செவ்வாய், 20 நவம்பர், 2018

நடிகை பிரமிளா எங்கே? அமெரிக்காவில் வெள்ளைக்கார கணவர் குழந்தைகளோடு ஜாலியாக உள்ளார்



Vikatan : சிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்! ஆ.சாந்தி கணேஷ் : நடிகை பிரமிளா
அந்த நாள் ஞாபகம்படங்கள் உதவி : ஞானம் : `ஹாய்! நான் நடிச்ச படம்தான் பார்த்துட்டிருந்தேன்... கரெக்ட்டா கால் பண்ணியிருக்கீங்க! 
ஐ’ம் இன் குட் மூட். பேச ஆரம்பிக்கலாமா?’’ - குரலில் குதூகலத்துடன் பேசினார், திருமதி பால் செலஸ்ட்டா. இப்போது லாஸ்ஏஞ்சல்ஸில் வசித்துவரும் இவர், ஒரு காலத்தில் நடிகர் சிவாஜியின் கதாநாயகி, கே.பாலசந்தரின் கதைநாயகி. தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பாலியல் தொழிலாளியாகத் துணிச்சலாக நடித்தவர். ‘தங்கப்பதக்கம்’ படத்தில் சிவாஜி ‘சோதனை மேல் சோதனை’ என்று பாடும்போது, ‘மாமா, காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா...’ என்று அழுதபடியே இவர் பேசும்  வசனத்தை மறக்க முடியுமா? யெஸ், நடிகை பிரமிளாதான் திருமதி பால் செலஸ்ட்டா. ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்துகொண்டு,  லாஸ்ஏஞ்சல்ஸில் செட்டிலாகிவிட்டார். இப்போது 60-களின் ஆரம்பத்தில் இருப்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்.

 ‘`நான் தூத்துக்குடி பொண்ணு. வசதியான குடும்பத்தில் ஓர் அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கையோடு பிறந்தேன். போபாலில் அப்பா பார்த்திட்டிருந்த பிசினஸ் பாதிக்கப்பட்டதால, திருச்சியில் குடும்பத்துடன் செட்டிலானோம். பிசினஸ் மேலும் மேலும் நலிவடைய, குடும்பம் வறுமையில வாட ஆரம்பிச்சது. அந்த வயசுல அதெல்லாம் எனக்குப் புரியலை. நான் ஒரு சிவாஜி பைத்தியம். வீட்டுக்குத் தெரியாம தோழிகளோடு சேர்ந்து ஜாலியா சிவாஜி படம் பார்த்துட்டிருந்தேன். ஒருநாள், என்னுடைய நோட்டு ஒன்றை எதேச்சையா அப்பா திறந்து பார்க்க, அதுக்குள்ளேருந்து பொலபொலன்னு சிவாஜி போட்டோக்களா கொட்டிச்சு. எல்லாம், எனக்கு மிட்டாய் வாங்க கொடுத்த காசுகளைச் சேர்த்துவெச்சு வாங்கின போட்டோஸ். அப்பா என்னை வெளுத்துட்டாரு.

அடி வாங்கின சம்பவம் நடந்து ஒரு வருஷம் ஆகியிருக்கும். தள்ளாடிக்கிட்டு இருக்கிற பிசினஸை எப்படியாவது தூக்கி நிறுத்தணும்னு அப்பா, சென்னைக்கு ஒருத்தரைப் பார்க்கிறதுக்காகக் கிளம்பிக்கிட்டிருந்தார். சென்னைக்குப் போனா சிவாஜி சாரைப் பார்க்கலாமேன்னு, ‘நானும் சென்னைக்கு வருவேன்’னு அடம்பிடிச்சேன். அன்னிக்கு அப்பா நல்ல மூட்ல இருந்திருப்பார்போல. சரின்னுட்டார். சென்னைக்கு வந்து, அப்பாவின் வேலைகள் எல்லாம் முடிஞ்சதும், கோடம்பாக்கம் ஸ்டுடியோவுக்குப் போகணும்னு அப்பாகிட்ட கேட்டேன். அவருக்கும் சினிமா நடிகர்களைப் பார்க்கணும்னு ஆசை இருந்திருக்குமோ என்னவோ... என்னை அங்கே கூட்டிட்டுப் போனார். சச்சும்மா, செளகார் அம்மான்னு நிறைய பேரைப் பார்த்தேன். ஆனா, சிவாஜி சாரைப் பார்க்க முடியலை. ஊருக்குத் திரும்பி வந்துட்டோம். இதுக்கு நடுவுல என் போட்டோ ஒண்ணை தோழிகிட்ட கொடுத்திருந்தேன். அவளுடைய மாமா ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர். அவர் என் போட்டோவை
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி கிட்ட காண்பிக்க, அவருடைய சொந்தப் படத்துல அவர் மகனுக்கு ஜோடியா நடிக்க என்னை புக் பண்ணார். படம் பேரு ‘மீனவன் மகன்’. அட்வான்ஸாக 1,000 ரூபாயை வாங்கின அன்று ராத்திரி, எங்க வீட்டுல பயங்கர குழப்பம். `நம்ம வறுமைக்காக, பொம்பளப்புள்ளைய சினிமாவுல நடிக்கவைக்கு றோம்’னு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே அழுகை. அந்த 14 வயசுல எனக்கு அதெல்லாம் புரியலை. சந்தோஷமா அந்தப் படத்துல நடிச்சேன். ஆனா, படம் பாதியில் நின்னுபோச்சு. அந்தப் படத்துல வந்த என் ஸ்டில்ஸ் ஆங்கிலப் பத்திரிகை ஒண்ணுல வர, அதைப் பார்த்துட்டு,  ‘வாணிஸ்ரீ மாதிரி நல்லா இருக்காளே இந்தப் பொண்ணு’ன்னு மலையாளத்துல மூணு பெரிய பேனர்ல வாய்ப்புகள் வந்தன. ஒரே நேரத்துல மூணு படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.

மலையாளப் படங்களைப் பார்த்துட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ‘வாழையடி வாழை’ங்கிற படத்துல முத்துராமனுக்கு ஜோடியா என்னை நடிக்க வெச்சார்.  ‘சிரிச்ச முகமா புது ஹீரோயின் ஒருத்தி இண்டஸ்ரிக்கு வந்திருக்காளாமே’ன்னு விசாரிச்ச கே.பாலசந்தர் சார், ‘அரங்கேற்றம்’ படத்துல  நான் நடிக்கிறதுக்காக எங்கப்பாகிட்ட பேசினார். அது பாலியல் தொழிலாளி கேரக்டர்னு தெரிஞ்சவுடனே அப்பா ரொம்ப பயந்துட்டார். ஆனா, கே.பி. சார் அவரை கன்வின்ஸ் பண்ணி என்னை அந்தப் படத்துல நடிக்க வெச்சார். தமிழ்ல ரெண்டாவது படத்துலேயே பாலியல் தொழிலாளி கேரக்டர். போல்டா நடிச்சேன். ‘அரங்கேற்றம்' படத்துக்கப்புறம், நான் நடிச்ச படங்களைவிட வேண்டாம்னு ஒதுக்கின படங்கள்தான் அதிகம். அவ்வளவு பிஸியாகிட்டேன்’’ என்றவரை இடைமறித்து, ‘சிவாஜி சார்கூட நடிச்சது..?’ என்றோம், ஆர்வமிகுதியில்.

‘`சொல்றேன் அம்மாடி’’ என்றார் சிரிப்புடன். ‘`என்னைப் பார்த்துட்டு எம்.ஜி.ஆர் ‘நவரத்தினம்’, ‘நேற்று இன்று நாளை’ன்னு அவருடைய படங்கள்ல தொடர்ந்து நடிக்கக் கூப்பிட்டார். ஆனா, கான்ட்ராக்ட்டில் சைன் பண்ண எங்கப்பா சம்மதிக்கலை. எம்.ஜி.ஆர் கூட ஜோடியா நடிக்கிற கனவுல மண்ணு விழுந்துடுச்சு. அடுத்து சிவாஜி சார். அவர்கூட நான் நடிச்ச முதல் படம் ‘தங்கப்பதக்கம்’. அதில் அவருக்கு மருமகள் கேரக்டர். முதல் நாள் ஷூட்டிங்கே அவர்கூடதான். நானும் ஸ்ரீகாந்தும் மாலையும் கழுத்துமா வீட்டுக்குள்ள வருவோம். ‘அங்கேயே நில்லு’ன்னு சிவாஜி சார் என்னை அதட்டற மாதிரி சீன். நிஜமாவே பயந்துட்டேன். அந்த சீன்ல நான் நடுங்கினதெல்லாம் நடிப்பல்ல, நிஜம். அப்புறம் ‘கவரிமான்’ படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சப்போ, ‘உங்களைப் பார்த்தா எங்க அப்பாவைப் பார்க்கிற மாதிரியே பயமா இருக்கு’ன்னேன். அவர் உடனே, ‘அடி கழுதை, இந்தப் படத்துல நான்  உன் புருஷனா ஆக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு அப்பா மாதிரி பயந்து பயந்து நடிச்சா ஃபீல் சரியா வராது’னு சொல்லித் திட்டினார்.

சில காலம் வரைக்கும் தமிழ், மலையாளம்னு நிறைய படங்களில் நடிச்சேன். ஓஹோன்னு இருந்தேன். பிறகு எல்லா நடிகைகளுக்கும் மாதிரியே சான்ஸ் குறைஞ்சது. ரசிகர்கள் என்னை மறந்துடக்கூடாதுன்னு என் மரியாதை குறையுற மாதிரியான படங்கள்லகூட நடிச்சேன். இதற்கிடையில் என் கூடப் பிறந்தவங்க எல்லோரும் அமெரிக்காவில் செட்டிலாகியிருந்தாங்க. என்னையும் ‘வந்துடு’ன்னு எங்க அண்ணன் கூப்பிட்டாரு. இதுக்கு மேல இந்த ஃபீல்டுல இருந்தா துண்டு துக்கடா கேரக்டர்தான் வரும்னு தெரிஞ்சதால நானும் அமெரிக்காவுக்குப் போயிட்டேன்’’ என்கிறவர், தன் திருமண வாழ்க்கை பற்றிப் பேசுகிறார்.

‘`பால் செலஸ்ட்டா... முதன்முதலா அவரைப் பார்த்தப்போ ஹிப்பி மாதிரி நீளமா முடியெல்லாம் வெச்சிட்டிருந்தார். அண்ணன் சொன்னதால 1993-ல் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தங்கமான மனுஷன். எனக்குப் பிடிச்சதைத்தான் சமைப்பேன். ஒரு வார்த்தை சொல்லாம அமைதியா சாப்பிடுவார். அன்பு நிறைய இருந்தாலும், எங்க ரெண்டு பேருக்குமே சரியான வேலை இல்லை. அவருக்கு, போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா, பார்வையில் பிரச்னை இருந்ததால அந்தத் துறையில் வேலை கிடைக்கலை. டாலர் அச்சடிக்கிற இடத்துல இருந்து அதை டிரக்குல எடுத்துட்டுப் போய் வங்கிகளில், கம்பெனிகளில் சேர்க்கிற செக்யூரிட்டி வேலையில் ஜாயின் பண்ணார். இதுவும் கிட்டத்தட்ட போலீஸ் டிபார்ட்மென்ட் மாதிரிதான். இந்த வேலை கிடைக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது. ரெண்டு வருஷம் படிச்சு, எக்ஸாம் எழுதி, பாஸ் பண்ணி இந்த வேலையில் சேர்ந்தார். நான், கம்ப்யூட்டர்ல சால்டிரிங் வேலை, சேல்ஸ் வுமன் வேலைன்னு சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக்கிட்டிருந்தேன். ஏன்னா, எனக்கு பெருசா படிப்பில்லை. இங்கிலீஷ்கூட சரளமா வராது.
‘நீயும் என்னை மாதிரி செக்யூரிட்டி வேலைக்கு வந்துடு’ன்னு சொன்னார் பால். நான் பயந்தேன். ஆனா, பால் என்னை ஊக்கப்படுத்தினார். அவருக்காக கோர்ஸ்ல ஜாயின் பண்ணேன். நைட்டெல்லாம் அவர்கிட்ட டவுட் கேட்பேன். கடைசியா நானும் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டு, வேலையில் சேர்ந்துட்டேன். முதல் நாளே, டாலர் நோட்டுகளை டிரக்கில் எடுத்துட்டுப் போன டிரைவரைச் சுட்டுட்டு திருடர்கள் பணத்தை எடுத்துட்டுப் போயிட்டாங்க என்ற செய்தி வந்தது. அங்கே வேலைபார்த்த வரைக்கும் பயந்துட்டேதான் டிரக்குல பணத்தை எடுத்துட்டுப் போவேன். என் நல்ல நேரம், எனக்கு எந்தவித ஆபத்தும் நேரவில்லை. அப்படியே ஏதாச்சும் நடந்திருந்தாலும், எங்ககிட்ட லைசென்ஸ் துப்பாக்கி இருக்கும். சுட்டாலும் குற்றம் கிடையாது. வேலை, வீடு, ஓவர் டைம்னு ஓடி ஓடி உழைச்சு சொந்தமா ஒரு வீடு வாங்கினோம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு வேலை, வேலைன்னு ஓடிக்கிட்டே இருந்தவ, இப்ப ரிட்டயர் ஆயிட்டேன்.’’

‘மறுபடியும் நடிக்கிற ஐடியா..?’

‘`இல்லை அம்மாடி. எங்களுக்கு குழந்தைங்க இல்லை. என் அண்ணன் பசங்க, என் தங்கை பசங்களைத்தான் என் பிள்ளைங்களா நினைச்சுக்கிட்டிருக்கேன். அவங்களை எல்லாம்விட்டுப் பிரிஞ்சு, இந்தியாவுக்கு வந்து நடிக்கிறதெல்லாம் நோ சான்ஸ். வீட்டுக்குப் பின்னாடி பெரிய தோட்டம் வெச்சிருக்கேன்.  சீஸன்ல ஆப்பிள், திராட்சைன்னு எக்கச்சக்கமா காய்க்கும். கணவரோடு சேர்ந்து வேட்டைக்குப் போறது, தோட்ட வேலை பார்க்கிறது, சாயங்கால நேரத்துல பழைய தமிழ்ப்படம் பார்க்கிறது, மிச்ச நேரத்துல தூங்குறதுன்னு வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு’’ என்றவரின் குரலில் நிறைவு, நிம்மதி!

ஆ.சாந்தி கணேஷ்

3 கருத்துகள்:

ஆதிமூலம் ஆதிமனிதன் சொன்னது…

எங்கவூர் பெண் ! திறமைசாலி !! வாழ்க பல்லாண்டு வளமுடன் !!! யாதும் ஊரே யாவரும் கேளிர் !!!!

Unknown சொன்னது…

Endrum ungal rasigan pramila avargale komadha Enkulamadha arumiyan movie

பெயரில்லா சொன்னது…

உண்மையை உள்ள படி உரக்கச் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துகள்