செவ்வாய், 14 ஜூன், 2022

சர்க்காரியா கமிஷனில் கலைஞருக்காக ஆஜாரகிய திரு ஜி ஜி பொன்னம்பலம் .. சில விளக்கங்கள்

ராதா மனோகர்
  : கலைஞர் மீது எம்ஜியார் கொடுத்த ஊழல் புகாரை விசாரணை செய்த  சர்க்காரியா கமிஷன்  வழக்கில் இலங்கையின் புகழ் பெற்ற வழக்கறிஞரும்  தனிப்பெரும் தலைவர் என்று தமிழர்களால் போற்றப்பட்ட  அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் ஆஜாராகியது எல்லோரும் அறிந்ததே.
திரு திரு ஜி ஜி அவர்கள் தமிழகம் வந்த வரலாறு பற்றி சில சுவாரசியமான செய்திகள் உள்ளன.
திரு சா . கணேசன்

திரு  ஜி ஜி பொன்னம்பலம் பற்றி ஏற்கனவே  அறிந்திருந்த  கலைஞர் அவர்கள் முன்னாள்  சென்னை மேயர் திரு சா கணேசனை திரு மணவை தம்பி அவர்களிடம் இது பற்றி  பேசுமாறு அனுப்பினார்
திரு மணவை தம்பியின் வீட்டிற்கு வந்த சா . கணேசன் இது பற்றி பேசினார்
திரு மணவை தம்பி

கலைஞரின் இந்த செய்தியை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு பறந்தார் திரு மணவை தம்பி அவர்கள்
அங்கு  அவரது நண்பரான திரு ஆனந்த சங்கரியின் எம் பி அவர்களின்  துணையோடு திரு ஜி  ஜி பொன்னம்பலத்தை அணுகி சர்க்காரியா கமிஷன் வழக்கு பற்றி கூறி அழைப்பு  விடுத்தார்
ஏற்கனவே  கலைஞர் அவர்கள்   இந்த வழக்கில்  திரு ஜி ஜி ஆஜராக வேண்டும் என்று  விரும்பி ஒரு தமிழரசு கட்சி பிரமுகர் மூலமாக செய்தியை அனுப்பி இருந்தார்
அந்த தமிழரசு கட்சி பிரமுகரோ அந்த செய்தியை ஜி ஜி பொன்னம்பலத்திடம் தெரிவிக்காமல் கமுக்கமாக அமுக்கி விட்டார்
இந்த வழக்கில் திரு ஜி ஜி ஆஜரானால் அவருக்கு புகழ் வந்துவிடுமே என்ற அரசியல் காழ்புணர்ச்சிதான் காரணம்.
மேலும் ஜி ஜி பொன்னம்பலம் தான் ஆஜரான  பல பெரிய வழக்குகளை எல்லாம் பொடிபொடியாக்கிய வரலாற்று பெருமை உடையவர் ..
எம்ஜியார்  கல்யாணசுந்தரம் பக்தவத்சலம் கோஷ்டியினால் ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஜி  ஜி பொன்னம்பலம் வெற்றி பெற்றால்  ஜி ஜி. பொன்னம்பலத்தின் அரசியல்  செல்வாக்கு இலங்கை தமிழர்களிடம் எக்கச்சக்கமாக எகிறிவிடும் என்ற எண்ணம்   அந்த பிரமுகரிடம் குடிகொண்டிருந்தது
திரு ஆனந்த சங்கரி


சென்னை வந்த ஜி ஜி வடபழனி  கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு திரு மணவை தம்பியின் வீட்டிற்கு  சென்று அவரை சந்தித்து விட்டு  பின்பு கலைஞரின் வீட்டிற்கு சென்றார்
கலைஞரை சந்தித்த  ஜி ஜி அவர்கள் ஏராளமான ஜூனியர் வழக்கறிஞர்களை தருமாறு வேண்டி கொண்டார்
மண்டபம் நிறைந்த அளவில் ஏராளமான திமுக வழக்கறிஞர்கள் ஜி ஜி பொன்னம்பலம் முன்பாக  குவிந்தனர்.
அந்த மண்டபம் நிறைந்த   ஜூனியர் வழக்கறிஞர்களை வைத்து கொண்டு  வகுப்பு எடுத்தார்  ஜி ஜி. பொன்னம்பலம்.
சர்க்காரியா  கமிஷன் அறிக்கையை  அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து  ஒவ்வொரு ஜூனியர் வழக்கறிஞர்களிடமும் ஒவ்வொரு பாயிண்டுகளாக பொறுப்பு  கொடுத்து விளக்கங்களை கொடுத்து கொண்டிருந்தார்
இந்த செய்திகளை அறிந்த எம்ஜியார் வெலவெலத்து போனார்.
கல்யாண சுந்தரமும் பக்தவத்சலமும் தன்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் என்பது எம்ஜியாருக்கு நன்றாகவே விளங்கியது .
ஒரேயடியாக இது பற்றி தனக்கு தெரியாது என்றும் கம்யூனிஸ்டு தலைவர் கல்யாணசுந்தரம்தான் இதை தன்னிடம் தந்தார் என்று கூறி கைகழுவினர்
பின்பு இது பற்றி நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டார்
இந்த வழக்குத்தான் திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் பேசிய இறுதி வழக்கு.
இந்த  வழக்கு பேசியதற்கு உரிய பணத்தை கலைஞரிடம் இருந்து பெற்று கொள்ள  மறுத்துவிட்டார் . ஒரு தமிழனுக்காக பேசுவதற்கு இன்னொரு தமிழன் பணம்  வாங்குவதா என்று மறுத்துவிட்டார்
கலைஞர் மீதான தாக்குதல்கள் அவர் ஒரு தமிழர் தலைவர் என்பதால் என்பதை ஜி ஜி அவர்கள் புரிந்துகொண்டார் என்றே கருதுகிறேன்
விமான பயண செலவு தங்குமிட செலவு போன்றவற்றை கூட பெற மறுத்துவிட்டார்
இந்த  வழக்கு பற்றிய மேலதிக செயதிகளை பெறவிரும்புவோர்களை அமரர் மணவை தம்பியின்  மகன் திரு மணவை அசோகன் அவர்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்  இவர் தற்போது  சென்னையில்தான் வசிக்கிறார்
 இதன் பின்பு திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் மலேசிய சென்றார்
அங்கு சில காலத்தின் பின்பு  காலமானார்
திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் திரு ஜி ஜி அவர்களுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது

கருத்துகள் இல்லை: