வெள்ளி, 10 ஏப்ரல், 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: ஐகோர்ட் கிளை கண்டிப்பு; மனு தள்ளுபடி; ரூ.50,000 அபராதம் -

 dinakaran.com - Karthik Yash : மதுரை: திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்னையே இல்லையா? இவ்விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என மனுதாரரை கண்டித்த ஐகோர்ட் கிளை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே சென்று வழிபட அனுமதி அளித்துள்ளனர். எனவே, கடமையை நிறைவேற்ற தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.



இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்னையே இல்லையா? திருப்பரங்குன்றம் தொடர்பாக இன்னும் எத்தனை மனுக்கள்தான் தாக்கல் செய்வீர்கள்?’’ என காட்டமாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ‘‘இந்த மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பு அபராதம் விதிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு நீதிபதிகள், ‘‘இதைப் போல பொதுநல மனு தாக்கல் செய்ய மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள். அப்போது தான் அபராதத்தை நீக்குவோம். இதுபோல் வழக்கு தாக்கல் செய்வது, அதை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. இனி இதுபோன்று பொதுநல மனு தாக்கல் செய்யும் முன் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய முடியுமா?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘‘இந்த மனு விளம்பரம் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

கருத்துகள் இல்லை: