வெள்ளி, 1 டிசம்பர், 2023

மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி பறிக்கப்படுமா? இன்னும் 2 நாளில்?

tamil.samayam.com  -  மகேஷ் பாபு  நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பெயர் மஹுவா மொய்த்ரா. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான இவர், மக்களவையில் பேசும் போது அனல் பறக்கும். புள்ளி விவரங்களை அடுக்கி மத்திய பாஜக அரசு மற்றும் அதானி முறைகேடுகள் குறித்து தெறிக்க விட்டு விடுவார்.
இவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எம்.பிக்கள் திணறிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
கேள்வி கேட்க பணம்
இந்நிலையில் மக்களவையில் கேள்விகள் கேட்க துபாயை சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியிடம் பணம் வாங்கி கொண்டதாக பாஜக தரப்பு பெரிய குண்டை தூக்கி போட்டது.
மேலும் நாடாளுமன்ற லாகின் விவரங்களை தர்ஷினிடம் பகிர்ந்து கொண்டதாகவும், துபாயில் இருந்தபடி அவரே கேள்விகளை பதிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.
இதற்காக தொழிலதிபர் தர்ஷனிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்களை மஹுவா மொய்த்ரா பெற்றுக் கொண்டதாக கூறினர்.

மஹுவா மொய்த்ரா மறுப்பு
ஆனால் இவற்றை திட்டவட்டமாக மறுத்தார். அதேசமயம் லாகின் விவரங்களை பகிர்ந்து கொண்டது உண்மை தான் எனக் கூறினார். இந்த விவகாரம் படிப்படியாக விஸ்வரூபம் எடுத்த நிலையில், உரிய விசாரணை நடத்துமாறு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வைத்தார். இதையடுத்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு களத்தில் இறங்கியது. இவர்கள் நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
சுனில் கனுகோலு கேம் பிளான்... ஒன்னுல்ல ரெண்டு மாநிலங்கள்... டிசம்பர் 3 திக் திக் தேர்தல் முடிவுகள் வெயிட்டிங்!

அதிர்ச்சியூட்டிய நெறிமுறைகள் குழு
அப்போது தனிப்பட்ட வகையில் சில கேள்விகளை கேட்டதாக கூறி மஹுவா மொய்த்ரா வெளியேறியது தனிக் கதை. அனைத்து தரப்பின் கருத்துகளையும் கேட்ட நெறிமுறைகள் குழு, மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவியை பறிப்பதற்கு பரிந்துரை செய்தது. இதுதொடர்பான தீர்மானத்திற்கு 6 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இத்துடன் விஷயம் அப்படியே நின்றிருந்தது.

மக்களவை தேர்தல் 2024
புதிதாக எந்தவித அப்டேட்டும் வரவில்லை. 2024 மக்களவை தேர்தல் களம் நெருங்கி கொண்டிருக்க, அதற்கு முன்னதாக பதவி நீக்கம் செய்யப்படுவாரா? இல்லை நடவடிக்கை எடுக்கப்படாதா? போன்ற கேள்விகள் எழுந்தன. இது ஒருபுறம் நடக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவுக் குரல் எழுப்பாமல் ஒதுங்கி நின்றது.
அயோத்தி ராமர் கோயில்: தாய்லாந்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ்... வி.ஹெச்.பி செய்த முக்கிய ஏற்பாடு!
மனம் திறந்த மம்தா பானர்ஜி

சமீபத்தில் தான் மேற்குவங்க முதலமைச்சரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மனம் திறந்து பேசினார். மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் தேர்தல் சமயத்தில் கைகொடுக்கும் என்று சூசகமாக தெரிவித்தார். மேலும் கிருஷ்ணா நகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதன்மூலம் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கணிப்புகள் எழத் தொடங்கின. இந்நிலையில் வரும் திங்கள் அன்று மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவியை நீக்கும் பரிந்துரை தீர்மானத்தை மக்களவை சபாநாயகரிடம் நெறிமுறைகள் குழு அதிகாரப்பூர்வமாக அளிக்க உள்ளது. அதன்பிறகு சபாநாயகர் ஓம் பிர்லா எடுக்கவுள்ள நடவடிக்கை மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: