வெள்ளி, 12 ஜூன், 2020

தமிழக டாக்டர் கண்டுபிடிப்பைப் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு ( கொரோனா மாத்திரை)

‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்...
மின்னம்பலம : கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் கண்டுபிடித்த இரண்டு ரூபாய்க்கான கொரோனா மருந்து குறித்து விரைவாகப் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால், அந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஜூன் 12) காணொலிக் காட்சி மூலம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை இரண்டு ரூபாய்க்கும் குறைவானது. இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்குப் பயனளிக்கும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையைப் பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
ராஜ்</

கருத்துகள் இல்லை: