திங்கள், 21 பிப்ரவரி, 2011

லிபியாவில் பெரும் வன்முறை: 140 பேர் பலி.


லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இறந்தவர்களையும் சேர்த்து கடந்த 4 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் மொம்மர் கடாபி. இந்த நூற்றாண்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சர்வாதிகளுள் இவரும் ஒருவர்.

டுனீஷியா மற்றும் எகிப்தில் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றங்களின் விளைவாக இப்போது லிபியாவிலும் ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டத்தை அடக்க அதிபர் கடாபி ராணுவத்தை ஏவியுள்ளார். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். நேற்று லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்காஷி நகரில் போராட்டத்தில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது அதில் ஈடுபட்ட மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது ராணுவம்.

இதில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த 4 தினங்களில் இறந்தவர் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 140 என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள்.

இருந்தும் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அங்கு நேற்று மாலை 2 மணியிலிருந்து இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது. வெளியுலகத் தொடர்புகளை முற்றாக நிறுத்தவும் ராணுவம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, வீடு விடாக புகுந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்க கடாபியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பதட்டத்தில் உள்ளன.

இந்தப் போராட்டம் காரணமாக, லிபியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் திருப்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. பல நாடுகள் லிபியாவில் உள்ள தங்கள் மக்கள் பத்திரமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

லிபியாவில் இந்தியர்கள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: