திங்கள், 1 மார்ச், 2021

திமுக - இ யூ முஸ்லிம் லீக் 3 தொகுதிகளும், ம நே ம கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக அணியில் முதல் தொகுதிப் பங்கீடு!
minnambalam : திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இன்று முஸ்லிம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீனும், மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் தங்களது குழுவினருடன் இன்று(மார்ச் 1) திமுக அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது உடன்பாட்டில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர். வெளியே வந்த காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாங்கள் கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் நின்றோம். எனவே அதே தொகுதிகளைக் கேட்டோம். ஆனால் திமுக அதிக தொகுதிகளில் நிற்க வேண்டிய சூழ் நிலை உள்ளதால் 3 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள்.கையெழுத்துப் போட்டுள்ளோம். எங்கள் ஏணி சின்னத்தில் தான் நிற்போம்.அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை" என்றார்.

மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசுகையில், "நாட்டு நலன் கருதி தியாக மனப்பான்மையோடு திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை"என்றார்.

மமகவுக்கு வக்ஃப் போர்டு வாரிய தலைவர் பதவியும், சிறுபான்மை ஆணைய தலைவர் பதவியும் தருவதாக திமுக வாக்களித்துள்ளது. அதன் அடிப்படையில் மமக உதயசூரியன் சின்னத்தில் நிற்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக திமுகவினர் சொல்கிறார்கள்.

-ஆரா

கருத்துகள் இல்லை: