ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஈஷா யோகா மையத்திலிருந்து தப்பி ஓடிய சுபஸ்ரீ சடலமாக மீட்பு.. ஜாக்கியின் தொடர் கொலைகள்..

 நக்கீரன் :  ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீ(34) காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார்(40) போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை 6 மணிக்கு எனது மனைவி ஒரு வார யோகா பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டுச் சென்றேன்.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சம்பவத்தன்று (18.12.2022) எனது மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக சென்றபோது, பயிற்சி முடிந்து அனைவரும் காலையிலேயே சென்றுவிட்டனர் என்று ஈஷா யோகா மையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது.


அதைத் தொடர்ந்து, ஒரு நம்பரில் இருந்து எனது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது.
பிறகு அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ‘ஒரு பெண் தனது கணவருக்குப் பேச வேண்டும் என்று கூறி என்னுடைய செல்போனை வாங்கி போன் செய்தார்,

ஆனால், அழைப்பை எடுக்காததால், செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்’ எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: