செவ்வாய், 9 ஜூன், 2026

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு பாய்ச்சல் : உச்ச நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!

 மின்னம்பலம் - Kavi : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு பேர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். 
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், எஸ் ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். 
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழகம், குதிரை பேரத்தில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசப்படுத்திக் கொண்டது என குற்றம்சாட்டப்பட்டது.



இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சீனிவாசன் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். 

அதில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த நான்கு பேர் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. 

தமிழக வெற்றி கழகச் பொதுச் செயலாளர் என் ஆனந்த் மற்றும் நான்கு முன்னாள் எம்எல்ஏக்கள் மீது சிபிஐ உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். 

தேர்தல் முடிந்த பிறகு எந்தவித காரணமும் இல்லாமல் தங்களின் பதவியை ராஜினாமா செய்யும் அல்லது சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்படும் வேட்பாளர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தடுக்க உச்ச நதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான பிரிவு 142ஐ பயன்படுத்தி கடுமையான புதிய விதிகளை உருவாக்க வேண்டும்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் எம்எல்ஏக்கள் நான்கு பேரும் சுயேட்சையாகவோ அல்லது எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாகவோ இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது. 

குதிரை பேரம் நடந்திருப்பதால் பணப்பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், சிபிஐ, தமிழக அரசு மற்றும் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஆகியோர் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட நான்கு முன்னாள் எம்எல்ஏக்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் தங்கள் தரப்பு வாதங்கள் இல்லாமல் எந்த உத்தரமும் பிறப்பிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

கருத்துகள் இல்லை: