ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஸ்டெர்லைட் ஆலை அகர்வாலின் கோரிக்கையால் தான் மதிமுகவை ஜெயலலிதா கூட்டணியை விட்டு விரட்டினார்

அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ

சென்னை: 1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக கண்மணிகள், செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களிடம் தேர்தல் குறித்து கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் வெளி்யிட்ட இன்னொரு அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிலம், நீர், காற்று அனைத்தையும் நச்சுத்தன்மை உடையதாக்கி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்வையும், பாழாக்கி உயிருக்கே ஊறுவிளைவிக்கும் நோய்களை ஏற்படுத்துவதோடு விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும்.

இதனால், இந்த ஆலை அகற்றப்பட வேண்டும் என்று மதிமுக கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறது. தூத்துக்குடியிலும் சுற்றுவட்டாரத்திலும் உள்ள பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும் போராடினார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி அன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து தற்காலிக தடை ஆணையையும் பெற்றது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நானே வழக்கு தொடுத்து வாதாடினேன்.

இந் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (நீரி) சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு தொடுத்தவன் என்ற முறையில் நானும் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பங்கேற்கும் விதத்தில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் 8 வார காலத்திற்குள் சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு அறிக்கை தரப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நீரி நிறுவனம் தனது ஆய்வை மேற்கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த 40வது நாளில்தான் நீரி நிறுவனத்தினர் வந்தனர். ஆய்வின்போது ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்திலும் நிலத்தின் மீதும், நிலத்தின் அடியிலும் உள்ள நீரையோ அல்லது மண்ணையோ சோதிப்பதற்கு மாதிரிகளை எடுக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், எனது தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகே நீரையும், மண்ணையும் சோதனைக்கு மாதிரி எடுக்க ஒப்புக்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலத்தில் தொடங்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அந்த மாநில அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்தது. 1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த ஆலை தொடங்கப்பட்டது.

போபாலில் ஏற்பட்ட ஆலை விபத்தால் நச்சுவாயு படர்ந்து மனித உயிர்கள் பலியானது போல ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலங்களும் நாசமாகும். இந்த ஆலை மூடப்பட்டாலும் இதன் நச்சுத்தன்மை சுற்றுவட்டாரத்திலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கவே செய்யும். அமெரிக்காவில் ஒரு தாமிர ஆலை மூடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியும் அந்த வட்டாரத்தில் நச்சுத்தன்மை நீங்கவில்லை என்பது ஓர் அபாய அறிவிப்பு ஆகும்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தை தர்ம யுத்தமாகவே நம்பிக்கையுடன் தொடருவோம் என்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வாலின் கோரிக்கையால் தான் மதிமுகவை ஜெயலலிதா கூட்டணியை விட்டு விரட்டினார் என்று பேசப்படும் நிலையில், வைகோவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை: