dinamalar.com : தலைநகர் சென்னையில், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர். பைக் ரேஸில் பெண்களையும் ஊக்கப்படுத்தி, அட்டூழியத்திற்கு வழிவகுப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில நாட்களாக, விலை உயர்ந்த பைக்குகளில் வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகின்றனர்.
பறிமுதல்
சில நாட்களுக்கு முன், பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், 'பேரிகார்டு' எனும் இரும்பு தடுப்பு கம்பிகளை இழுத்து சென்று, தீப்பொறி பறக்கவிட்டு, பைக் ரேஸ் வாலிபர்கள் அட்டூழியம் செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசாரின் கண்ணில் மண்ணை துாவி, பைக் ரேஸில் ஈடுபட்ட எட்டு பேரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்; விலை உயர்ந்த எட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் தொடர்ந்து, வாலிபர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பைக் ரேஸில் இளம்பெண்கள் தற்போது ஈடுபட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எண்ணுார் விரைவு சாலை - தாழங்குப்பம் கடற்கரை அருகே, 'யமஹா ஆர்15, கே.டி.எம்' உள்ளிட்ட விலை உயர்ந்த பைக்குகளில், 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள், சமீபத்தில் பைக் ரேஸ் செய்துள்ளனர்.
அடாவடி
பின் சக்கரத்தின் பிடிமானத்தில், முன் சக்கரத்தை துாக்கியபடி, பல மீட்டர் துாரத்திற்கு, சிலர் பைக் ஓட்டியுள்ளனர். அவர்களின் பின்னால் தோழிகள் அமர்ந்திருந்தனர். சில இளம்பெண்கள், அதிக எடை உடைய பைக்குகளை அதிவேகத்தில் தனியாகவே ஓட்டியுள்ளனர்.
அவர்கள், சாலையில் பாம்பு வளைந்து செல்வதுபோல் ஓட்டியது, பைக்குகளில் நின்றபடி ஓட்டியது, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை நிலைகுலைய வைத்தது. இந்த பைக் ரேஸ் அராஜக த்தை வீடியோவாக எடுத்து, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த பைக்குகளில், பதிவெண் கிடையாது; சில பைக்குகளில் பதிவெண் இருந்தாலும், அதை டேப் போட்டு மறைத்துள்ளனர்.
'ரீல்ஸ்' மோகத்தால் பைக் ரேஸ் ரோமியோக்களின் அடாவடி அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெண்களும் இதில் ஈடுபட்டுள்ளது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெற்றோர் மீது வழக்கு
சாகசம் என்ற பெயரில் பைக் ரேஸில் ஈடுபட்டோரை கண்டறிந்து, கைது செய்யப்பட்டு உள்ளனர். இது போன்ற செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர் - சிறுமியரை வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், பெற்றோர் மீது கட்டாயமாக வழக்குப்பதிவு செய்யப்படும்.
- அமல்ராஜ், சென்னை போலீஸ் கமிஷனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக