புதன், 18 மார்ச், 2020

Contagion திரைப்படம் அரசியல், மருந்து கம்பெனிகளின் குற்றங்ளை படம் பிடித்து காட்டுகிறது.. இன்று Corona Virus

Karthikeyan Fastura : Corona Virus இன்று உலக மக்கள் அனைவரின் வாழ்விலும்
மிகப்பெரிய சமூக-பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது. 2011 இல் வெளிவந்த Contagion என்ற திரைப்படம் இன்று நம்மை ஆட்டி வரும் கரோனா வைரஸ், அதன் பாதிப்புகள், அதன் பின்னுள்ள பிரச்சனைகள், அரசியல், மருந்து கம்பெனிகளின் குற்றங்கள் அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.
Beth என்ற பெண்மணி, தனது பிசினஸ் tripஐ முடித்துவிட்டு ஹாங்காங்கிலிருந்து சிகாகோவிற்கு திரும்பி வருகிறாள். திரும்பி வந்த இரண்டே நாளில் நோய் முற்றி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறக்கிறார். அவருடன் இருந்த மகனும் பாதிக்கப்பட்டு அடுத்த இரு தினங்களில் இறக்கிறான். கணவருக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை.
இந்த இடைப்பட்ட பயணத்தில் அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள், ரெஸ்டாரண்டில் உடன் விருந்து உண்டவர்கள், படகில் பயணித்தவர்கள், வீட்டில் இறக்கி விட்ட டேக்சி டிரைவர் என்று ஒருவர் விடாமல் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
பேத்தின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும்போது தான் அந்த வைரஸின் தன்மை புரியும். அட்டவணையில் இல்லாத ஒரு புது வைரஸ் ஆக இருக்கும். அதன் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும். உடனே அது எபிடிமிக் இன்டலிஜன்ஸ் மையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கேட் வின்ஸ்லெட் இதை விசாரிக்க ஆரம்பித்து பேத்தின் பயணத்தில் உடன் இருந்த அத்தனைபேரையும் தனிமைப்படுத்த தனியே ஒரு பேஸ்கட்பால் மைதானத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்றி சிகிச்சைகள் வழங்குவார்.

இதற்குள் நாடு முழுவதும் விமான நிலையங்கள் வழியாக அந்த வைரஸ் சென்று சேர்ந்திருக்கும். பின் அமெரிக்கா மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள நாடுகள் அனைத்திலும் அந்த வைரஸ் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கும். உலகத்தில் 12 பேர்களில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிக்கும் அதேபோல இறப்பு விகிதம் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கும் என்று கணிப்பார்கள்.
அப்போதுதான் இதன் தீவிரம் உலகமெங்கும் புரியத் தொடங்கும். நடுவில் நம்ம ஊர் ஹீலர் பாஸ்கர் போன்று அங்கே ஒருவன் வீடியோ பிளாக்கில் தான் அந்த வைரஸினால் பாதிக்கப்பட்டதாகவும் Forsythia என்ற ஹோமியோபதி மருந்தினால் தான் குணம் ஆனதாகவும் வீடியோவில் போடுவான். அதை நம்பி லட்சக்கணக்கான மக்கள் அந்த மருந்தினை தேடி அலைவார்கள். அதற்கு அவன் கொடுக்கும் விளக்கம் தான் சுவாரசியம். மக்கள் மருந்துக்கு அலைகிறார்கள். அவர்களுக்கு மருந்து என்ற பெயரில் எது கொடுத்தாலும் உட்கொண்டு குணமாக காத்திருக்கிறார்கள். நீங்கள் மாதக்கணக்கில் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்கிறீர்கள். அது அவர்களுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை. நான் அவர்களுக்கு சைட் எஃபக்ட் இல்லாத ஒரு மருந்தை சொல்கிறேன். அதை சாப்பிட்டு மருந்து சாப்பிட்டோம் (placebo) என்ற நம்பிக்கையில் குணமடைகிறார்கள். இதில் என்ன தவறு.? இதற்கு முன் உருவாகிய வைரஸை ஒழிக்க நீங்கள் கொடுத்த மருந்துகள் பல நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்கி தானே ஒழிந்தது? அதில் இறந்தவர்கள் எத்தனை பேர்? அதோடு ஒப்பிடுகையில் நான் செய்தது ஒன்றும் குற்றமில்லை. மேலும் டிவியில் அவனோடு விவாதிக்கும் எல்லிஸ் சீவர் என்ற நோய்த்தடுப்பு துறையின் தலைவர் தன் குடும்பத்தை மட்டும் முன்னமே அலர்ட் செய்து அனுப்பி வைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவான்.
அதன் பிறகு இந்த நோய் தடுப்பு பிரிவில் மருத்துவர் கேட் வின்ஸ்லெட்டும் பாதிக்கப்பட்டு அவர் கட்டிய பேஸ்கட் பால் மைதான மருத்துவமனையில் அவரே சேர்ந்து தனிமைப் படுத்திக் கொள்வார்.
இந்த வைரசை அழிக்க முடியாமல் இந்த வைரஸ் பரவும் வேகத்தை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பார்கள். அதை எல்லோருக்கும் வினியோகித்து வைரஸ் பரவும் சங்கிலியை உடைப்பார்கள். இவ்வாறாக அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுவார்கள். இதற்குள் அமெரிக்காவில் மட்டும் 25 லட்சம் பேர்கள் இறந்திருப்பார்கள். உலகமெங்கும் 2.6 கோடி இறந்திருப்பார்கள்.
இறுதியில் பேத்திற்க்கு அந்த நோய் எப்படி ஏற்பட்டது என்பதை காண்பிப்பார்கள். ஒரு மருந்து நிறுவனம் தன்னோட மருத்துவ கழிவுகளை காட்டில் கொட்டும்போது அங்கிருந்த வவ்வால் மூலம் பன்றிக்கு பரவி அதிலிருந்து அதை சமைக்கும் சமையல்காரரின் கைக்கு சென்று, அந்த கையை பேத் அவரைப் பாராட்டி கை குலுக்கும் போது அவளுக்கு பரவியிருக்கும். இதில் படத்தில் சொல்லாமல் சொல்லும் விஷயம் மருந்து கண்டுபிடித்த நிறுவனம்தான் வவ்வால்கள் வாழும் அடர்ந்த காட்டுப்பகுதியை அழித்து அதுகளை இடம்பெயர செய்து இந்த நோயை பரப்புவதற்கும் காரணமாக இருக்கும்.
கரோனா வைரஸ் கதையிலும் வவ்வால் மூலமாகத்தான் பரவியதாக அந்த index case (யார் முதன் முதலில் நோயை பரப்பினார்களோ அவர்களைப் பற்றி விசாரிப்பது) பதிவாகியுள்ளது. வவ்வால் எங்கிருந்து கொரோனா வைரஸை வாங்கி வந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் எந்த மருந்து கம்பெனி அல்லது எந்த நாடு சிக்குமோ தெரியாது.
ஆனால் இன்று இந்த உலகம் முழுக்க இதனால் சிக்கிக் கிடக்கிறது. சமூக வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் முற்றிலுமாக குலைந்து போயிருக்கிறது. மனிதன் தன் சுயநலத்திற்காக செய்யும் செயல்களில் முதலில் பாதிக்கப்படுவது அவனே

கருத்துகள் இல்லை: