சனி, 21 மார்ச், 2020

கைத்தட்டல்கள் உதவாது, நிதியுதவி வேண்டும்: ராகுல்

கைத்தட்டல்கள் உதவாது, நிதியுதவி வேண்டும்: ராகுல் மின்னம்பலம் :  கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானத்தை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் பல வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருந்த தினசரி தொழிலாளர்களின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், சலுகைகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மார்ச் 21) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் நம் பலவீனமான பொருளாதாரத்தின் மீதான நடத்தப்பட்ட தாக்குதல். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “வெறும் கைத்தட்டல்கள் அவர்களுக்கு ஒரு போதும் உதவாது, இன்றைய தினம் அவர்களுக்குத் தேவை பண உதவி, வரிச் சலுகைககள் ஆகும். அத்தோடு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் நிவாரணம் அளிக்க வேண்டும். பெரிய பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: