திங்கள், 2 ஜனவரி, 2023

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க 300 சாலைகளில் போக்குவரத்தை லைவாக கண்காணிக்கும் கருவி

 மாலைமலர் : சென்னை: சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன.
இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள்.
இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும்.
ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும்.


5 நிமிடங்களுக்கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
எந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும்.
இதற்கு முன்பு ஆங்காங்கே பணியில் இருக்கும் போலீசார் சொல்வதை கேட்டு தான் நிலமைக்கு ஏற்ப செயல்படுவார்கள்.

இனி ஆன்-லைனில் நிலமையை நேரடியாக பார்த்து உடனுக்குடன் போக்குவரத்து மாற்றங்களை செய்ய முடியும்.
மேலும் இந்த டேட்பிக்களை அந்த கருவிகள் சேமித்தும் வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம் எந்தெந்த நாட்களில், நேரங்களில், பண்டிகைகளில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து உள்ளது என்பதை போலீசார் அறிந்து முன் கூட்டியே தகுந்த ஏற்பாடுகளை மேற் கொள்ள முடியும்.
பொதுமக்களும் தங்கள் மொபைல் போனில் 'ரோடு ஈசி' என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
 இதுவரை 1000 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அவசரமாக பயணிக்க வேண்டியவர்கள் நெரிசல் குறைந்த பகுதிகள் வழியாக எளிதாக செல்ல முடியும் போலீசாருக்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் எளிதாக இருக்கும்.


கருத்துகள் இல்லை: