சனி, 13 ஜனவரி, 2024

இந்தியாவில் வலதுசாரிகள் ஆதிக்கம் வளர்ந்துள்ளதை நிரூபித்த ‛‛அன்னபூரணி'': நியூயார்க் டைம்ஸ்

nayantharas-annapoorani-as-a-proof-of-the-growing-dominance-of-the-right-wing-in-india-says-new-yo

 tamil.oneindia.com - Nantha Kumar R :  இந்தியாவில் வலதுசாரிகள் ஆதிக்கம் வளர்ந்துள்ளதை நிரூபித்த ‛‛அன்னபூரணி'': நியூயார்க் டைம்ஸ் கட்டுரை
சென்னை: இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெளியானதாக கூறி நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ‛தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் வலதுசாரிகளின் ஆதிக்கம் என்பது இந்தியாவில் வளர்ந்துள்ளதற்கு ‛‛அன்னபூரணி'' திரைப்படம் சான்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியான ‛ராஜா ராணி' திரைப்படததுக்கு பிறகு ‛லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா-நடிகர் ஜெய் இணைந்து நடித்த திரைப்படம் அன்னபூரணி. படத்தை அறிமுக இயக்குனர் நிலஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். nytimes.com/2024/01/12



மேலும் நடிகர் சத்யராஜ், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பல திரை பிரபலங்கள் நடிததுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. நெட் ஃபிளிக்ஸிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

nayantharas-annapoorani-as-a-proof-of-the-growing-dominance-of-the-right-wing-in-india-says-new-yo

வழக்குப்பதிவு: இதற்கிடையே தான் ‛அன்னபூரணி' திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு என்பது கிளம்பியது. அதாவது இந்த திரைப்படம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அன்னபூரணி படத்துக்கு எதிராக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

நெட்பிளிக்ஸில் நீக்கம்: இந்நிலையில் தான் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்துத்துவா அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தற்போது இந்தியாவில் விவாதமாக உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரை: இதற்கிடையே தான் அமெரிக்காவின் பிரபல நாளிதழான‛தி நியூயார்க் டைம்ஸ்' சார்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் வலதுசாரிகளின் ஆதரவு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்து-முஸ்லிம் காதல்: அன்னபூரணி.. தமிழ் மொழியில் வெளியான திரைப்படம். இந்த திரைப்படம் என்பது பிராமண சமுதாயத்தை சேர்ந்தவரின் மகள் சமையல் கலைஞராக விரும்பும் நிலையில் சமுதாயத்தில் இருக்கும் சில சிக்கல்களை அவர் எப்படி சந்திக்கிறார் என்பதை அடிப்படையாக கொண்டது. அன்னபூரணி பிராமண சமுதாயத்தை சேர்ந்த அர்ச்சகரின் மகள். மாமிசம் சமைக்காதவர்கள். அவர்கள் சார்ந்த சமுதாயத்தில் இறைச்சி என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.ஆனால் அவர் சமையல் கலைஞராக முயற்சிக்கிறார். மேலும் இந்து-முஸ்லிம் காதல் சார்ந்த காட்சியும் உள்ளது.

அசைவ உணவு: இந்த திரைப்படம் திரைக்கு வந்து 2 வாரங்கள் ஆன நிலையில் நெட் ஃபிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தியா, வெளிநாடுகளில் இருந்து நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் பார்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் ரமேஷ் சோலங்கி என்பவர் தான். தன்னை பெருமைமிகு இந்து என காட்டும் இவர் அன்னபூரணி திரைப்படம் என்பது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்து கடவுள்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே இப்படி படமாக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகாரளித்தார். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னிப்பு கடிதம்: இதையடுத்து இந்துக்கள் மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டு பிரதமர் நரேந்திர மோடி அரசுடன் தொடர்புடைய வலதுசாரி அமைப்புக்கு படத்தின் தயாரிப்பு ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் மன்னிப்பு கடிதம் எழுதப்பட்டது. அதோடு நெட் ஃபிளிக்ஸில் இருந்து திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

சென்சார் போர்ட் அனுமதி: இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் "படத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஏதாவது இருந்திருந்தால், சென்சார் போர்ட் அனுமதித்திருக்காது" என்றார். அதன்படி பார்த்தால் சென்சார் போர்டு தணிக்கைக்கு பிறகு வந்த இந்த திரைப்படத்தை நெட் ஃபிளிக்ஸில் நீக்கப்பட்டு இருப்பது என்பது நெட் ஃபிளிக்ஸ் இப்போது சில குழுவுடன் சேர்ந்து இயங்குவது போன்ற சந்தேகம் கிளம்புகிறது.

பதில் இல்லை: இதுதொடர்பாக மும்பையில் உள்ள நெட் ஃபிளிக்ஸ் அதிகாரிகளிடம் கருத்து கேட்டபோது அவர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை. இருப்பினும் முந்தைய காலத்தில் நெட்ஃபிளிக்ஸின் நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசினார். 2019ல் சவூதி அரேபியா குறித்த சர்ச்சைக்குரிய அமெரிக்க நிகழ்ச்சியை நிறுத்தியது பற்றி அவர் பேசுகையில், ‛‛நாங்கள் இதனை உண்மையாக நிகழ்த்தப்பட வேண்டும் என விரும்பவில்லை. பொழுதுபோக்கு அம்சமாக தான் பார்க்கிறோம்'' என தெரிவித்தார்.

தமிழ்நாடு VS குஜராத்: அன்னபூரணி திரைப்படம் என்பது இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இங்கு காலம் காலமாக பிராமணர்களின் சலுகைகளை முறியடிக்கும் வகையிலான செயல்கள் உள்ளன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெரும்பாலான இந்துக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் கூட தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கின்றனர்.

வலதுசாரிகளின் அழுத்தம்: இத்தகைய சூழலில் இந்தியாவில் திரைப்படங்கள் மீது வலதுசாரிகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. சமீப ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிவந்த திரைப்படங்களில் பாராட்டுப்பெற்ற ஆவணப்படங்கள் என்றால் அது இந்து சார்பு அரசியலுக்கு எதிரான நுட்பமான நிலைப்பாட்டுடன் கூடிய படங்களாகும். உதாரணமாக "ரைட்டிங் வித் ஃபயர்" மற்றும் "ஆல் தட் ப்ரீத்ஸ்" உள்ளிட்டவற்றை கூறலாம்.

மத்திய அரசின் திட்டம்: மேலும் தற்போது இந்திய அரசு இன்னொரு வேலையில் தீவிரம் காட்டுகிறது. இந்திய மக்கள் ஆன்லைனில் என்ன பார்க்க முடியும் என்பதை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்க கடும் சட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் உள்பட பிற நிறுவனங்கள் இந்து சமுதாய உணர்வுகளைப் புண்படுத்துவதாக கருதப்படும் திரைப்படங்களுக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளன. இதுபோன்ற படங்கள் தியேட்டர்களில் வரும்போது டயர் எரிப்பது, கல் எறிவது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: