வெள்ளி, 23 நவம்பர், 2018

BBC :ராஜபக்ஷ தரப்பினர் வெளிநடப்பு - இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் கூச்சல் .. விடியோ


BBC : மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையாள்வதற்கு நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான பெயர்ப் பட்டியல் 121 வாக்குகளால் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதாகக் கூறிய சபாநாயகர் தெரிவுக் குழுவிற்கு கிடைத்துள்ள பெயர் பட்டியலை சபையில் வாசித்தார்.
மகிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக, தினேஸ் குணவர்தன, எஸ்.பீ.திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச ஆகிய ஐவர் பெயரிடப்பட்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக லக்ஸ்மன் கிரியெல்ல, மனோ கணேசன், ரிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மாவை சேனாதிராஜாவும், ஜே.வி.பி. சார்பாக விஜித்த ஹேரத்தும் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீர்மானிப்பதற்காக தெரிவுக்குழுவை அமைப்பது என நவம்பர் 19ஆம் தேதி கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும், அன்று 5 நிமிடங்களில் சபை ஒத்திவைக்கப்பட்டது.
தெரிவுக் குழுவில் அதிக உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ அணியினர் கோரியிருந்தனர். ஆனால் அரசாங்கமே இல்லாத நிலையில், ஆளும் கட்சியென தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது என ஜே.வி.பி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.




இதற்கமைய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பெயர்ப் பட்டியலை சபாநாயகர் அறிவித்தார்.
இதன்பின்னர் பேசத் தொடங்கிய மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான எம்.பி. தினேஸ் குணவர்தன, சபாநாயகரின் தீர்மானங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினார். "நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பக்கசார்பாக நடந்துகொள்கிறார், அரசாங்கம் இல்லையென சபாநாயகர் அறிவித்ததை ஏற்க முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் தெரிவுக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எமது தரப்பில் நியமிக்கப்பட வேண்டும். சபாநாயகரின் பக்கசார்பான செயற்பாடுகளை ஏற்க முடியாது'' என்று கடும் தொனியில் பேசி அமர்ந்தார்.
இதன்போது மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான எம்.பிக்கள் சிலர் சபையில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். இதன்போது தன்னை பேச அனுமதிக்குமாறு கோரிய ஈ.பி.டி.பி பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தான் ஆளும் தரப்பில் அமர்ந்திருந்தாலும், தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் வந்ததால், தன்னையும் தெரிவுக்குழு உறுப்பினராக பெயரிட வேண்டும் எனக் கோரி அமர்ந்தார்.
இதன்பின்னர் பேசிய மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான பந்துல குணவர்தன எம்.பி, ''நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக கூறுவதை நிராகரிக்கிறோம். மகிந்தவை பிரமராக ஏற்குமாறு கோருகிறோம். அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட வேண்டாம் என சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறோம். நிலையிற்கட்டச் சட்டத்தின்படி நடந்துகொள்ள சபாநாயகர் கடமைப்பட்டுள்ளார்'' என்று கூறி அமர்ந்தார்.




இதனையடுத்து பேசிய ஜேவி.பி. தலைவர் அநுரகுமார திஸநாயக்க, ''14ஆம் தேதி அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டது என்றும் அரசாங்கம் இல்லை என்றும் நீங்கள் இந்த சபையில் அறிவித்துள்ளீர்கள். காட்டுச் சட்டத்தை அமல்படுத்த இடமளிக்க முடியாது'' என்று கூறினார்.
இதன்பின்னர் உரையாற்றிய விமல் வீரவங்ச, "அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. அவநம்பிக்கைப் பிரேரணையை நிறைவேற்ற சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவை பின்பற்றப்படவில்லை.'' என்று கூறினார்.
இதனையடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட ஆரம்பித்த நிலையில், மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் வெளிநடப்புச் செய்தனர்.
இதன்பின்னர் எழுந்த ரணில் விக்ரமசிங்க தரப்பிலுள்ள அஜித் பி பெரேரா, அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில், இரண்டு பிரதான கட்சிகளுக்கு தலா ஐந்து உறுப்பினர்கள் வீதமும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த இருவரும் நியமிக்கப்பட்ட இந்த தெரிவுக்குழுப் பெயர் பட்டியல் நியாயமானது எனக் கூறினார். எனவே, இதற்கான அங்கீகாரம் பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு அஜித் பி பெரேரா கேட்டுக்கொண்டார். பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துமாறு லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. வலியுறுத்தினார்.
இதன்போது மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான எம்.பிக்களில் பெரும்பாலானவர்கள் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
இதன்போது எழுந்த மரிக்கார் எம்.பி, "மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அரசாங்கம் ஒன்று இல்லையெனக் சபாநாயகர் அறிவித்துள்ளீர்கள். ஆனால் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரை 'ஆளும் கட்சி' என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இது சபாநாயகரின் தீர்மானங்களுக்கு எதிரானது எனவும், இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்" எனவும் கூறினார்.
10.45 மணியளவில் பெயர்களுடன் கூடிய இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான எம்.பிக்கள் ஒருசிலர் மட்டும் சபையில் அமர்ந்திருந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 10.50 அளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட ஐவரின் வாக்களிக்கும் இலத்திரனியல் கட்டமைப்பில் சிக்கல் இருந்தது. எனவே அவர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கமைய 116 பேர் இலத்திரனியல் முறையிலும் ஐந்து பேர் பெயர் அழைத்தும் மொத்தமாக 121 வாக்குகள் பெறப்பட்டன. இதன்படி சபாநாயகர் அறிவித்த தெரிவுக்குழுவிற்கான பெயர்ப் பட்டியலுக்கு சபையின் அங்கீகாரம் கிடைத்தது.
இதன்பின்னர் நாடாளுமன்றம் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு கூடுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இதனையடுத்து எழுந்த ஜே.வி.பி. எம்.பி விஜித ஹேரத், "இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினால் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அரசியல் நெரக்கடியை தீர்க்க இந்தச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என யோசனையொன்றை முன்வைத்தார்.
இதனை ஆதரித்த ஜே.வி.பி கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்ற ஆரம்பித்த நிலையில், மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான எம்.பிக்கள் அனைவரும் வெளியேறியிருந்தனர். சபை அமர்வுகள் தொடர்ந்து நடைபெற மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதில் கருத்து தெரிவித்த உதய கம்பன்பில எம்.பி, "அரசாங்கமாக எங்களை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், சபாநாயகரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
எனினும், சபை அமர்வுகளை சபாநாயகர் தொடர்ந்து முன்னெடுத்தார்.

கருத்துகள் இல்லை: