ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை


டெல்லி பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், இறக்குமதி தொடர்பான முக்கிய கொள்கை ஆவணங்கள் களவாடப்பட்டு, பிரபல நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஊழல், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ஊழலில் முதலில் கடந்த 19-ந் தேதி பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ்நிலை ஊழியர்கள் 2 பேர், இடைத்தரகர்கள் 3 பேர் என 5 பேர் சிக்கினர். அஷாராம், ஈஸ்வர் சிங், லால்தா பிரசாத், ராகேஷ் குமார், ராஜ்குமார் சவுபே ஆகிய அந்த 5 பேரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் எரிசக்தி ஆலோசகர்களான முன்னாள் பத்திரிகையாளர் பிரவாஸ் ஜெயின், சாந்தனு சைக்கியா ஆகிய2 பேரை கைது செய்தனர்.

7 பேரும் டெல்லி பாட்டியாலா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் லால்தா பிரசாத், ராகேஷ் குமார், பிரவாஸ் ஜெயின், சாந்தனு சைக்கியா ஆகிய 4 பேரை நாளை வரை போலீஸ் காவலில் வைக்கவும், மற்ற 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் மாஜிஸ்திரேட்டு சஞ்சய் கனக்வால் உத்தரவிட்டார்.

இது தொடர்பான வாதம், நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணங்கள் மட்டுமல்லாது, நிலக்கரி, மின்சார துறை, நிதித்துறை அமைச்சகங்களின் ஆவணங்களும், குறிப்பாக தேசிய எரிவாயு கட்டமைப்பு குறித்து பட்ஜெட் உரையில் இடம் பெறப்போகிற தகவல்களை கொண்ட ரகசிய ஆவணங்களும் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2 கோணிப்பை நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊழலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சாந்தனு சைக்கியா போலீஸ் விசாரணைக்கு பின் வெளியே வரும்போது, “நான் மூடி மறைக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் இது ரூ.10 ஆயிரம் கோடி ஊழல்” என கூறினார்.

இதன் மூலம் இந்த ஆவண திருட்டு ஊழல், சாதாரணமானது அல்ல, ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் என்பதால், இன்னும் பல பெரும்புள்ளிகள் அடுத்த சில நாட்களில் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கைதானவர் களிடம் தொடர் விசாரணை நடத்தியதின் பலனாக இந்த ஆவண ஊழலில், முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களின் 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சைலேஷ் சக்சேனா (ரிலையன்ஸ்), வினய்குமார் (எஸ்ஸார்), கே.கே.நாயக் (கெய்ன்ஸ்), சுபாஷ் சந்திரா (ஜூபிலியன்ட் எனர்ஜி), ரிஷி ஆனந்த் (அடாக் ரிலையன்ஸ்) ஆவார்கள். இதன் மூலம் இந்த ஊழலில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

திருடப்பட்ட ஆவணங் களை கைப்பற்றுவதற்காக டெல்லி, நொய்டா உள்ளிட்ட இடங்களில், கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய அலுவலகங்களில், போலீசார் நேற்று சோதனைகள் நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்சி நிருபர்களிடம் பேசுகையில், “இந்த வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிற இடங்களில் சோதனைகள் நடத்தி இருக்கிறோம். இதில் அடிமட்டம் வரை நாங்கள் செல்ல விரும்புவதால், சோதனைகள் தொடரும்” என்று கூறினார்.

மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஆவண திருட்டு ஊழல் எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இதில் யார் எல்லாம் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் விசாரித்து அறிய வேண்டி உள்ளது” என்றார்.

இதற்கிடையே சைலேஷ் சக்சேனா (ரிலையன்ஸ்), வினய்குமார் (எஸ்ஸார்), கே.கே.நாயக் (கெய்ன்ஸ்), சுபாஷ் சந்திரா (ஜூபிலியன்ட் எனர்ஜி), ரிஷி ஆனந்த் (அடாக் ரிலையன்ஸ்) ஆகிய 5 பேரும் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் டெல்லி பாட்டியாலா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது போலீஸ் தரப்பில் கோர்ட்டில் கூறிய முக்கிய தகவல்கள்:-

* கைது செய்யப்பட்டிருப்பவர்கள், தேசத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். தேச பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

* அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் வரலாம்.

* கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களுடன் ஆலோசிக்க வேண்டி உள்ளதால், 5 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி உள்ளது.

* தங்களது மூத்த அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில், இந்த 5 பேரும் அரசின் ரகசிய ஆவணங்களை வாங்கி உள்ளனர்.

* அந்த மூத்த அதிகாரிகளில் சிலரையும் விசாரிக்க வேண்டி உள்ளது.

ஆனால் 5 பேரின் சார்பில் ஆஜரான வக்கீல், அவர்களை போலீஸ் காவலில் வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு 5 பேரையும் 24-ந் தேதி வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்களை குற்றப்பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி சென்று, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துகின்றனர்.
maalaimalar.com

கருத்துகள் இல்லை: