திங்கள், 16 மார்ச், 2020

கனடாவில் ஈழத்தமிழ் பெண் சுட்டுக்கொலை

   வீரகேசரி :  கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் அஜின்கோட்( Agincourt) பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்னொரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிறேம்ப்ளே(Brimley Rd) மற்றும் ஷெப்பர்ட்(Sheppard Ave.E) சந்திப்புக்கு அன்மித்த முராய் (Murray Ave) பகுதியிலிருந்து துப்பாக்கிச்சூடு தொடர்பான தகவல் பொலிசாருக்கு கிடைத்ததையடுத்து, அங்குள்ள வீடொன்றுக்கு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அந்த அழைப்பு வந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, வீட்டில் இரண்டு பெண்கள் உயிராபத்தான் நிலைமையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் தீபா சீவரத்தினம் உயிரிழந்தார். மற்றைய பெண் ஆபத்தான நிலைமையை கடந்து விட்டார்.

நேற்று சனிக்கிழமை நடந்த பிரேத பரிசோதனையில், தீபாவின் மார்பில் பாய்ந்த தோட்டாவே உயிரிழப்பிற்கு காரணமென தெரிவிக்கப்பட்டது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகின்ற சந்தேக நபர் பற்றிய தகவலை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் 5 அடி 10 அங்குலம் உயரத்தை உடைய, குட்டையாக முடிவெட்டிய கருப்பு நிறத்தவர் என்றும் அவர் வெளிர் நிறத்திலான காற்சட்டையும் கரிய நிறத்திலான மேலாங்கியையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
தீபா ஒன்ராறியோவில் இந்த ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட 13வது நபர் ஆவர். அத்துடன், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 9வது நபர்

கருத்துகள் இல்லை: