வியாழன், 8 ஆகஸ்ட், 2013

இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவம் -ஏ.கே. அந்தோணி

இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவ சிறப்புப் பிரிவு -ஏ.கே. அந்தோணி டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுதான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டை அதிரவைத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டார். ஆனால் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முரண்பாடு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேற்று முடங்கின. இதைத் தொடர்ந்து நேற்று மாலை பாரதிய ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது இன்று அந்தோணி புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வார் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் அறிக்கையை தாக்கல் செய்த ஏ.கே. அந்தோணி, எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் முன்பு அறிக்கையை வெளியிட்டேன். தற்போது ராணுவ தலைமை தளபதி அங்கு நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு என்னிடம் நடந்தது பற்றி விவரித்தார். இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் என்பவை பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது. இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவினர்தான். நமது பொறுமையை மிக எளிதாக பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு. தற்போதைய சம்பவத்தின் எதிரொலி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் பாகிஸ்தானுடனான உறவிலும் இருக்கும் என்று எச்சரித்தார். ஏ.கே. அந்தோணியின் அறிக்கையை வரவேற்ற பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், தேசப் பாதுகாப்பில் ஒருபோதும் அரசியல் செய்யமாட்டோம் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: