சனி, 18 ஜூன், 2022

மருத்துவ மனையில் ஜோதிமணி ...கைது செய்து ஆடையை கிழித்த போலீசார் - புகார்

 tamil.news18.com  :  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலியால் ஜோதிமணி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மக்களவைத் தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஜோதிமணியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் ஜோதிமணி பலமாகத் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். கடந்த புதன் கிழமை அன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடை கிழித்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டுள்ள ஜோதிமணி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்த புகாரை அளித்துள்ளார்.

அதில், 'டெல்லி காவல்துறை மிக மோசமாக தாக்கி எனது ஆடையை கிழித்து வரம்பு மீறி கைது செய்து ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு மணி நேரமாக தாகம் என தண்ணீர் கேட்டு வரும் எங்களுக்கு தண்ணீர் கூட தர மறுக்கிறார்கள்.கடையில் கூட தண்ணீர் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை.

ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது யாருக்கும் நேரக்கூடாது. எனவே, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வீடியோ பதிவில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு நேரில் சந்தித்து புகார் அளித்தது.

கருத்துகள் இல்லை: