புதன், 10 ஜூன், 2020

அரசு உங்களை காப்பாற்றாது .... சவுக்கு சங்கர்

savukkuonline.com : சென்னையில் நாளுக்கு நாள் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் என்ன நடக்கிறது, என்ன நடக்கவிருக்கிறது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தைத் தடுத்து , மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.   ஆனால் அவருக்கு இந்த நோய் எத்தகையது, எப்படி பரவுகிறது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து துளியாவது அறிவிருக்கிறதா என்று தெரியவில்லை.   தொடக்கத்தில், நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்றார்.   பின்னர் மூன்றே நாட்களில் நோய் தொற்று பூஜ்யத்தைத் தொடும் என்றார்.  பிறகு, இது பணக்காரர்களை தாக்கும் நோய்’ என்றார்.   இப்போது நோய் பரவ பொதுமக்கள்தான் காரணம் என்கிறார்.   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக முதல்வர் பேசி வருகிறார்.
Video Player
00:00
01:02
ஒரு முதல்வருக்கு அனைத்து விவகாரங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது சாத்தியமும் இல்லை. அவருக்கு வழிநடத்தவும், ஆலோசனை சொல்லவும் தான்  படித்த அதிகாரிகள் இருக்கிறார்கள்.  ஒரு முதல்வரின் பணி, இது போன்ற சிக்கலான காலகட்டத்தில் சரியான அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதும் தான்.

1996-2001 ஆட்சி காலத்தில், ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜத்தை உளவுத்துறையில் பணியில் அமர்த்தியிருந்தார் கலைஞர்.   ராமானுஜம், மற்ற அதிகாரிகளைப் போல, “அய்யா, சொல்லுங்கய்யா. அப்படியே செஞ்சுடுறேன் அய்யா” என்றெல்லாம் பேச மாட்டார்.   சார் என்று கூட சொல்ல மாட்டார்.  “இல்லங்க.  அது சரியா வராதுங்க.  கவர்மெண்டுக்கு கெட்ட பேர் வருங்க” என்றுதான் பேசுவார்.  ஆனால், அவரைப்போல உளவுத்துறையில் சிறப்பாக பணியாற்ற சிறந்தவர் இல்லை என்பதை கலைஞர் உணர்ந்திருந்தார்.   அவர் கணித்ததைப் போலவே, வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்திய சமயத்தில், ராமானுஜம் ஆற்றிய பணி மகத்தானது.  கலைஞர் பள்ளிப் படிப்பை கூட முடிக்காதவர்தான்.  ஜெயலலிதாவும் நிரம்ப படிக்காதவர் என்றாலும், நிர்வாகரீதியாக சில கடுமையான முடிவுகளை எடுக்க தயங்காதவர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விபத்தில் முதல்வரானவர். அவருக்கு ஆளுமையும் இல்லை, நிர்வாகத்திறனும் இல்லை என்பதையே அவரின் செயல்பாடுகள் நிரூபித்து வருகிறது.
கொரொனா என்பது உலகம் இது வரை கண்டறியாதது.   இது புதிய நோய்.  இதை உடனடியாக அரசு கட்டுப்படுத்த முடியாது.  உலக நாடுகளே திணறி வருகின்றன என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால், இந்தியாவிலும் பல மாநிலங்கள் சிறப்பாக இந்நோய்பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனதானே??  நமது அண்டை மாநிலம் கேரளா நம்மை விட சிறப்பாக செயல்படுகிறதா இல்லையா ?   அதைப்போல நமது மாநிலமும் செயல்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு ?
தொடக்கம் முதலே தமிழக அரசுக்கு இந்நோய்தொற்றை எப்படி கையாள வேண்டும் என்பதில் எந்த புரிதலும் இல்லை. 24  மார்ச் அன்று தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.  மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது.  தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என்று அனைத்தும் மூடப்பட்டன.  சாலைகளில் வாகனங்கள் தடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அது வரை தமிழகத்தில் இருந்த நோய்தொற்று அனைத்துக்கும் காரணம் டெல்லி சென்று வந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்களே என்று, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இஸ்லாமியர்களின் குழு டெல்லி செல்லாமல் இருந்திருந்தால், தமிழகத்தில் கொரொனா வந்திருக்கவே வந்திருக்காது என்றே ஒரு கருத்து அப்போது நிலவியது. அந்த சமயங்களில் பத்திரிக்கையாளர்களை அடிக்கடி சந்தித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரொனா குறித்து பயப்பட ஒன்றுமே இல்லை என்றே கூறி வந்தார்.
மார்ச் 25 முதல் பொது முடக்கம் தொடங்கினாலும், ஒரு நாளைக்கு சராசரியாக 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்லக்கூடிய கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில், எவ்விதமான தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  அந்த சந்தைக்கு பொறுப்பான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சம்பிரதாயமாக ஓரிரு முறை சந்தையை பார்த்து வந்து விட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.   அரசு கோயம்பேடு சந்தையில் கொரொனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக கூறினார்.  தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கையில், கோயம்பேடு சந்தையில் ஒரு கொரொனா உற்பத்தி மையம் உருவாகி வருவதை தடுக்க அமைச்சரோ, அதிகாரிகளோ தவறி விட்டனர்.    கோயம்பேடு சந்தை சி.எம்.டி.ஏவின் கீழ் வருகிறது.   சிஎம்டிஏவின் செயலாளராக இருப்பவர், இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன்.  இவருக்கு கோயம்பேடு சந்தையை கண்காணிப்பதை தவிர்த்து வேறு எந்த பணியும் இல்லை.  ஆனால், இந்த கார்த்திகேயன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏப்ரல் 2ம் வாரத்தில் கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தையில் முதல் தொற்று விபரம் தெரிந்த பிறகுதான் அரசு லேசாக அசைந்தது.   அது வரை,  பயப்பட எதுவுமே இல்லை என்று சாதித்து வந்த அரசாங்கத்தின் கவனம், கோயம்பேடு பக்கம் திரும்பியது.  சென்னை மாநகரில் தொற்று அதிகமாகியது.   சென்னை மாநகரை கண்காணிக்க மட்டும்,  ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் ஏழு ஆண்டுகள் சுகாதாரத் துறை செயலராக இருந்தவர். நியமிக்கப்பட்ட முதல் நாளே கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக சந்தை மூடப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.  இதையடுத்து சந்தை 29 ஏப்ரல் வரை மூடப்பட்டது.   புதிய சந்தை திருமழிசையில் உருவாக்கப்பட்டது.
இதை பொதுமுடக்கம் தொடங்கிய 25 மார்ச் அன்றே ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறதா இல்லையா ?  இதற்குள் கோயம்பேடு சந்தை மூலமாக நோய்தொற்று தமிழகம் முழுக்க பரவியது. நாள் ஆக ஆக தொற்று அதிகரித்துக் கொண்டே சென்றது
இந்த கோயம்பேடு தொற்று பரவியதற்கு முழு காரணமும், இச்சந்தைக்கு பொறுப்பான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சி.எம்.டிஏ செயலர் கார்த்திகேயன் ஐஏஎஸ் மட்டுமே.   இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  குறைந்தபட்சம் துறை மாற்றம் கூட இல்லை.   இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்திறன்.

கார்த்திகேயன் ஐஏஎஸ்
அரசினால் நோய் பரவலை முழுமையாக தடுத்திருக்க முடியாது என்பதே யதார்த்தம்.  ஆனால், கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.  நோய் பரவல் அதிகமானால் என்ன செய்ய வேண்டுமோ அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.   ஆனால் இது எதையும் அரசு செய்யவில்லை என்பதே உண்மை.
மார்ச் முதல் வாரத்தில் என்னிடம் பேசிய, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் ஒரு மூத்த மருத்துவர், “ஜூன் இறுதியில் நோய் தொற்று உச்சத்தை தொடும்.   ஒரு நாளைக்கு, அரசு மருத்துவமனைகளில் அட்மிஷனுக்காக 3000 முதல் 5000 பேர் வருவார்கள்.   தமிழக மருத்துவமனைகளில் மொத்தம் 90 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.  இது போதாது.  ஜூலை மாதத்தில் ஒன்றரை லட்சம் படுக்கைகள் தேவைப்படும். 
 இப்போதே, புதிய இடங்களை தெரிவு செய்துதற்காலிக படுக்கைகளை உருவாக்கி, மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.  நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்க குறைந்த சதவிகித மருத்துவர்களே பயிற்சி பெற்றுள்ளார்கள். இதர மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.  
 ஒரு கட்டத்தில், மருத்துவர்கள், எந்த நோயாளியை காப்பாற்ற முடியும், யாரை காப்பாற்ற முடியாது என்ற அடிப்படையில் அட்மிஷன் போடலாமா வேண்டாமா என்ற சூழலும் வரும்.  அத்தகைய சூழலையும் எதிர்பார்த்து அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.   மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே மருத்துவர்கள் அனுமானம் செய்ததை அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், விஜயபாஸ்கரும், பீலா ராஜேஷும், எந்தத் தயாரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
அனைத்து மருத்துவ துணை இயக்குநர்களோடும், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், வீடியோ கான்பரன்ஸ் மூலம்,  விவாதித்துக் கொண்டிருந்தார்.   அதில் பங்கு பெற்ற ஒரு மருத்துவ துணை இயக்குநர்,  “காலையில 7 மணிக்கு வந்து நைட் வரைக்கும் வேலை செய்றோம். இந்த அம்மா வீடியோ கான்பரன்ஸ்ல வந்து, இந்த டீட்டெயில்ஸ் குடுங்க, அந்த டீட்டேயில்ஸ் குடுங்கன்னு கேப்பாங்க. வாட்ஸப்புல ஒரு மெஸேஜ் அனுப்புனாலே அவங்க கேக்கற டீட்டெயில்ஸை அனுப்பத்தான் போறோம்.  இதுக்கு எதுக்கு வீடியோ கான்பரன்ஸ்ல தெனமும் 2 மணி நேரம் மீட்டிங்க்குன்னு புரியல.  தெனமும் ரெண்டு மணி நேரம் வேஸ்ட் ஆகுது” என்றார்.
இப்போது வரும் நோயாளிகளை உள்நோயாளிகளாக அனுமதிக்க வேண்டியதில்லை.  நோய் அறிகுறி இல்லாதவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தலாம்” என்றார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்.  அவர் மார்ச் முதல் வாரத்தில் சொன்னதை ஏப்ரல் கடைசி வாரத்தில்தான் அரசு செயல்படுத்த தொடங்கியது. அந்த சமயத்தில், விஜயபாஸ்கர், புதிய கொரொனா வார்டுகளை மருத்துவமனைகளில் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் கொரோனாவுக்காக தனியான கட்டடமோ, மருத்துவமனையில் புதிதான வார்டுகளோ திறக்கப்படவில்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுகளில் உள்ள நோயாளிகளை இடம் மாற்றிவிட்டு அதை கொரோனா வார்டாக மாற்றுகிறார்கள். இதில் என்ன சாதனை இருக்கிறது? ஆனால் இதில் விளம்பரம் தேடுவதிலேயே அமைச்சர் குறியாக இருந்தார். தொலைகாட்சிகளில் இந்த வார்டுகள் திறக்கும் ‘விளம்பரங்கள்’ வருகிறதா என்பதை உறுதி செய்யவும் அவர் தயங்கவில்லை. ஒவ்வொரு நாளும், கொரொனா தடுப்பில் உயிரை துச்சமாக மதித்து களத்தில் நிற்கும் ஒரு மாபெரும் போர் வீரனாக தன்னை சித்தரித்துக் கொள்வதில் விஜயபாஸ்கர் கவனமாக இருந்தார்.

இருந்த ஒரே பேஷண்ட்டும் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதால், தமிழகம் கொரொனா இல்லாத மாநிலம் என்று விஜயபாஸ்க்கர் தம்பட்டமாக 10 மார்ச் அன்று வெளியிட்ட அறிவிப்பு.


கொரொனா நாளுக்கு நாள் தீவிரமாக பரவுவது நமக்கு தெரியாமல் இருக்கலாம்.  ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முதல்வருக்கும் தெரியாமல் இருக்குமா ?  ஆனால், இருவரும்,  ஒவ்வொரு வாரமும், வார இறுதியில் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார்கள்.  இந்த நெருக்கடியான நேரத்தில், இவர்கள், தலைமையகத்தில் இருந்து அதிகாரிகளை வழிநடத்த வேண்டாமா ?

பீலா ராஜேஷ் ஐஏஎஸ்
உண்மை நிலை என்னவென்றால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் என்று ஒருவர் மீதும் கட்டுப்பாடு இல்லை.   ஒரு செயலிழந்த, திறனற்ற முதல்வராகவே இருந்து வருகிறார். பீலா ராஜேஷ் ஜூன் 2017 முதல் நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறையின் ஆணையராக செயல்பட்டு வந்தார்.  இத்துறை பணம் கொழிக்கும் துறை.   21 ஆகஸ்ட் 2017ல், ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வராக பொறுப்பேற்று, இதர துறைகளோடு அவருக்கு நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டது. நாளாக ஆக, பன்னீர்செல்வத்துக்கு தெரியாமலேயே, பீலா ராஜேஷ் தனி வசூலை தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பன்னீர்செல்வம், பீலா ராஜேஷை மாற்றியே தீர வேண்டும் என்று பழனிச்சாமியிடம் வலியுறுத்த, 24 டிசம்பர் 2018 அன்று, பீலா ராஜேஷ், நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறையின் ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர்,  எத்தனையோ திறமையான ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்க, அரிதிலும் அரிதானவர் இவர்தான் என்று, விஜயபாஸ்கர் 17 பிப்ரவரி 2019அன்று,  பீலா ராஜேஷை சுகாதாரத் துறை செயலராக்கினார்.
அன்று முதல், சுகாதாரத்துறையை, வல்லமை பொருந்திய விக்டோரியா மகாராணி போலத்தான் ஆண்டு வருகிறார் பீலா ராஜேஷ்.  அவர் வைத்ததுதான் சட்டம்.  அவர் பிறப்பித்ததுதான் உத்தரவுகள்.   மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும், பாடாய்படுத்தினார் பீலா ராஜேஷ்.
இது தவிர்த்து, செயலரும், அமைச்சரும் சேர்ந்து நாலாபுறமும் வசூல் வேட்டை.  இப்படி வாழ்க்கை செம்மையாக போய்க் கொண்டிருந்த நேரத்தில்தான் கொரொனா வந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, சுகாதாரத் துறையில், என்ன நடக்கிறது, எத்தகைய வசூல் நடக்கிறது என்பது நன்றாகவே தெரியும்.  அவர் ஒரு புறம் வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் இதை கண்டுகொள்ளப் போவது இல்லை.  நிலைமை நன்றாக இருக்கையில் பரவாயில்லை.  ஒரு கொள்ளை நோய் பரவும் சமயத்திலாவது ஒரு திறமையான அதிகாரியை சுகாதாரத்துறைக்கு நியமிக்க வேண்டுமா இல்லையா ?  ஆனால் இதற்குக் கூட அதிகாரமற்றவராகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “கொரொனா பரவலை தமிழக அரசு கையாண்டு வரும் விதம் பல வகைகளில் இந்த அரசை அம்பலப்படுத்தி உள்ளது. முதலில், இந்த அரசின் மோசமான பலவீனம் வெளியாகியது–அனுபவமின்மை.  அனுபவின்மை காரணமாகவும், பலவீனமான தலைமையின் காரணமாகவும், நிர்வாகம் பல மட்டங்களில் செயலிழந்தது.  கொரொனா பரவலை கையாள்வதில் களத்தில் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் இல்லாத காரணத்தால், நிலைமை கையாள முடியாத சூழலை எட்டியுள்ளது. 
 அண்டை மாநிலமான கேரளா, நோய் தொற்று ஏற்பட்ட நாள் முதல், இதை ஒரு போர்க்கால தீவிரத்தோடு கையாண்டு வருகையில், தமிழக அரசோ, கொரொனா தமிழகத்தில் கால் வைக்காது என்று இறுமாந்து இருந்தனர்.  தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், தமிழகத்தில் ஒரு நாள் கூட மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அனுபவமில்லாத சுகாதாரத் துறை செயலரும், ஒரு மாபெரும் கொள்ளை நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.  
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்க பீலா ராஜேஷ் மறுத்தார்.  காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரிடர் மேலாண் துறை போன்ற இதர துறைகளோடு ஒருங்கிணைந்து கூட்டாக பணியாற்ற மறுத்தார் பீலா ராஜேஷ். அவர் சொல்வதைத்தான் அவரை விட பணியில் பல ஆண்டு மூத்த அதிகாரிகளும் கேட்க வேண்டும் என்று நினைத்தார். இது பல நடைமுறை சிக்கல்களை உருவாக்கியது.
 முதலமைச்சரால் எந்த துறையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.  இதற்கு ஒரு சிறந்த உதாரணம், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.   ஒரு கொள்ளை நோய் பரவிக் கொண்டிருந்த காலத்தில், கோயம்பேடு சந்தை, முழுவீச்சில் செயல்பட அனுமதிக்கப்பட்டது.   இது ஒரு பெரும் சிக்கலில் மொத்த தமிழகத்தையும் தள்ளியது. 
 சென்னை மற்றும் தமிழகமெங்கும் இன்று பரவி வரும் இந்த கொள்ளை நோய்க்கு தமிழக அரசின் நிர்வாக செயலிழப்பு மட்டுமே காரணம். நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வதற்கு தமிழக அரசின் தவறான அணுகுமுறை மற்றும், நிர்வாக செயலிழப்பே பெரும் காரணமாக இருக்கிறது.  நோய்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகளை தொடர்ந்து அரசு மறைத்து வருகிறது.  நோய் பரவலை கண்காணித்தல், நோய் தொற்றாளர்களின் பயண  / நகர்வு விபரங்களை வெளியிடுதல் என, அனைத்து விஷயங்களையும்  அரசு மறைத்து பொய் கூறியதன் விளைவு, நோய் அசுர வேகத்தில் பரவியது.   இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.  
 இப்போது அரசு, மக்கள் நோய் பரவலை தடுக்க உதவ வேண்டும் என்று கேட்கிறது.  உண்மை என்னவென்றால், அரசு, வெளிப்படையாக தகவல்களை பகிர்ந்து, மக்களை எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். வெளிப்படை தகவல்களால் மக்கள் எச்சரிக்கை அடைந்திருப்பார்கள்.
 வெளிப்படையாக தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால், மக்கள் பதற்றமடைந்தனர்.   இப்போது நிலைமை கைமீறிப் போன நிலையில், அரசு, மக்களை கொரொனாவோடு வாழ பழகிக் கொள்ளச் சொல்கிறது.  இதைவிட ஒரு அவமானம் ஒரு அரசுக்கு இருக்க முடியுமா இதை விட ஒரு அரசு நிர்வாகத்தின் தோல்விக்கு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா
 ஒரு உலகளாவிய கொள்ளை நோய் பரவல்மிக மிக அலட்சியமான முறையில், தமிழக அரசால் கையாளப்பட்டது.   எவ்விதமான அறிவியல்பூர்வமான ஆய்வும் இல்லாமல், தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல், போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
 தமிழகம், இந்தியாவிலேயே, மிகச் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட ஒரு மாநிலம்.  மிகச் சிறந்த மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்ட மாநிலம்.  சரியான முறையில் வழிகாட்டும் தலைமை இல்லாமல் போனதால், இவை அனைத்தும் வீணாகிப் போய் விட்டது என்றே நான் கருதுகிறேன்.   தலைமையின் தோல்வியே நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரும் சிக்கலுக்கான மூல காரணம். 
 முதலமைச்சர் மற்றும், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர், தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கின்றனர்.   மக்களின் மீதான அக்கறையின் அடிப்படையில் அல்ல என்பது ஒரு வேதனையான உண்மை” என்றால் அந்த டெல்லி பத்திரிக்கையாளர்.”
இதை விட மற்றொரு வேதனையான உண்மை, இந்த கொடிய கொள்ளை நோய் நேரத்தை பயன்படுத்தி, அமைச்சர்களும், அதிகாரிகளும் மிக மிக மோசமான இறுதி நேரகொள்ளையில் இறங்கியிருக்கிறார்கள் என்பதே.   அனைத்து துறைகளிலும் ஊழல் வரைமுறையற்று நடைபெற்று வருகிறது. கொரொனாவை பயன்படுத்தி டெண்டர் இல்லாமலேயே, தமிழக அரசின் அனைத்து கொள்முதல்களும் செய்யப்படுவதால், ப்ளீச்சிங் பவுடர் முதல் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வரை, அனைத்தும் மூன்று மடங்கு விலையில் வாங்கப்பட்டு வருகின்றன.
கொரொனா கட்டுப்படுத்தலில், இன்று நிலைமை கைமீறிப்போய்விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.   ஒரு செயல்படாத, ஊழல் கறை படிந்த சுகாதாரத் துறை செயலரை மாற்றக் கூட முடியாத நிலையில்தான் முதல்வர் பழனிச்சாமி இருக்கிறார்.  மாறாக,  அரசு கொரொனா பரவலை கையாளும் முறையை கேள்வி கேட்டதாக கூறப்படும் அதிகாரி மாற்றப்படுகிறார்.

நாகராஜன் ஐஏஎஸ்
நாகராஜன் ஐஏஎஸ் என்ற அதிகாரி, 27 ஜூன் 2018 முதல், 28 ஏப்ரல் 2019 வரை, சுகாதாரத் துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். மக்களவை தேர்தல் சமயத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக ஏப்ரல் 2019ல் நியமிக்கப்படுகிறார்.   மதுரையில், 1500 சத்துணவுப் பணியாளர்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல், ஊழல் இல்லாமல் நியமனம் செய்த ஒரே காரணத்துக்காக அவர், அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு, 4 ஜூன் 2019ல், தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
இங்கே பணியாற்றிக் கொண்டிருந்தவரை, மீண்டும், சுகாதாரத்துறைக்கு வருமாறு அழைத்தது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.   செப்டம்பர் 2019ல், சுகாதாரத்துறையின் கீழ் வரும், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
3 ஜூன் 2020 அன்று, இவர் இப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு, மீண்டும், தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
2018 முதல், நாகராஜன்  ஐஎஸ்ஸுக்கு அனைத்து மாறுதல் உத்தரவுகளிலும் கையெழுத்து போட்டது எடப்பாடி பழனிச்சாமிதான்.   சுகாதாரத்துறைக்கு மீண்டும் நாகராஜன் வந்து, ஒரு வருடம் கூட முடியவில்லை.  இப்போது, ஒரு கொள்ளை நோய் பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையில் பணியாற்றி அனுபவம் மிகுந்த இவரை எதற்காக மீண்டும் மாற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி கேள்வி கேட்டிருக்க வேண்டும்.  ஆனால், கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டார்.
சுகாதாரத் துறையில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் மிக்க ராதாகிருஷ்ணன ஐஏஎஸ்ஸை, இந்த கொரொனா தடுப்பு காலத்தில் கூட சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்க எடப்பாடி பழனிச்சாமியால் முடியவில்லை.
இதுதான் இன்று தமிழக அரசு கொரொனாவை கையாளும் நிலைமை.   தமிழக சுகாதாரத்துறையால் தமிழக மக்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.
சென்னையில், ஒரு காவல் துறை அதிகாரியின் ஓட்டுநருக்கு கொரொனா பாசிட்டீவ் என்று முடிவு வந்தது.  அவரும், அவரோடு பணியாற்றிய இதர அதிகாரிகளும், சோதனைக்காக வியாழனன்று (4 ஜூன் 2020)  கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.   ஆறு மணி நேரம் கழித்தும் அவர்களுக்கு சோதனைகள் செய்யப்படவில்லை.
சென்னை மாநகர ஆணையரின் கடிதம் வாங்கி வாருங்கள் என்று கூறியுள்ளனர்.  உண்மை என்னவென்றால், சோதனை செய்வதற்கான கருவிகள் மருத்துவமனையில் இல்லை என்பதே. கூடுதல் எஸ்பி அந்தஸ்த்தில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலைதான்.   நம்மைப் போன்ற சாதாரணமானவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
மேலும், கொரொனா தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டும் என்று செயலாளர் பீலா ராஜேஷும், அமைச்சர் விஜயபாஸ்கரும், மிக மிகத் தீவிரமாக முனைந்து வருகின்றனர்.     முன்பு நம்மிடம் பேசிய, ராஜீவ் காந்தி மருத்துவமனை மூத்த மருத்துவர், ஜூன் முதல் வாரம் முதல், ஒரு நாளைக்கு மூன்று முதல், நான்கு இறப்புகள் கணக்கில் காட்டாமல் மறைக்கப்படுகிறது. என்கிறார்.  இழுபறி நிலையில் இருக்கும் நோயாளிகளோ, இறந்த நிலையில் வருபவர்களோ, அப்படியே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் கொரொனா இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை,  என்கிறார்.
மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் முதல் கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில், 4 ஜுன் அன்றுதான், தமிழக அரசு, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆணை வெளியிடுகிறது.   அரசு கொரொனா பரவலை எப்படி கையாள்கிறது என்பது இப்போது புரிகிறதா?
வரும் நாட்களில், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சுகிறேன். கடந்த சில நாட்களாக அரசு வெளியிடும் இறப்பு பட்டியல்களில் குறைந்த வயதுடையோரும் இறப்பதை பார்க்க முடிகிறது.  ஜூலை மத்தியில், சென்னையில் மட்டும், ஒன்றரை லட்சம் கொரொனா தொற்றுகள் இருக்கும் என்று சென்னை மருத்துவ பல்கலைக்கழகத்தின் நோய்தொற்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இணைப்பு. இவர்கள் இது வரை கணித்த எண்ணிக்கை துல்லியமாக இருந்தது.
என் அன்பார்ந்த நண்பர்களே,  எங்கு சென்றாலும் முகக் கவசம் அணியுங்கள்.  சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.   வீட்டில் உள்ள முதியவர்களை வெளியே விடவே விடாதீர்கள்.   நோய் தொற்று உள்ள ஒருவரிடம் முகக்கவசம் அணியாமல் ஒரு மீட்டர் தொலைவில் நீங்கள் இருந்தாலே நோய் நிச்சயம் பரவும் என்பது மருத்துவர்கள் கூறும் உறுதியான தகவல்.
நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அரசு நம்மை காப்பாற்றாது.  பேய்கள் அரசாளும் காலமிது

கருத்துகள் இல்லை: