வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

செல்லூர் ராஜு : எம்ஜிஆரையே விமர்சிப்பாயா.? ஆ ராசாவுக்கு கடும் கண்டனம்

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் : எம்ஜிஆரையே விமர்சிப்பாயா.. அவர் இல்லைனா நீயெல்லாம்.. ஆ. ராசாவை 'டா' போட்டு பேசிய செல்லூர் ராஜு
மதுரை: எம்ஜிஆரை மோசமாக விமர்சனம் செய்த திமுக எம்.பி. ஆ. ராசாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாடா போடா என்று கடுமையாக திட்டி தீர்த்தார். மேலும், எம்ஜிஆர் இல்லை என்றால் நீயெல்லாம் ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
நீலகிரி திமுக எம்பி ஆ. ராசாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதில் அவர், "நான் எல்லாம் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்லை" எனக் கூறுகிறார். இதையடுத்து, எம்ஜிஆரை மோசமான வார்த்தைகளால் அவர் பேசியிருந்தார். இதனை பார்த்த அதிமுகவினர் எரிமலையாக வெடித்து வருகின்றனர். எம்ஜிஆரை பற்றி பேசிய ஆ. ராசாவை அவர் கிழித்தெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: (ஆ.ராசாவை 'டா' மிகுதியில் செல்லூர் ராஜு பேசியதை நாகரீகம் கருதி தவிர்க்கப்பட்டுள்ளது)

2 ஜி புகழ் ஆண்டிமுத்து ராசாவே.. எம்ஜிஆரை பத்தி நீ தப்பா பேசுறியா.. எம்ஜிஆரும், அம்மாவும் இல்லைனா நீ கோமணம் கட்டிட்டு திரிஞ்சிருக்கணும். ஆடு மேய்ச்சிட்டு இருந்திருப்ப. நீ சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறியா? ஊழல் பண்ணிட்டு திகார் ஜெயிலிலில் இருந்தவன் நீ. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் இல்லையா?

நீ யாரை பார்த்து பேசி இருக்கிறாய்? மனித தெய்வம் புரட்சித் தலைவரை பார்த்து பேசி இருக்கிறாய். இறந்தும் இறைவனாய் இருப்பவர் எங்கள் புரட்சித் தலைவர். இந்த நாட்டு மக்களுக்கு தனது சொந்த பணத்தை தானமாக வழங்கியவர் எம்ஜிஆர். அவரை பத்தி நீ எல்லாம் பேசலாமா? உனக்கு தகுதி இருக்கா அவரை பத்தி பேச? திமுகவின் ஏவல் நாயாக இருக்கிறாயே.. உன் தலைவன் (கருணாநிதி) குடும்பத்தையே காப்பாற்றியவர் என் தலைவன் எம்ஜிஆர் தான். அது தெரியுமா உனக்கு?

உன் தலைவன் கருணாநிதியே இதை சொல்லி இருக்கிறார். 1971-இல் 'எங்கள் தங்கம்' படத்தின் வெற்றி விழாவில் கருணாநிதி சொல்கிறார்.. நான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததற்கு காரணமே எம்ஜிஆர் என்று. இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் எம்ஜிஆரை பல மேடைகளில் பெரியப்பா பெரியப்பா என்று சொல்கிறாரே. நீங்கள் (ஸ்டாலின்) உண்மையில் அப்படி நினைத்திருந்தால் ஆ. ராசாவை கண்டித்திருக்க வேண்டாமா? இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.

கருத்துகள் இல்லை: