திங்கள், 11 ஏப்ரல், 2011

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் 2 பேர் சாவு

கொழும்பு புறப்படும் போது மயங்கி விழுந்து இறந்த பரிதாபம்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பு புறப்பட தயாராக இருந்த 2 பயணிகள் மயங்கி விழுந்து மாண்டனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையை அடுத்த மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கெழும்பு செல்வதற்காக இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணி அசோகா பண்டரா காமினி (வயது73) விமான பயணத்துக்கான வழக்கமான பரிசோதனைகள் முடிவடைந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய டாக்டர்கள் குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேப் போன்று நேற்று சென்னையில் இருந்து கொச்சி வழியாக கொழும்புக்கு செல்லும் விமானத்தில் கொழும்பு செல்வதற்காக இலங்கையைச் சேர்ந்த ஆரியாவதி (71) என்பவர் வந்தார். விமான பயணத்துக்கான வழக்கமான சோதனைகள் முடிவடைந்து, அவர் விமானத்தில் ஏறுவதற்காக ஆம்னி பஸ்சில் சென்றார். அவருடன் சென்ற சக பயணிகள் இறங்கி விமானத்தை பிடித்த நிலையில், அவர் மட்டும் இருக்கையில் தனியாக அமர்ந்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஊழியர்கள் அவர் அருகே சென்று பார்த்த போது, அவரும் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் டாக்டர்கள் குழுவினர் வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 பயணிகள் இறந்த சம்பவம் பற்றி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், ஜெயசீலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: