ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

சிகரெட் புகை போல ஊதுவத்தி சாம்பிராணி புகையும் உடலுக்கு தீங்கு

வாஷிங்டன்:
ஊதுவத்திகளை அதிகளவில் பயன்படுத்துவதால்
வீட்டுக்குள்ளே காற்று மாசு அடைந்து, நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமய சடங்குகள் நடக்கும்போதும், வாசனைக்காகவும் ஊதுவத்திகள் கொளுத்தப்படுகின்றன. ஐக்கிய அரபு குடியரசில் 94 சதவீத வீடுகளில் ஊதுவத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.ஊதுவத்தி புகையால் கண், மூக்கு, தொண்டையில் பிரச்னைகள், தோலில் எரிச்சல், ஆஸ்துமா, தலைவலி, இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. நுரையீரல் செல்லின் கட்டமைப்பு முறையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. சுவாசம் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக சமைக்கும் அடுப்பிலிருந்து எழும் புகையால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஊதுபத்தியும் கார்பன் மோனாக்சைடை வெளியிட்டு அதேபோன்ற காற்று மாசை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் ஊதுவத்திகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் கொள்ளைநோய்கள் ஆராய்ச்சி துணை பேராசிரியர் காரின் யேத்ஸ், அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிலர் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறையில் ஊதுவத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டன. ஐக்கிய அரபு குடியரசில் சாதாரணமாக வீடுகளில் எந்த அளவுக்கு ஊதுவத்தி பயன்படுத்தப்படுமோ அதே அளவிலான ஊதுவத்திகள் புகையவிடப்பட்டன.

அந்த அறையில் மனித நுரையீரல் செல்கள் வைக்கப்பட்டிருந்தன. 3 மணி நேரத்துக்கு புகை அந்த செல்களை சூழ்ந்து இருக்கும்படி செய்யப்பட்டது. பின்னர் புகையால் எழுந்த துகள்கள் படியும் வகையில் 24 மணி நேரத்துக்கு அந்த செல்கள் பாதுகாக்கப்பட்டன. ஆய்வின்போது ஊதுவத்தியிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன், பார்மால்டிஹைடு ஆகிய வாயுகளின் அடர்த்தி குறித்தும் ஆராயப்பட்டது.பின்னர் அந்த செல்லை ஆராய்ந்தபோது சிகரெட் புகையால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் அந்த செல்களில் இருப்பது தெரியவந்தது. dinakaran.com

கருத்துகள் இல்லை: