வெள்ளி, 5 மார்ச், 2021

கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுத் தாக்கல்

குமரியில் பிரியங்கா காந்தி : போட்டியிட விருப்ப மனு!

 minnambalam : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் எம்பி விரும்ப மனுத் தாக்கல் செய்தார்.தமிழகத்தில் கிடைத்த ஒரு தொகுதியான கன்னியாகுமரியை பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரசிடம் பறிகொடுத்தது. இந்நிலையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்நிலையில் பறிகொடுத்த தொகுதியைத் தன்வசப்படுத்த பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 

ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய திட்டமே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை மீண்டும் கைப்பற்றி நிலைநாட்டுவது என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில். அதன்படி கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை குமரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல்.

காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க இன்று கடைசி நாளாகும்.

இந்த சூழலில் இன்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், உத்திரப் பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தார்.

இது குறித்து அவர், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் பிரியங்கா காந்தி தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 தேர்தலின் போதே, குமரி மக்களவை தொகுதிக்கு, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வலிமையான வேட்பாளர் வேண்டும். இங்குப் பிரியங்கா காந்தி, போட்டியிட வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிரியா

கருத்துகள் இல்லை: