புதன், 18 மார்ச், 2020

விதவை' பெயர் வேண்டாம்; விவாகரத்துக் கொடுங்கள்!' -நீதிமன்ற படியேறிய நிர்பயா குற்றவாளியின் மனைவி

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்
vikatan.com - ராம் சங்கர் : டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசும்போது, ``பெண் தன் கணவர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து பெறலாம்" என்று தெரிவித்துள்ளார். இந்தியாவை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோர் தற்போது திகார் சிறையில் உள்ளனர். குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவால் ஏற்கெனவே இரண்டு முறை தூக்குத் தண்டனைகள் ஒத்திவைக்கப்பட்டன. மனுக்களின் மீதான விசாரணைகளுக்குப் பின்னர் மார்ச் 20-ம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்பட உள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நீதிமன்றத்தில் குமார் சிங்கின் மனைவி அளித்துள்ள மனுவில், ``விதவை என்ற பெயருடன் வாழ விரும்பவில்லை. என் கணவர் நிரபராதி. அவரை தூக்கிலிடுவதற்கு முன்பு சட்டபூர்வமாக விவாகரத்துப் பெற விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற மார்ச் 19-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது

இதுதொடர்பாக அக்‌ஷய் சிங்கின் மனைவியின் வழக்கறிஞர் முகேஷ் குமார் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``அக்‌ஷய் குமாரிடமிருந்து விவாகரத்து பெற அவரின் மனைவிக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில்தான் குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். கணவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் இருக்கும் பட்சத்தில் அவருடைய மனைவி விவாகரத்துப் பெற முடியும்" என்று கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசும்போது, ``பெண் தன் கணவர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்றால் விவாகரத்துப் பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான ஒத்திகைகளும் இன்று நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது. சட்டத்துறை வல்லுநர்களும், `அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதால் தண்டனையை தாமதப்படுத்த வாய்ப்பில்லை' என்று கருதுகின்றனர்.
ஆனால், அவர்களது தூக்குத் தண்டனையைத் தாமதப்படுத்த வழக்கறிஞர்கள் உதவியுடன் போராடினர். மேலும், சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்துக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு அனுப்பியுள்ளனர்

கருத்துகள் இல்லை: