வெள்ளி, 10 நவம்பர், 2023

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - கூடுதலாக 7.35 லட்சம் பேருக்கு ரூ.1000.. இன்றே வழங்கும் ஸ்டாலின்!

tamil.oneindia.com - Shyamsundar :  சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலும், இதர மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையிலும் இன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி வழிநின்று மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி,
மகளிர் நலன் காக்கும் திட்டங்களையும் மிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மகளிருக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியில் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும், பின்னுக்கு தள்ளி முந்தி நிற்கிறது தமிழ்நாடு அரசு.அந்த வகையில்தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

மகளிர் உரிமை திட்டம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ். முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்றே (10.11.2023) வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (10-11-2023) காலை 10.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய தினமே (10-11-2023 அன்று) அமைச்சர்கள் தலைமையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை: