செவ்வாய், 14 ஜூன், 2022

கிரிப்டோ கரன்சி - பிட் காயின் 18 மாதங்களாக கடும் வீழ்ச்சி!

 மின்னம்பலம் : கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் உலகமேங்கும் பிரபலம் அடைந்துள்ள வர்த்தகம் முறையாகும். இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் உலகம் அறிந்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் மிகப் பிரபலமாக உள்ளது. உலக அளவில் தற்போது பிட்காயின் மூலம் பல வர்த்தனைகள் நடைபெறுகின்றன. மேலும் பிட்காயின் மீது உலகில் உள்ள பல மக்கள் முதலீட்டில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 தசாப்தத்திலும் இல்லாத அளவுக்கு அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக கடந்த 18 மாதங்களாக பிட்காயின் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மேலும் மற்றொரு கிரிப்டோகரன்சியான எதிரியமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் உலக அளவில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர். கடந்த நவம்பர் முதல் கிரிப்டோகரன்சி சந்தையில் சுமார் $2 டிரில்லியன் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போது பிட்காயினின் விலை 25,000 அமெரிக்க டாலருக்குக் குறைவாக வர்த்தகமாகிறது.

மேலும், ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்து நீண்ட நாட்களாக சிந்தித்து வருகிறது. ஆனால் அதை எப்போது வெளியிடும் என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: