வியாழன், 5 ஜனவரி, 2023

சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்து கியூ ஆர் கோடு மூலம் புகார் செய்யும் வசதி- பொதுமக்கள் வரவேற்பு

 மாலைமலர் : தேனி  நகராட்சி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறைகளில் தூய்மை, பராமரிப்பு மற்றும் குறைகள் குறித்து கருத்து தெரிவிக்க கியூ ஆர் கோடு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுகழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்களை சில ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சீரமைத்து சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி நகராட்சியில் உள்ள பொதுகழிப்பிடங்கள், சமூக சுகாதார வளாகங்கள் ஆகியவற்றின் நுழைவுவாயிலில், கியூஆர் கோடு கொண்ட போர்டு பொருத்துகின்றனர். கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் செல்போன் மூலம் கியூஆர்கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக இணையதளத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது.
அதில் கழிப்பறை சுத்தமாக உள்ளதா, போதுமான தண்ணீர், காற்றோட்டம், வெளிச்சம், கதவுகளின் தாழ்பாள் உள்ளதா, துர்நாற்றம் வீசுகிறதா உள்ளிட்ட 7 கேள்விகள் உள்ளன. அந்த கழிப்பறைக்கு ரேட்டிங் வழங்க 5 ஸ்டார் மதிப்பீடு வரை வசதி செய்துள்ளனர். பேரூராட்சி சுகாதார வளாகங்களிலும் இந்த வசதி செய்யப்படுகிறது.



இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 35 கழிப்பிடங்களில் கியூஆர் கோடு பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் வரும் புகார்கள் டெல்லி தூய்மை இந்தியா திட்ட செயலில் பார்க்க முடியும். அவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சிக்கு தகவல் தெரிவித்து கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் சுகாதாரமான கழிப்பறை கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: