புதன், 4 ஜனவரி, 2023

'மக்கள் ஐ.டி.' தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் ...

மாலை மலர்  : சென்னை  நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கியில் கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்களை பெற ஆதார் எண் அவசியமாக இருக்கிறது.
ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட 'மக்கள் ஐ.டி.' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் அடையான எண் ஒதுக்கி அரசே பராமரிக்கும்.
இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தரவுகளின் அடிப்படையிலான அரசு (டேட்டா சென்ட் ரிக் கவர்ன்மெண்ட்) என்பது தி.மு.க. அரசின் முக்கியமான மக்கள் நல செயல் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய முடியும். மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம் பல நல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. நலத்திட்டங்களின் தகுதியான பயனாளிகளை முறையாக அடையாளம் காணுவதற்கு 'மக்கள் ஐ.டி.' திட்டம் பெரிதும் உதவுவதோடு, தரவுகள் துறைகளுக்கு திட்டமிட மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

தமிழக அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியே மென்பொருள் மற்றும் அதற்கான தரவுகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தையும் ஒரே தரவு தளத்தில் ஒருங்கிணைத்து திட்டங்கள் தயாரித்தல் மற்றும் நடைமுறை படுத்துதல் நோக்குடன்தான் மாநில குடும்ப தரவு தள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குடிமக்கள் பெறும் அனைத்து நலத்திட்டங்களும் பல்வேறு துறைகளில் தரவுகளை ஒப்பிட்டு ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுதியான குடிமக்களை தரவு பகுப்பாய்வு மென்பொருள் மூலமாக எளிதில் அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த முடியும். மேலும் நலத்திட்டங்களுக்காக அரசை தேடி மக்கள் வரும் நிலையை மாற்றி நலத்திட்டங்களை அரசே முன்வந்து தகுதியான நபர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழக மக்கள் எண் எனப்படும் 12 இலக்க எண் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. மாநில குடும்ப தரவு தள திட்டம் மற்றும் மக்கள் எண் திட்டம் எந்த விதத்திலும் தற்போது குடிமக்கள் பெற்றுவரும் எந்தவித நலத்திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. தரவுகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதும், நடைமுறைப்படுத்துவதும், தகுதி உள்ள பயனாளிகளுக்கு திட்டங்களின் பயன் கிடைக்கவில்லை என்ற குறைபாட்டையும், தகுதி இல்லாத நபர்களுக்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் நிவர்த்தி செய்யும். மேலும் தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டும் போது, அரசால் தேவைகளை முன்னுரிமை படுத்தவும் தேவைகளை துல்லியமாக கண்டறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடுகள் வழங்கவும் முடியும்.

ஆனால் மக்கள் ஐ.டி. ஆதாருக்கு போட்டியானது, ஆதாரை எதிர்ப்பது போல என தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தரவுகளின் அடிப்படையிலான அரசாக இருப்பது காலத்தின் கட்டாயம். அதற்கான பணிகளின் தொடக்கம் தான் மக்கள் ஐ.டி. திட்டம். இது சமுதாய மறுமலர்ச்சிக்கான திட்டம். ஆதார் திட்டம் வேறு, மக்கள் ஐ.டி. திட்டமும், பயனும் வேறு. எனவே இதிலும் அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னை நந்தனத்தில் உள்ள க.அன்பழகன் மாளிகையில் எல்காட் நிறுவனத்தின் புதிய ஆதார் மைய சேவை அலுவலகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

தமிழக அரசின் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் 2-ம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது.

இதன்படி மதுரை, நெல்லை, ஓசூரில் 6 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் 5,742 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான இந்த திட்டத்துக்கான மொத்த முதலீடு ரூ.790.99 கோடி ஆகும். மேற்கண்ட 6 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

கருத்துகள் இல்லை: