திங்கள், 8 ஜூன், 2020

பார்க்கவே பயந்து கொண்டிருப்பவர்களை எப்படி மருத்துவர்கள் என்று அழைப்பது?

சாவித்திரி கண்ணன் : இவர்கள் மருத்துவத் தொழிலுக்கே தகுதியற்றவர்கள் என்ற தெளிவுக்கு நாம் உடனடியாக வந்தாக வேண்டும்!
பகை நாடு படை எடுத்து வரும் போது தொடை நடுங்கி ஒளிந்து கொள்பவனை நாம் எவ்வாறு வீரன் என்று ஏற்கமுடியாதோ…,
அது போல, உபாதைகளில் தவித்தும்,உயிருக்கு போராடியும் வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்தவர்களை,பார்க்கவே பயந்து கொண்டிருப்பவர்களை எப்படி மருத்துவர்கள் என்று அழைப்பது? ’
பிரசவ வலியோடு துடிக்கும் கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு பதிமூன்று மணி நேரமாக, ஏழு மருத்துவமனை அலைந்தும் எங்கும் கொரோனா பயத்தால் ஏற்கமறுத்ததால், அப் பெண் உயிரிழந்துள்ளார்’ என்ற சம்பவம் ஒன்றே போதும்..இன்று மருத்துவத் துறை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள!
கடந்த இரண்டரை மாதங்களாக லட்சக்கணக்கான நோயாளிகள் எந்த சிகிச்சையும் தரப்படாமல் மறுக்கப்பட்டுள்ளனர் என்றால்,இவர்கள் எதற்கு மருத்துவத் தொழிலுக்கு வர வேண்டும்…?ஆஸ்பத்திரி கட்ட வேண்டும்?
உங்க யோக்கியதை தான் தெரிந்துவிட்டதே இன்னும் ஏன் நீங்களெல்லாம் மருத்துவர்களாகத் தொடர வெண்டும்…?தயவு செய்து உங்கள் மருத்துவமனைகளை அரசிடம் ஒப்படைத்து அதற்கான விலையை பெற்றுக் கொள்ளலாமே!

உங்களை மட்டும் குறைசொல்லிக் பயனில்லை,உங்களுக்கு கற்றுத் தரப்பட்ட கல்வியின் லட்சணம் என்னவோ…? அது தானே வெளிப்பட முடியும்!
அறுபது,எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும்,ஊரிலும் மருத்துவச்சியம்மா இருப்பாங்க! அவங்க செய்தி சொல்லி அனுப்பினால், ஓடோடி வந்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்து செல்வார்கள்! பல சிக்கலான பிரசவங்களையெல்லாம் கூட, நுணுக்கமாக கையாண்ட மருத்துவச்சிகளின் பெருமைகளை இன்றும் நம் வீட்டில் இருக்கும் தாத்தா,பாட்டிகள் சொல்வார்கள்!
இன்றைக்கு பெரிய,பெரிய மருத்துவ கல்லூரிகள்,பிரம்மாண்ட மருத்துவமனைகள், நுட்பமான கருவிகள்,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வெள்ளைக் கோட்டு வேந்தர்கள்…அனைத்துமே பயனற்று, நாட்டில் புரிபடாத ஒரு நோய் வந்தவுடன் புறமுதுகு காட்டி,பின்னங்கால் புழுதிபட தனியார் மருத்துவர்கள் ஓடி ஓளிந்து கொண்டார்கள் என்றால்,அந்தக் கல்வியை பலஹீனமென்பதா? கற்றுத் தந்தவர்களின் தரத்தை,கல்விக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்குவதா..?என்றெல்லாம் தானே நமக்கு தோன்றுகிறது.
அரசு மருத்துவமனைகள் எல்லாம் அல்லோகலப்பட்டு,அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் அவஸ்தைபட்டு,உயிரிழந்து,அதன் வழி ஒருவாறாக, ’’என்ன நோய்?,என்னவெல்லாம் முயற்சிக்கலாம்.. என்று ஓரளவு தெளிவைப் பெற்றுத் தந்ததும் தனியார் மருத்துவமனைகள் களத்தில் குதிக்கின்றன!
இது தான் கல்லா கட்ட சரியான தருணம் என இந்திய மருத்துவ கவுன்சில் இஷ்டத்திற்கும் ஒரு தொகையை அறிவிக்கிறார்கள்! அதற்கு மாறாக, அரசும் நிபுணர்களைக் கலந்து பேசி ஒரு தொகையை நிர்ணயித்து அறிவிக்கிறது!
நான் விசாரித்த வரை, ’’தனியார்மருத்துவமனைகளின் கொரானா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மிக தாராளமானது’’ என்றே அரசு மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
’’என்னை கலந்து பேசாமல் நீ கட்டணம் அறிவித்தது தவறு’’ என்று அரசு அவர்களைக் கண்டிக்கவில்லை.
’’நாங்கள் முன்பு அறிவித்தை வாபஸ் வாங்கிவிட்டோம்.அரசு கட்டணத்தை ஏற்கிறோம்’’ என தனியாரும் சொல்லவில்லை.
நடைமுறையில் தனியார் நிர்ணயித்தது தான் ’இம்லிமெண்டேசன்’ ஆகிக்கொண்டுள்ளது.
டெல்லியில் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதையும், அதையும் ஏஜெண்டுகள் வைத்து கள்ளத்தனமாக வசூலிப்பதையும் கண்டித்துள்ளார்,டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.’’விரைவில் நடவடிக்கை பாயும்’’ எனவும் எச்சரித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஒரு மூத்த அரசு மருத்துவரிடம் பேசிய போது, ‘’இங்கும் டெல்லி போலவே அட்டூழியங்கள் நடக்கின்றன...!கொரனாவிற்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் அதிகம் என்பது கூட அடுத்தபட்சம், ஆனால்,அங்கே போகிறவர்கள் பிழைப்பார்களா..?என்பதற்குத் தான் உத்திரவாதமில்லை…! உண்மையில் சிகிச்சை தருவதற்கான மனபலமும் ,மனநலமும் அவர்களிடம் இல்லை என்பது தெளிவு’’ என்றார்.
இந்த அநீதிகளையெல்லாம் அரசு கவனத்திற்கு கொண்டு போவதன் மூலம் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கொள்ளவும் இன்று வழியில்லை. மருத்துக் கல்வியை கொள்ளையடிக்கும் சூதாட்டமாக்க துணை போன அரசாங்கம் எதை தட்டிக் கேட்டு நம்மை காப்பாற்றப் போகிறது…?
அறம்சாரா கல்விக்கு உரம்போட்டு வளர்த்தால், அநீதியான சிகிச்சைகளைத் தானே அறுவடை செய்தாக வேண்டும்.
முடிவாக ஒன்றை சொல்கிறேன். நோய் வராமல் தவிர்த்துக் கொள்வது நம் வசம் தான் இருக்கிறது. அப்படியே வந்தாலும்,பதட்டமில்லால்,தவறான சிகிச்சைக்கு நம்மை ஒப்புக் கொடுக்காமல் தற்காத்துக் கொள்வதும் நம் வசம் தான் உள்ளது.
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாள

கருத்துகள் இல்லை: