ஞாயிறு, 7 ஜூன், 2020

தமிழகத்தில் நாளை முதல் உணவகங்களுக்கு அனுமதி!

தமிழகத்தில் நாளை முதல் உணவகங்களுக்கு அனுமதி!தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 8) முதல் ஹோட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள உணவகங்கள் தயாராகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, புதிய தளர்வுகளுடன் இம்மாதம் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி 8ஆம் தேதி (நாளை) முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதியளித்துள்ளது. ஆனால், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை இயக்கக் கூடாது உட்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கான ஒழுங்கு விதிகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அதில், “உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்ப வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. ஏ.சி எந்திரங்களை பயன்படுத்தாமல் காற்றோட்டத்துக்கான அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.
அனைத்து மேஜைகளிலும் சானிட்டைசர் வசதி செய்து தர வேண்டும். கழிவறைகளை நாளொன்றுக்கு ஐந்து முறை சுத்தம் செய்ய வேண்டும். தரை, அலமாரிகள், சமையல் அறை, லிப்ட் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். அடிக்கடி கைபடக்கூடிய மேஜைகள், பணம் செலுத்துமிடம், லிப்ட் பட்டன் போன்றவை சானிட்டைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
சமூக இடைவெளிக்காக மேஜைகளில் சேவை இல்லை என்ற பலகை வைக்கப்பட வேண்டும். இடவசதி பற்றிய தகவல் பலகையை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். உணவை கையாள்வோர், கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. காய்கறி, அரிசி, பருப்பு போன்றவற்றை கழுவி உபயோகப்படுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல் அதிபர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் வசந்தபவன் ரவி, “தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள், டீக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் ஏ.சி. வசதி அவசியமாகிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்காக ஏ.சி மீது அதற்கான பில்டரை போட்டு இயக்கலாம். அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். ஹோட்டல்களை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுவித்துள்ளார்.
-ராஜ்

கருத்துகள் இல்லை: