வெள்ளி, 12 ஜூன், 2020

ஜெ.அன்பழகன் .. அரிதாகிக் கொண்டிருக்கும் உட்கட்சி ஜனநாயகத்திற்கான பேரிழப்பாகவே..

சாவித்திரி கண்ணன் : எல்லோரும் எழுதுகிறார்கள் என்பதற்காக நானும் எழுதுவதா?
அதிலும் முற்றிலும்,பேசியிராத,பழகாத ஒருவரை பற்றி ஏன் எழுத வேண்டும்?
என்ற கேள்விகளை எனக்குள் கேட்டுப் பார்த்துக் கொண்ட பிறகு தான் எழுத துணிந்தேன்.
தி.மு.கவில் அறிவுபூர்வமாகவும்,கொள்கை தளத்திலும் பேசக் கூடிய விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் எனக்கு பழக்கமில்லை.
சமீபத்தில் இறந்த அன்பழகனிடம் எனக்கு பழக்கமில்லை என்றாலும் அவர் நடவடிக்கைகள், பேச்சுகள்,செயல்பாடுகள் ஆகியவை குறித்த செய்திகள் அவ்வப்போது என் கவனத்தை ஈர்த்தன.
கட்சித் தலைமையை நிழல் போலத் தொடர்வது..,
தலைமைக்கு கூழைக் கும்பிடு போடுவது...,
மாற்றுக் கருத்தை மனதிற்குள் மறைத்து, தலைமைக்கு தலையாட்டுவது..
ஆகிய இழி குணங்களை அறவே தவிர்த்தவராக அவர் இருந்தார்.
இயல்பிலேயே அவரிடம் ஒரு அசாத்தியமான தன்நம்பிக்கையும்,துணிச்சலும் இருந்தன. அது கடினமான,சவாலான பணிகளை கையிலெடுத்து செய்யக் கூடிய களப் பணியாளரிடம் மட்டுமே காண முடிந்த அருங்குணங்களாகும்.

ஒரு முறை அவர் ஸ்டாலினைப் பார்க்க வருகிறார். அப்போது அவரருகில் கட்சியின் இரண்டு சீனியர் தலைவர்களும்,முன்னால் அமைச்சர்களானவர் களுமானவர்கள் ஒட்டிய வண்ணம் நின்றிருந்தனர். வந்தவர்,அவர்கள் இருவரையும் பார்த்து,
‘’இந்தாங்க..இப்படி நகராமல் ஒட்டி நின்னுகிட்டிருந்தால்,மத்தவங்க வந்து எப்படி அவர்கிட்ட பேச முடியும்? கொஞ்சம் தள்ளி நில்லுங்க..''
என்று கம்பீரமாக அதட்டி சொல்லிவிட்டு, ஸ்டாலினிடம் ஏதோ ஒன்றை தந்துவிட்டு,மிக சுருக்கமாகப் பேசிவிட்டு நகர்ந்தார்.இது நானே பார்த்தது!
இன்னொரு சம்பவம் கட்சியின் லோக்கல் நிர்வாகி ஒருவர் சொன்னது. கட்சியின் சீனியர் தலைவர் ஒருவர் அந்த லோக்கல் நிர்வாகியை பொறுப்பிலிருந்து எடுக்க அழுத்தம் தந்துள்ளார். அதற்கு முன் ஸ்டாலின் இவரை கூப்பிட்டு விசாரிக்கிறார்.
அப்போது அந்த சீனியர் தலைவரும் உடனிருந்து உள்ளார்! அன்பழகன் பொரிந்து தள்ளிவிட்டாராம்!
‘’இவர் சொன்னாருன்னு நீங்களும் கேட்கிறீங்களே..இவருக்கு என்ன தெரியும்,இங்க பவுசா வந்து உட்கார்ந்துட்டு இப்படி சொல்லத்தான் தெரியும்…! அவனல்லாம் ராப்பகலா கட்சிக்கு உழைக்கிறவன்…அதுவும் டவுசர் போட்ட காலத்தில் இருந்து கட்சியைத் தவிர வேறொன்றும் தெரியாமல் ஒடாய் தேஞ்சவன்… அவன் தப்பு பண்ணியிருந்தால் நீங்க கூப்பிட்டு கேட்கிறவரைக்கும் விட்டுவைக்கிறவனா நான்? இதை இதோட விட்டுருங்க..’’என்று சொல்லிவிட்டு வந்தாராம்!
அந்த அளவுக்கு அடிமட்ட கேடர்களோடு அவருக்கு ஒரு நெருக்கமும்,பிணைப்பும் இருந்தது. அடிமட்ட கேடர்களோடு நெருக்கம் பாராட்டுவது என்பது ஒரு நுட்பமான கலை. அவர்கள் மிகவும் சென்சிட்டிவ் ஆனவர்கள், தன்மான உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்…!
படித்தவன்,பதவி ஆசை உள்ளவன் வளைந்து கொடுத்து நடப்பான்! ஆனால்,உண்மையான தொண்டன் தனக்கு மரியாதை இல்லாவிட்டால் அதை சகித்துக் கொள்ளமாட்டன். அவனவன் உழைப்புக்கும், ஈடுபாட்டுக்கும் உரிய இடம் கிடைக்காவிட்டால் நேருக்கு நேராக நியாயம் கேட்டுவிட்டு தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவான்,அல்லது சொல்லாமலே ஒதுங்கிவிடுவான். தென் சென்னையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள், அவர்களின் குடும்ப நிலைமை ஆகியவற்றை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் அன்பழகன்!
வடபழனியில் கட்சியின் ஒரு மூத்த நிர்வாகி அங்குள்ள இளைஞர்களை தலையெடுக்கவிடாமல் ஒன்மேன் ஷோவாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். சில வருடங்களாக இதை அப்சர்வ் செய்து கொண்டே வந்த அன்பழகன், தீடீரென்று ஒரு நாள் சம்மந்தப்பட்டவரோட இடத்திற்கே சென்று,
’’அண்ணே, நீங்க இனிமே சும்மா இருங்க..எல்லாம் பசங்க பார்த்துகிடுவாங்க..’’ என்று நீண்டகால பிரச்சினையை உடனே முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.
அவர் கட்டபஞ்சாயத்து செய்பவர் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் போலீசால், நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாத பலவருடப் பிரச்சினைகளை மிக எளிமையாக அவர் முடித்து வைத்திருக்கிறார் என்றே நான் கேள்விப்படுகிறேன்! வழ,வழவென்று அவரும் பேசமட்டார், மற்றவரையும் பேசவிடமாட்டார். சட்டென்று பிரச்சினையின் மையத்தை தொட்டு, நேர்பட பேசுவார் என அறியவந்தேன்!
முதலில் நீங்க ஒரு பஞ்சாயத்தில் இறங்குகிறீர்கள் என்றால்,இரு தரப்பும் அதற்கு உடன்பட்டால் மட்டுமே செய்யமுடியும். நயவஞ்சகமாக ஒரு தரப்புக்கு சாதகமாகவும்,மற்றொரு தரப்புக்கு அநீதியாகவும் பேசினால்,அது சில சமயங்களில் பெரும் விபரீதத்தில் தான் முடியும். அதுவும் இவர் சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு ’டவ்வான பைட்’ தருபவர். ஜெயலலிதாவிற்கு தகவல் போனால் குண்டாசில் தூக்கிப் போட நல்ல சந்தர்ப்பம் என்று போட்டிருக்கமாட்டார்களா?
அதுவும் தியாகராய நகர் மாதிரியான மிகப் பெரிய கோடீஸ்வர செல்வாக்கான வணிகர்களிடம் பெருமதிப்பு பெற்றவராக கடைசி வரை அன்பழகன் இருந்திருக்கிறார் என்றால், எந்த ஒரு நிகழ்வுக்கென்று அவர் போனாலும் லட்சலட்சமாக நன்கொடை வசூலிக்க முடிந்திருக்கிறது என்றால்,பரஸ்பர பலன்கள் இல்லாமல் இவை சாத்தியமில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
ஏடுகளைப் படித்து வாழ்க்கையில் ஏற்றம் பெருவது என்பது ஒருவிதம்! ஆனால்,மனிதர்களைப் படித்து,செல்வாக்கானவனாக உயர்வது என்பது எல்லோராலும் முடியக் கூடியதல்ல! அது அன்பழகனால் முடிந்தது என்பது தான் அவருடைய சிறப்பு.
பொதுவாக இன்று எல்லா கட்சிகளிலுமே உட்கட்சி ஜனநாயகம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி வருகிறது. ஆனால்,அதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு கட்சிக்குள்ளும் விதிவிலக்காக ஒரிரு ஜனநாயக குரல்கள் ஒலிக்கவே செய்கின்றன.திமுகவில் உட்கட்சி ஜனநாயகத்தின் வலுவான குரல் என்றால் யாருக்குமே சட்டென்று நினைவுக்கு வரக் கூடியவராக அன்பழகன் தான் இருந்தார்.
திமுக தலைமை தவறான முடிவை எடுக்கும் போதெல்லாம் அதை தட்டிக் கேட்பதில் ஒரு சிறிதும் தயக்கமில்லாமல் அவர் இருந்தார் என்பது தான் அவரது ஆகச் சிறந்த பண்புகளில் ஒன்றாக நான் பார்க்கிறேன்.
பிரசாந்த் கிஷோரை திமுக தலைமை தேர்தல் வியூக நிபுணராக அறிவித்த போது,’’இது தேவையில்லாதது. நீண்டகால நிர்வாகிகளான எங்களுக்கு தெரியாத எதை எங்கிருந்தோ வரும் அவர் சொல்லிவிடப் போகிறார்…?’’ என்று கேட்டாதாயிருக்கட்டும்,
’’ கட்சியில் தவறு செய்பவர்கள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் தலைமை அமைதி காத்தால்,அப்புறம் அது என்ன தலைமை?’’ என்று கேட்டதாக இருக்கட்டும்…அவருடைய குரல் கட்சிக்குள் குறைந்து கொண்டே வரும் உட்கட்சி ஜனநாயகத்தை உயிர்பிக்கும் குரலாக ஒலித்ததாகவே நான் பார்த்தேன்.
அவருடைய இழப்பு என்பது திமுகவில் அரிதாகிக் கொண்டிருக்கும் உட்கட்சி ஜனநாயகத்திற்கான பேரிழப்பாகவே நான் உணர்கிறேன்

கருத்துகள் இல்லை: