திங்கள், 6 நவம்பர், 2023

பாஜக தலையீடு... ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!

 மின்னம்பலம் - christopher ; மலையக தமிழர்கள் விழாவில் தமிழ்நாடு முதல்வரின் உரை புறக்கணிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இன்று (நவம்பர் 6) விளக்கம் அளித்துள்ளார்.
மலையக தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட 200வது ஆண்டை முன்னிட்டு “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் 3 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் நடத்தியது.
மலையகத் தமிழர் விழாவில் தமிழக முதல்வரின் காணொலிக்கு தடை: இந்திய அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம் - லங்காசிறி நியூஸ்
மலையக தமிழர்களின் சார்பில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாட்டிலிருந்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அதிமுக எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் , பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ராம் மாதவ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார்.

முதல்வரின் உரை இது தான்!

அதில், ”மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள். மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு – இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்குகிறது.

1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் - தடை உத்தரவை திரும்ப பெற்ற ராஜஸ்தான் அரசு! | nakkheeran

காப்பி தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.

இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.

’கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்!’ என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி, அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” என்று பேசியிருந்தார்.

வைகோ கண்டனம்!

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை நவம்பர் 3 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற விழாவில் ஒளிப்பரப்பாகவில்லை. ஆனால் இலங்கை ஊடகங்கள் மற்றும் செய்தி தாள்களில் வெளியானது.

தமிழ்நாடு முதல்வரின் உரை ஒளிப்பரப்பாகததற்கு மத்திய அரசே காரணம் என்று சர்ச்சை எழுந்தது.
இதனிடையே ”முதல்வரின் உரையை ஒளிப்பரப்ப அனுமதிக்காமல், சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது” கடும் கண்டனத்துக்குரியது”  என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டார்.

Image

இலங்கை அமைச்சர் மறுப்பு!

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை புறக்கணிக்கப்படவில்லை. விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக வீடியோ உரை வந்ததால் அதை ஒளிப்பரப்ப முடியவில்லை. அதே வேளையில்
முதல்வர் ஸ்டாலினின் உரை தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் வெளியானது. முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கருத்துகள் இல்லை: