ஞாயிறு, 12 நவம்பர், 2023

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் திடீர் தீ விபத்து.. நடந்தது என்ன..

tamil.samayam.co  ; சென்னை: சென்னை மயிலாப்பூர் கோயிலில் இன்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அக்கோயிலில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் சாய்பாபா கோயில் ஒன்று அமைந்துள்ளது. தமிழகத்தில் பல சாய்பாபா கோயில்கள் அமைந்திருந்தாலும், மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள் என சில மட்டுமே இருக்கின்றன. அப்படி ஒரு கோயில் தான் இந்த மயிலாப்பூர் சாய்பாபா கோயில். இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். குறிப்பாக, வியாழக்கிழமைகளில் மயிலாப்பூர் முழுவதுமே சாய்பாபா பக்தர்களால் நிரம்பி இருக்கும்.
இந்நிலையில், இந்த சாய்பாபா கோயிலின் மேற்பகுதியில் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கோபுரம் அமைக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழாவும் விரைவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அந்த கோபுரத்தை சுற்றிலும் ஓலைக் குடிசையால் கோயில் நிர்வாகம் மூடி இருந்தது. இந்த சூழலில், இன்று தீபாவளி என்பதால் அப்பகுதியில் பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர். அப்போது இரவு 8 மணியளவில் ஒரு ராக்கெட் பட்டாசு, அந்த கோபுரத்தை சுற்றியுள்ள குடிசையில் விழுந்ததாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: