திங்கள், 29 டிசம்பர், 2014

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த பெண் பலி

பெங்களூரு:பெங்களூரில், நேற்று இரவு, குண்டு வெடித்ததில், சென்னையை சேர்ந்த பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பிரிகேட் ரோடு அருகிலுள்ள சர்ச் தெருவின் நடைபாதையில், நேற்றிரவு, 8:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பவானி, 38 என்ற பெண், பலத்த காயமடைந்தார்; உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பெங்களுருவை சேர்ந்த கார்த்திக் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குண்டு வெடித்த பகுதியில், ரெஸ்டாரெண்டு, பார், 'பப்'கள் அதிகமாக உள்ளன. தினமும், நள்ளிரவு முதல், அதிகாலை, 3:00 மணி வரை, இப்பகுதி பரபரப்பாக காணப்படும். நேற்று, ஞாயிற்றுகிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. குண்டு வெடித்தவுடன், ரெஸ்டாரெண்ட், 'பப்'களில் இருந்தவர்கள், பதட்டத்துடன் வெளியேறினர். அப்பகுதி முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பெங்களூரு முழுவதும், பீதி ஏற்பட்டது.'வெடித்த குண்டு, 'இம்புருவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைஸ்' ரகத்தை சேர்ந்த, குறைந்த சக்தி வாய்ந்த குண்டு' என்று, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார், அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். 'கோப்ரா போர்ஸ்' என்ற சிறப்பு படையினர், பெங்களூரு நகர் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ட்விட்டர் மூலம் ஆதரவு திரட்டி வந்த, மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ், டிச., 13ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு சார்பில் வெளியான ட்விட்டர் செய்தியில், 'எங்களின் ஆதரவாளரை பிடித்து வைத்ததால், எங்களின் அதிரடிக்கு தயாராகுங்கள்' என்று, மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு, தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவின் முக்கிய பகுதியில் குண்டு வெடித்திருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும், கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜார்ஜூம் அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, வழக்கத்தை விட, பெங்களூருவில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருந்தது. இக்கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், குண்டு வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த, மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, ''எதிர்பாராத சம்பவத்தால், மக்கள் பீதியடைய வேண்டாம்; வேண்டிய உதவிகளை செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது,'' என்றார்.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி கூறுகையில், ''விழா காலத்தை சீர்குலைக்கும் வகையில், குண்டு வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது,'' என்றார்.

உறவினர் வீட்டிற்கு சென்ற இடத்தில் சோகம்: குண்டுவெடிப்பில் பலியான சென்னையை சேர்ந்த பவானி, கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று இரவு உணவருந்த விடுதிக்கு சென்றபோது, குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார். dinamalar.com

கருத்துகள் இல்லை: