திங்கள், 16 நவம்பர், 2020

திமுக திராவிடம் இரண்டையும் கெட்ட வார்த்தைகளைப் போல ஆக்கி .. சிறுத்தைகளும் தீச்சட்டிகளும் புலிப் படைகளும் கடித்துக் குதற சாதிய வன்மம் ...

Kathir RS : · எங்கள் ஊரில் சாதிய வேறுபாடுகள் பெரிதாக இருந்ததில்லை. இருந்த வேறுபாடுகளும் திமுகவின் வரவால் களையப்பட்டது. அனைத்து சாதிகளும் அண்ணே..தம்பி..அய்யா..என்று அழைத்து மகிழ்ந்ததும் அவர்களின் பிள்ளைகள் மாமா மாப்ள சித்தப்பா பெரியப்பா என அழைத்து உறவு கொண்டாடிக்கொண்டதும் வெகு இயல்பாக நடந்தன. எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கான நிலம் ஒரு திமுக ஆதரவாளரால் 1970 களில் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் ஊரில் எல்லோரும் ஆண்பெண் வேறுபாடின்றி குறைந்த பட்சம் ஆரம்பப் பள்ளியை படித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
படிப்பை சாதி இன வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்ததில் எங்கள் ஊர் திமுக்காரர்களின் பங்கு மிகப் பெரியது.
சாதி பற்றி பேசுவதையும் நினைப்பதையும் அவர்கள் அவமானமாக கருதினார்கள்.
இப்படி திமுகவை தூக்கிப்பிடித்து கட்சி வளர்த்த எங்கள் தாத்தன் தகப்பன் தலைமுறையினர் 1990 வாக்கில் வயோதிகம் எய்தி செயல்பாடுகள் குறைந்து மறையத்தொடங்கினர்.
2000 ஆம் ஆண்டிற்கு பிறகு பரம்பரை திமுகவினர் கூட அதிமுகவிற்கு தாவினர்.
எங்கள் ஊர்த் தலைவராக மதிக்கப்பட்டவர் கூட தன் வீட்டு சூரியன் கேட் சூரியன் சுவர் ஓவியம் ஆகியவற்றை இரட்டை இலையாக மாற்றினார். காரணம் இரட்டை இலை அவரது பாதுகாப்பு கவசமாக மாறியிருந்தது.
குடும்ப அழுத்தங்களால் வலுக்கட்டாயமாக அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டியதாகிவிட்டதே என புலம்பிய 70 வயது பெரியவர் ஒருவரை நான் என் கண்ணால் கண்டிருக்கறேன்.
ஊர் எல்லையிலிருந்த திமுக அதிமுக கொடிகள் பழையதாகிவிட்டிருக்க..
புதியதாக சிறுத்தைகளும் தீச்சட்டிகளும் புலிப் படைகளும்
எழுச்சி பெற்று கொடிக்கம்பங்களை நடத்தொடங்கினர்.
இது 2004 சுனாமிக்கு பிறகு இன்னும் தீவிரமடைந்தது.
2010 க்கு பின் ரெட்டை மெழுவர்த்திகளும் இதில் சேர்ந்து கொண்டன.
இந்த சந்தடியில் திமுகவின் கொள்கை மனிதர்களும் அவர்களின் வாரிசுகளும் அமைதியாகி விட்டனர்.அல்லது ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர்.
இருப்பவர்களும் அண்ணா பெரியார் கலைஞர் என்பதை பேசியோ பரப்புரை செய்தோ நான் கண்டதே இல்லை.
திமுகவைப் பற்றி இணையத்தில் பேசுகிறோம்.
திமுக தலைவர்களும் திமுக ஆதரவாளர்களும் பேசும் காணொலிகள் நிறைய கிடைக்கின்றன.
ஆனால் இவையெல்லாம் ஊர்புறங்களில் உள்ள மக்களிடம் சேர்வதில்லை.
ஊர் புறத்தில் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் கூட முக நூல் யூட்யூப் களை தேடி வந்து எதையும் பார்ப்பதில்லை.
தானாக ப்ளே ஆகும் ஷேர்சாட் டிக்டாக் மாதிரி ஆப்களின் வீடியோக்களையே அதிகம் பார்க்கின்றனர்.அவற்றில் நிறைந்து கிடப்பது திமுக பற்றிய கேலிகளே.
இவையெல்லாம் பரம்பரை திமுகவினரைத் தவிர புதிய திமுக வாக்காளர்களை வரவிடாமல் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
திமுக திராவிடம் இரண்டையும் கெட்ட வார்த்தைகளைப் போல ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
எங்கள் ஊரிலுள்ள சாதிய தொகுப்புகளை இன்னார் இன்ன கட்சி என்று தெளிவாகச் சொல்லக் கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
அந்த தொகுப்புகளில் கலந்து வாழும் பிற சாதிகள் அச்சத்தில் வாழவேண்டிய சூழலும் உருவாகிவிட்டன.
நிலம் வரப்பு வேலி சாலை கால்நடைகள் என ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களை கடித்துக் குதற சாதிய வன்வம் தொகுப்பு மெஜாரிட்டிகளிடம் கணன்று கொண்டிருக்கிறது.
திராவிடத்தை கைவிடும் சமூகத்தின் நிலை எப்படியாகும் என்பதற்கு எங்கள் ஊரை நான் ஓர் உதாரணமாகப் பார்க்கிறேன்.
உங்கள் ஊர் எப்படி?
உண்மையை எழுதுங்கள்..!
கதிர் ஆர்எஸ்
16/11/20

கருத்துகள் இல்லை: