வெள்ளி, 6 ஜனவரி, 2023

தமிழ்நாடு - நீட் தேர்வு விலக்கு- மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை!

 மாலை மலர்  :  தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரச்செய்வது என்கிற வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
நீட் விலக்குக்கான அந்த கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்து. அப்போது குடியரசு தலைவர் மூலம், அவரது அலுவலகத்தின்மூலம், உள்துறை அமைச்சகம், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு விளக்கங்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். அது சம்பந்தமாக தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் விளக்கங்கள் அனுப்பப்பட்டது என்ற விவரங்களை தெரிவித்தோம்.

அதை அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டு, தங்களால் முடிந்ததை பரிசீலிப்போம் என தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல், சுற்றுச்சுவருடன் மட்டுமே இருக்கும் அந்த பணியை விரைந்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

எங்கள் கோரிக்கையை அமைச்சர் கேட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1400 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது ரூ.1900 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கான கன்சல்டன்ட் நியமிக்கவேண்டும், வரைபடம் தயாரிக்க வேண்டும். அதற்காக ஒப்பப்புள்ளி கோரப்பட்டுள்ளது, விரைவில் அந்த பணியை தொடங்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது மதுரையில் பணிகள் தொடங்கியபிறகு, கோவையில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என அமைச்சர் கூறினார்.

மேலும், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கவிருப்பதாகவும், அதற்குப் பிறகு நல்ல ஒப்புதல் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

30 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இது நல்ல யோசனை, கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய அமைச்சர், இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் கலந்து பேசி முடிவடுத்து சொல்கிறாம் என சொன்னார்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கருத்துகள் இல்லை: