த தொலைக்காட்சி களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கு கவர்ச்சி உடை அணி வித்து, திரைப்பட நடிகர், நடிகைகள் செய்யும் அருவருப்பான அங்க அசைவுகளைக் கற்றுக் கொடுத்து ஆடவிட்டு, பாடவிட்டு மதிப்பெண்கள் அளித்து கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கொடுஞ்செயல்களை யார் தடுத்து நிறுத்துவது? தடுத்து நிறுத்த வேண்டிய நாமே பல் இளித்து கைத்தட்டிக் கொண்டிருக்கும்போது, பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்?
உறவுகளின் விழுமியங்களை, அதன் மதிப்பீடுகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். அவர் களுக்கு எல்லாருமே அங்கிள், ஆண்ட்டி தான். சித்தப்பா, பெரியப்பாவுக்கும், மாமன், மச்சானுக்கும் அவர்களுக்கு வேறுபாடு தெரிவதே இல்லை. முறைப் பெண்ணுக்கும், அக்காள், தங்கை உறவுமுறைக்கும் வேறுபாடு தெரியாமல் எல்லாருமே ‘கசின்கள்தான்!’
பணத்தாசை, பணவெறி அனைத்து மதிப்பீடுகளையும் உடைத்தெரிந்துவிட் டது. இதை அனைவரும் உணர்ந்து ஒன்றுசேர்ந்து முடிவெடுத்தால் சமு தாயம் தப்பிப் பிழைக்கும். அதுவரை நம் உயிராகப் போற்றுகிற கலாச்சாரங்கள் காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கும். என்ன செய்யலாம்?
- இன்னும் சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com  tamil.thehindu.com  

கருத்துகள் இல்லை: