செவ்வாய், 10 அக்டோபர், 2023

பலமுறை எச்சரித்தோம்; இஸ்ரேல் நிராகரித்தது: எகிப்து உளவுத் துறை!...

தினமணி : ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை இஸ்ரேல் அரசு நிராகரித்துவிட்டதாக எகிப்து உளவுத் துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
காஸா எல்லைப்பகுதிக்கு பதிலாக ஜோர்டானை ஒட்டியுள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் மட்டுமே இஸ்ரேல் அரசு கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேசிய எகிப்து உளவுத் துறை அதிகாரி, இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த காஸா பகுதிக்குட்பட்ட பகுதியில் திட்டம் தீட்டப்படுவதாக பலமுறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டது. எனினும் அது குறித்து விரிவாக பரிசீலிக்காமல் ஜெரூசலேம் அதனை நிராகரித்துவிட்டது.
காஸா எல்லைக்கு பதிலாக வெஸ்ட் பேங்க் பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கவனம் செலுத்திவந்தார்.

அங்கு அவருக்கான ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். கடந்த 18 மாதங்களாக அங்கு நீடித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மீது மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

மிகவும் மோசமான சூழல் ஏற்படலாம். அதுவும் விரைவிலேயே நிகழலாம் என பலமுறை எச்சரித்தோம். ஆனால், தொடர்ந்து வந்த அத்தகைய எச்சரிக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது இவ்வளவு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அந்நாட்டு உளவுத் துறை அமைப்பு எந்தவித எச்சரிக்கையையும் கொடுக்கவில்லையா? என கேள்வி எழுந்த நிலையில், எகிப்து உளவுத் துறை இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இந்த அமைப்புக்கு பாலஸ்தீனம் ஆதர்வு. இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

காஸா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பாலஸ்தீனமும் பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (அக்.7) இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். வான் வழியிலும் தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை 900 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

கருத்துகள் இல்லை: