திங்கள், 5 ஆகஸ்ட், 2013

வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் படுகொலை ! இன்று காலை சேலத்தில் பயங்கரம்

சேலம்: இன்று காலை வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் படுகொலைசேலத்தில் வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் இன்று அதிகாலை கலெக்டர் அலுவலகம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சேலத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பாண்டியராஜன் தெருவில் வசித்து வந்தவர் ஆர்.இளம்வழுதி (வயது 45). பிரபல வக்கீல். தினமும் இவர் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். இதுபோல் இன்று காலை 5.30 மணி அளவில் வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது இருட்டாக இருந்தது. இவர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் கண் பகுதியில் வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் அதே இடத்திலேயே இறந்தார். இதை அந்த வழியே சென்ற சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சேலம் டவுன் போலீசாரும், போக்குவரத்து பிரிவு போலீசாரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொன்றது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என தெரியவில்லை. இதுபற்றி அறிந்ததும் இளம் வழுதியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு அலறியடித்தபடி வந்தனர். அவர்கள் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.
வக்கீல் இளம்வழுதி கொலையை அறிந்த சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி உடனே சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பிணத்தை பார்த்து நேரில் விசாரித்தார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப் படை அமைத்தார். இதில் துணை கமிஷனர்கள் பாபு, பிரபாகரன் மற்றும் உயர் போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் விசாரித்து வருகிறார்கள். சேலம் பிரபல வக்கீல் கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட இளம்வழுதிக்கு கவிதா (வயது 35) என்ற மனைவியும், பரத்(வயது 12), சரத் (வயது 7) என்ற மகன்களும் உள்ளனர். பரத் 4–ம் வகுப்பும், சரத் யூகேஜியும் படித்து வருகிறார்கள்.
இளம்வழுதி பல வருடத்திற்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்தார். பின்னர் கட்சியை விட்டு ஒதுங்கி வக்கீல் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளம்வழுதி கொலையை அறிந்த சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.பொன்னுசாமி, செயலாளர் ராஜா மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் திரளாக ஆஸ்பத்திரிக்கு வந்து இளம்வழுதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஜி.பொன்னுசாமி, ராஜா கூறியதாவது:–
வக்கீல் இளம்வழுதி கொடூரமாக தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் யார்? என போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும். இந்த கொலையை கண்டித்து இன்று ஒரு நாள் சேலம் கோர்ட்டுக்கு வக்கீல்கள் செல்லாமல் புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை நடந்த இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. malaimalar.com

கருத்துகள் இல்லை: