சனி, 20 மார்ச், 2010

T.N.A ,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டு;ள்ளது. அதில் இனப்பிரச்சினையின் தோற்றம், அதன் வளர்ச்சி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இனப்பிரச்சினையின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதில் அவர்கள் வகித்த பங்குபற்றி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியபோது, தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பவற்றை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கவில்லை என்பதை தெரிவித்திருக்கிறது. ஒஸ்லோவில் புலிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் அமையும் என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி வந்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக்கட்சி, பின்னர் இவர்கள் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவைதான். இவர்களது காலத்தில் ஆரம்பித்த இனப்பிரச்சினை இவர்களது தவறான அணுகுமுறையால் காலத்துக்கு காலம் இருந்த உரிமைகளையும் இழந்து இன்று தமிழ் மக்கள் அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தம், மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்தம் பற்றியும் அவை கைவிடப்பட்டது பற்றியும் கூறப்பட்டுள்ளது. டட்லி செல்வா ஒப்பந்தம் பற்றி கூறுகையில்  "1960ல் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடைசெய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயத்திற்கும் பிரதமர் டட்லி செனநாயக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி அமைச்சரவையில் இணைந்துகொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்ற காரணத்தாலும் இலங்கை தமிழரசுக்கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது." என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால் அமைச்சரவையில் இருந்து விலகியதாக கூறுவது தங்கள் தவறை மறைப்பதாகும்.
1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி டட்லி செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததால், தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சரானார். கிடைக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவது தவறில்லை என்று அப்போது அரசில் தாம் சேர்ந்ததற்கான காரணமாக தமிழரசுக் கட்சியால் சொல்லப்பட்டது. இந்த அணுகு முறை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலங்களில் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தன.
1968 நடுப்பகுதியில் டட்லி செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தமது கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று டட்லி தெரிவித்துவிட்டார். அதன் பின்னரும் திருச்செல்வம் அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க தமிழரசுக்கட்சி எதிர்கட்சி பக்கம்; இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது.
திருமலை திருக்கோணேஸ்வரம் கோவிலை புனிதநகராக்குவது குறித்து ஆராய திருச்செல்வம் அமைத்த குழுவை சேருவலை புத்த பிக்குவின் எதிர்ப்புக்குப் பணிந்த டட்லி திருச்செல்வத்துக்கு அறிவிக்காமலே அவர் அமைத்த குழுவை கலைத்துவிட்டார்.அதன் பின்னரே 1968 நவம்பரில் அமைச்சர் திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்து விலகினார்.
ஆனால் இவர்கள் செய்திருக்கவேண்டியது செல்வாவுடன் டட்லி ஏற்படுத்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தமுடியாது என டட்லி கூறிய உடனேயே திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்து விலகி அரசுக்கான ஆதரவை தமிழரசுக் கட்சி விலக்கிக் கொண்டிருக்கவேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் தமிழரசுக் கட்சி அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை நடத்துவார்கள். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் இவர்களது போராட்டம் ஓய்ந்து விடும் இது கடந்தகால வரலாறு.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மு..திருச்செல்வம் அமைச்சராக இருந்தபோது அரசகரும மொழிச் சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கம் எமது அரசுக்கு கிடையாது என்று தமிழரசுக்கட்சி அங்கத்தவன் என்ற முறையில் கூறவிரும்புகிறேன் என்று கூறியிருந்தமை (மூதவை ஹன்சாட் 1966) தமிழரசுக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ள பந்தத்தை விளங்கிக் கொள்ள ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இழந்துபோன இறையாண்மையை மீளப்பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்றைய எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது என்று விஞ்ஞாபனத்தில் கூறிவிட்டு அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.
1977ல் தனிநாட்டுக்கான ஆணையையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மக்களிடம் கேட்டுப்பெற்றனர். ஆனால் அதை கைவிட்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஆட்சியில் மாவட்டசபைகளை ஏற்றுக்கொண்டதுடன் அதற்கான தேர்தல்களில் இளைஞர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தேர்தலில் போட்டியிட்டனர்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் 1994லும் 2001லும் கிடைத்த இரு சந்தர்ப்பங்களை தவற விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதிலும் அவற்றை தவறவிட்டு சிங்கள அரசு மேலேயே குறை கூறிக்கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள்.
2000ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரை பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறை அகற்றப்பட்ட அந்த சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்தது?
அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் சட்டமூலப் பிரதிகளை பாராளுமன்றத்தில் எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அந்த சட்டமூலத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டதாலேயே தாம் எதி;ர்த்ததாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது. அதன் பின்னரும்கூட கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசுக்கெதிரான போராட்டங்களில் கூட்டாக செயற்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1960ல் சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சி;கும் இடையே அரசமொழிக் கொள்கைகள் தொடர்பாக ஒரு பேச்சவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் பாடசாலைகளை தேசியமயமாக்குவது தொடர்பாக அரசு ஒரு அறிவித்தலை வெளியிட்டது. உடனே தமிழ் அரசுக் கட்சி அரசமொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காது பேச்சுவார்த்;தையை முறித்துக்கொண்டு அரசமொழிக் கொள்கையையும், பாடசாலை தேசியமாக்கலையும் கண்டித்து தீர்மானம் ஒன்றை கட்சி நிர்வாகக் குழுவில் நிறைவேற்றியது. .இது இவர்களுடைய வர்க்க குணாம்சத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது.
1965ல் பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டனர் என்பதை விட புறக்கணித்தனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். 1965ல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாமையால் சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழ் அரசுக்கட்சினரின் ஆதரவை நாடினார். பண்டா செல்வா ஒப்பந்தத்தை சிம்மாசனப் பிரசங்கத்தில் உள்ளடக்குவதாகவும் ஒரு வருட காலத்துள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் தவறினால் ஆதரவை வாபஸ் பெறலாம் எனவும் தெரிவித்திருந்தார். அப்போது தமிழரசுக்கட்சி சிறிமாவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அந்த அசை உருவாக்கும் சக்தியாக இருந்து உரிமைகளை பெற்றிருக்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரித்து கடைசியில் ஏமாந்தனர்.
2001ம் யூலை 10ல் ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்து நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைக்க மக்கள் விருப்பை அறிய சர்வசன வாக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கொழும்பில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு அரசியலமைப்பை மாற்றக்கூடாது என வாக்களிக்குமாறு மக்களை கேட்பதாக தீர்மானம் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்திருந்தன. தற்போதைய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என கூறிவந்தவர்கள் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றக்கோரும் சர்வசன வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவர்களுடைய சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு இது ஒரு உதாரணமாகும்.
1956 ம் ஆண்டில் இருந்து மக்கள் ஆணையை கேட்டு கேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை என்றால் அதற்கு தலைமைகளில்தான் குறைபாடு இருக்கவேண்டும்.
இந்த நிலையில் மீண்டும் இந்த தலைவர்கள் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப நிலையில் நின்றுகொண்டு இன்று மீண்டும் மக்கள் ஆணையை கேட்கின்றனர். எத்தனை காலம்தான் ஏமாற்றப் போகிறது இந்த கூட்டமைப்பு.
17.03.2010 தாயகக்குரல்

கருத்துகள் இல்லை: