வியாழன், 11 ஜூன், 2020

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்தினத்தந்தி  :அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை மோசம் அடைந்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், இப்போது கொரோனா பரவலில் 75 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் 10 நாடுகளில் இருந்துதான் வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.
கடந்த 10 நாட்களில், 9 நாட்கள் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது; ஒரு நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் அவர் ஆறுதல் அளிக்கும் ஒன்றையும் குறிப்பிட்டார். அது உலகின் பல நாடுகள் சாதகமான அறிகுறிகளை பார்க்கின்றன என்பது எங்களுக்கு ஊக்கம் அளிக்கிற தகவலாக இருக்கிறது என்பதாகும்.
இந்தியாவுக்கும் ஆறுதல் அளிக்கும் தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பொதுவாக காய்ச்சல், வறட்டு இருமல், உடல் தளர்ச்சி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாசனை மற்றும் சுவை அறியாமை…. இப்படி கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் பட்டியல் நீளுகிறது.
ஆனால் இப்போது சமீப காலமாக நாம் அடிக்கடி கேள்விப்படுகிற ஒன்றாக ‘அறிகுறிகளற்ற கொரோனா’ அமைந்துள்ளது. இந்த அறிகுறிகளற்ற கொரோனா பலருக்கும் இருக்கிறது.
இந்த அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை. காரணம், இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான்கெர்கோவ் தெரிவித்து இருக்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான்கெர்கோவ்
அவர் சொல்வது இதுதான்-
எங்களிடம் உள்ள தரவுகள், ஒரு அறிகுறியற்ற கொரோனா தொற்றுள்ள நபர், மற்றொருவருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார் என்பது மிகவும் அரிதாகவே தோன்றுகிறது. இது மிகவும் அரிது.
இப்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிற நபர்கள், தொடர்பு தடம் அறிதல் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.
இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதில்லை என்பது தொடர்பு தடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது.
இதெல்லாம் மருத்துவ இதழ்களில் இனிதான் வெளியாக வேண்டியதிருக்கிறது. இந்த தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்கிறது.
இத்தகைய கண்டுபிடிப்புகள், சிங்கப்பூரில் ஒரு ஆய்வறிக்கையில் வெளியாகியும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறுகிறார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
கடந்த வாரம் சீனா, கொரோனா வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிற இடமான உகான் நகரில், 90 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடித்திருக்கிறது. இந்த பரிசோதனையில், அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உடைய நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 300 தான்.
இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவி இருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை.
இதில் என்ன சிறப்பு என்றால், இப்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிற நபர்கள் பயன்படுத்துகிற டூத்பிரஷ், மக்கு (குவளை), முக கவசம், டவல் போன்ற தனிப்பட்ட உடைமைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் 300 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 1,174 பேரை பரிசோதனை செய்ததில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று தாக்கம் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. இதெல்லாம் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிறவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா எளிதாக பரவாது என்பதற்கு ஆதாரமாக அமைகின்றன.
அதுமட்டுமல்ல, நமது நாட்டில் இப்போது பரவலாக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று இருக்கிறது என்று கண்டறியப்பட்டால், நாம் அதற்காக பயப்படவோ, கலங்கவோ தேவையில்லை!

கருத்துகள் இல்லை: